Sunday, October 31, 2010

swades; கலைத்துவமும் மண் வாசனையும்


மோகன்  பார்கவா  அமெரிக்காவில்  நாஸாவில் பணி புரியும்  ஒரு விஞ்ஞானி. தன் குழந்தைப் பருவத்து வளர்ப்புத் தாயான காவிரியம்மாவின் நினைவு காரணமாக இந்தியாவுக்கு வருகிறார். உத்ரபிரதேசத்தில் உள்ள அழகிய வறிய கிராமம் தான் சரன்பூர்.  அங்கு மின்சாரம் கூட இல்லை.நாஸாவில் பணிபுரியும் விஞ்ஞானியின் ஊரில் இதுதான் நிலமை.இது மோகனின் உணர்வைப் பாதிக்கின்றது. தனது அறிவனால் ஊருக்கு மின்சாரம் பெற்றுத் கொடுக்கிறார்.

இதுதான் ஸ்வாதேஸின் சுருக்கம் .Lagaan ,Jodha akbar போன்ற படங்களைத் தந்த  Ashutosh Gowariker இன் கலைத்துவம் மிக்க படைப்புதான் ஸ்வாதேஸ். சில படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லும் அனுபவத்தைத் தரக் கூடியவை. அந்த வரிசையில் இந்தத் திரைப்படத்தையும் சொல்லலாம்.

கல்வியில் சிகரத்தை அடைபவர்கள் எங்கெங்கோ தங்கி விடுகின்றனர். அவர்கள் வாழ்ந்த மண்னையும் அதன் வாசனையையும் மறந்து விடுகின்றனர்.  அறிவுஜீவிகளுக்கும் அவர்களது சொந்த மண்னுக்கும் இடையில் உள்ள இடைவெளியையும் அதன் பாதிப்புக்களையும் ஸ்வாதேஸ் தன் கலைத்துவம் மிக்க மொழியில் இயல்பாகப் பேசுகிறது.


சொந்த ஊரின் தூசி படிந்த, மறையாத நினைவுகளை அதன் பெறுமதியை தன் சினிமா மொழியால் ஸ்வாதேஸ் இயல்பாகப் பேசுகிறது.நமது வருகையை யாரோ எதிர்பார்த்திருக்கிறார்கள்.அதற்காக அவர்கள் காலம் தோறும் காத்திருக்கிறார்கள் எனும் சோகம் படம் முழுக்க எம்மைத் துரத்துகின்றது.

மோகன் சரன்பூருக்கு வரும் போது அவருக்கு வழிகாட்ட வாகனத்தில் ஏறிக் கொள்பவரது பாத்திரம் மனதுக்குள் இன்னும் சுவாரஷ்யமாகத் தங்கியிருக்கின்றது. அவரது ஆடலும் பாடலும் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை மிகச்சிறப்பாகப் பொருந்தியிருக்கின்றது.கவித்துவம் ததும்பும் காட்சிப்படுத்தலும் இசையும் ஒன்று சேரும் போது ஸ்வாதேஸ் அற்புதமான அனுபவத்தை உருவாக்குகின்றது.

எந்த உயரத்தில் இருந்தாலும் பறவை தன் கூடு நிலத்தில் இருப்பதை நினைவு வைத்துக் கொள்வது போல எந்த உயரத்தில் இருந்தாலும் சொந்த நாட்டையும்,ஊரையும் நினைவில் வைத்துக் கொள்வதோடு அதற்காக உழைக்கவும் வேண்டும் என்பதே  ஸ்வாதேஸ் சொல்லும் அழுத்தமான கருத்தாகும்.

 
                                               ஸ்வாதேஸ் நீங்களும் பார்க்கலாம்...






1 comment: