Sunday, October 31, 2010

swades; கலைத்துவமும் மண் வாசனையும்


மோகன்  பார்கவா  அமெரிக்காவில்  நாஸாவில் பணி புரியும்  ஒரு விஞ்ஞானி. தன் குழந்தைப் பருவத்து வளர்ப்புத் தாயான காவிரியம்மாவின் நினைவு காரணமாக இந்தியாவுக்கு வருகிறார். உத்ரபிரதேசத்தில் உள்ள அழகிய வறிய கிராமம் தான் சரன்பூர்.  அங்கு மின்சாரம் கூட இல்லை.நாஸாவில் பணிபுரியும் விஞ்ஞானியின் ஊரில் இதுதான் நிலமை.இது மோகனின் உணர்வைப் பாதிக்கின்றது. தனது அறிவனால் ஊருக்கு மின்சாரம் பெற்றுத் கொடுக்கிறார்.

இதுதான் ஸ்வாதேஸின் சுருக்கம் .Lagaan ,Jodha akbar போன்ற படங்களைத் தந்த  Ashutosh Gowariker இன் கலைத்துவம் மிக்க படைப்புதான் ஸ்வாதேஸ். சில படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லும் அனுபவத்தைத் தரக் கூடியவை. அந்த வரிசையில் இந்தத் திரைப்படத்தையும் சொல்லலாம்.

கல்வியில் சிகரத்தை அடைபவர்கள் எங்கெங்கோ தங்கி விடுகின்றனர். அவர்கள் வாழ்ந்த மண்னையும் அதன் வாசனையையும் மறந்து விடுகின்றனர்.  அறிவுஜீவிகளுக்கும் அவர்களது சொந்த மண்னுக்கும் இடையில் உள்ள இடைவெளியையும் அதன் பாதிப்புக்களையும் ஸ்வாதேஸ் தன் கலைத்துவம் மிக்க மொழியில் இயல்பாகப் பேசுகிறது.


சொந்த ஊரின் தூசி படிந்த, மறையாத நினைவுகளை அதன் பெறுமதியை தன் சினிமா மொழியால் ஸ்வாதேஸ் இயல்பாகப் பேசுகிறது.நமது வருகையை யாரோ எதிர்பார்த்திருக்கிறார்கள்.அதற்காக அவர்கள் காலம் தோறும் காத்திருக்கிறார்கள் எனும் சோகம் படம் முழுக்க எம்மைத் துரத்துகின்றது.

மோகன் சரன்பூருக்கு வரும் போது அவருக்கு வழிகாட்ட வாகனத்தில் ஏறிக் கொள்பவரது பாத்திரம் மனதுக்குள் இன்னும் சுவாரஷ்யமாகத் தங்கியிருக்கின்றது. அவரது ஆடலும் பாடலும் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை மிகச்சிறப்பாகப் பொருந்தியிருக்கின்றது.கவித்துவம் ததும்பும் காட்சிப்படுத்தலும் இசையும் ஒன்று சேரும் போது ஸ்வாதேஸ் அற்புதமான அனுபவத்தை உருவாக்குகின்றது.

எந்த உயரத்தில் இருந்தாலும் பறவை தன் கூடு நிலத்தில் இருப்பதை நினைவு வைத்துக் கொள்வது போல எந்த உயரத்தில் இருந்தாலும் சொந்த நாட்டையும்,ஊரையும் நினைவில் வைத்துக் கொள்வதோடு அதற்காக உழைக்கவும் வேண்டும் என்பதே  ஸ்வாதேஸ் சொல்லும் அழுத்தமான கருத்தாகும்.

 
                                               ஸ்வாதேஸ் நீங்களும் பார்க்கலாம்...






Saturday, October 30, 2010

கண்ணீரின் வலி




மேசையிலிருந்த மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது.சுவரில் மாட்டியிருந்த கலண்டரின் தாள்கள் சரசரவென கிழிக்கப்பட்டன. மேசை யிலிருந்த  DVD யை எடுத்தான். முகப்பில் இருந்த  வாசகத்தை  வாசித்ததும் கண்களுக்குள் நீர் துளிர்த்தது. அதை ஒரு பக்கமாக வைத்துவிட்டு விம்மி விம்மி அழுதான். கண்ணீரோடு நிறைய சோகம் கரைவதுபோல இருந்தது. இருந்தாலும் அழுது முடித்த பிறகும் சோகம் இருக்கத்தானே செய்கிறது. பிறகு சிரித்துக்கொண்டு எழுந்தான். வீட்டுக்கு முன்னால் வந்து வராந்தாவில் நடக்கலானான். 

முற்றத்து ரோஜாச் சேடியில் அழகாப் பூத்திருந்த ஒரு பூவைப் பறித்து நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் அதை செடியில் பொருத்த முயற்சித்து கசக்கி எறிந்தான். அவனால் இப்பொழுது எதுவுமே செய்ய முடியவில்லை. அதிக பிரமை பிடித்தவன் போல முகம் வெளிரிக் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென்று இப்படி மாறினான்.இது அவனின் நேற்றைகளது பிரதிப்பலிப்புகளாக இருக்க வேண்டும்.விழிநீரின் ஈரம் கன்னத்தில் உறைந்திருந்தது.
 
இப்போது  அவன் என் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றான். மஜீத் உள்ளே வா' என்றேன். அவன் எதுவும் பேசவில்லை. அவன் சந்தோசமா இருக்கிறான் என்பதற்கான எந்த தடயமும் முகத்தில் இல்லை. கையைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தேன். என் தோளில் சாய்ந்து கொண்டே என்னைப் போன்றவர்களுக்கு எஞ்சியிருப்பது கண்ணீரும்,சோகமும் தான்டா என்று கவிதை மொழியில் பேசினான். 



தலையை வருடி எனது அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தினேன். அறைச்சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை அவதானித்தான். அது ஒரு ஓவியக் கண்காட்சியிலிருந்து வாங்கி என் நண்பன் ஒருவன் எனக்குப் பரிசாகத் தந்தது. ஒரு ரோசாப் பூவிலிருந்து உதிரம் கசிவது போன்றிருந்தது. அது கலையுணர்வு அதிகமாக இருக்கும் என்னையும் வெகுவாக  ஈர்த்த ஓவியம். 

டேய் அந்த பூவைப் பார்த்தாயா செடியிலிருந்த முள்ளு குத்தியிருக்கு. அதுதான் இரத்தம் வடியுது. ஒரே செடியில தானே முள்ளும் இருக்கு மலரும் இருக்கு, பிறகு எதற்கு இத்தனை கோபம். முள்ள விட ரோசா அழகு என்பதாலதானே' என்று நிதானமாக கேட்டான். இல்ல மஜீத் ரோசாவ விட முள்ளுதான் ரொம்ப அழகு, நாங்க யாருமே இதக் கண்டுக்கொள்ரதில்ல என்று சொன்ன போது என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

என் வீட்டுக்கு வந்தால் வழமையாக கேட்கும் நினைவுகள் நெஞ்சில் பெருகி வர...என்று ஆரம்பிக்கும் பாடலை ஒலிபரப்பினேன். பிறகு Head phone எடுத்துக் கைகளில் கொடுத்தேன். தலை வரை உயர்த்தி விட்டுக் கீழே வைத்தான். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. எத்தனை முறை இந்தப் பாடலைப் போட்டாலும்    Head phone ஐ  கழட்டவே மாட்டான். 

இன்று கேட்க முன்னமே வைத்து விட்டான். எனக்குப் பயமாக இருந்தது. மஜீத் உனக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்தான்; அறை அதிரச் சிரித்தான்; உள்ளே இருந்த என் தாய் ஓடி வந்து பார்த்து விட்டுச் சென்றாள். அவன் தொடர்ந்து சிரித்தான். உனக்கு பைத்தியம்டா என்றான். மெல்ல மெல்ல சிரிப்பு அடங்கியது; அப்படியே உறங்கிப் போனான். எனக்கு வியர்த்துக் கொட்டியது. அவனை எழுப்ப வேண்டாம் என்று தாயிடம் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்கு ஓடினேன்.

வீட்டு முற்றத்திலே சோகத்தோடு அமர்ந்திருந்த மஜீதின் தங்கை சுஹா என்னைக் கண்டவுடன் ஓடி வந்தாள். அந்தப் பிஞ்சின் கன்னங்களிலும் கவலையின் ரேகைகள் பயணித்திருந்தன.

நாநா என்னோட கோவமா இருக்கு பேசவேயில்ல. ஏன் என்னோட பேசுரதில்ல. அவளது வார்த்தைகள் தடைப்பட்டன. சுஹா தற்போது 5ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறாள். மஜீதை தவிர இப்போதைக்கு அவளுக்கு வேறு யாருமில்லை. அவளுக்கு வயது ஒன்றாக இருக்கும் பொழுது தாயை இழந்துவிட்டாள். பாவம் அவள் தாய் பாசத்தை எந்தக் கடையில் போய் வாங்குவாள். அவளைப் போலதான் மஜீதும் அவனுக்கு ஆறுதல் என்றிருப்பது என்னைவிட பல படிகள் மேலாக இருக்கும் அவனது நண்பன் ரிபா தான். இந்த உலகில் ஒவ்வொரு ஜீவனுமே அன்பை யாசித்துக் கொண்டுதான் இருக்கின்றன. கிடைக்காதபோது மனது படுகிறபாட்டை வார்த்தைகளால் எப்படி சொல்ல முடியும். 


சுஹாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். அவன் அறைச் சுவர் முழுக்க எழுதியிருந்தான். அதற்கு  கிறுக்கல்கள் என்று தலைப்பிட்டிருந் தான். அவன் கண்ணாடி உடைந்திருந்தது; எனது  DVD  பரிதாபமாக ஒருமூலையில் இருந்தது. அவன் அறைக்குள்  நிலவிய அமைதி என் இதயத்தை  ஏதோ செய்வதுபோல் இருந்தது. மேசையிலிருந்த dairyஎடுத்து அவசர அவசரமாக புரட்டினேன்.

என் இதயம் அழுகிறது
துடைக்கவும் தெரியாமல்
துடைக்க எவருமில்லாமல்
தனிமையில் கரைகிறது
ஆத்மாக்கள்,,
ஒரு துளிப் பாசம் தர
நீயுமில்லாமல் இருந்திருந்தால்
என்றோ நான் இறந்திருப்பேன்

என்ற கவிதையை பலமுறை எழுதியிருந்தான். இன்னும் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன. இன்னும் புரியாதபடி ஏதேதோ எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொன்றையும் பார்க்கும் போது எனக்கு கவலையும், அழுகையும் ஒரு சேர வந்தது. இவன் ஏன் இப்படி ஆனான்? என்ற கேள்வியும் சுஹாவின் மௌனமும் சில நிமிடங்களுக்கு நீண்டன. பிறகு அவனது தலையனைக்கடியில் இருந்த கவிதை அந்தக் கேள்விக்கு பதில் சொல்லியது. 

அவனுக்கும் ரிபாக்குமிடையில் இருந்த நட்பு காத்திரமானது; கனதியானது. ரிபாக்கு ஏதுமென்றால் இவன்தான் முதலில் பதறுவான். நல்ல நட்பின் நங்கூரம் என அவர்களை நான் புகழ்ந்துரைத்துள்ளேன். ஆனால் இவனுக்கு தேவையான பாசத்தை அவன் கொடுக்கவில்லை. அதில் பல இடை வெளிகளை விட்டிருக்கிறான். அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிந்திருந்தன.

தாயா,தந்தையா,நண்பனா..
நினைத்திருந்தேன் ஆனால்
இப்போதுதான் புரிகிறது..
என் தாயின் கபன் துணியில்
என் நிம்மதியும் சேர்த்துத்தான்
சுற்றப்பட்டதென்று...

வாசித்து முடித்தபோது எனக்குள் இருந்த நிம்மதியும் விடைபெறும் போலிருந்தது. அவனது மனம் வெறுமையாகிப்போனதுதான் இத்தனைக்கும் காரணமென்பது இப்போது புரிந்தது.

சுஹாவோடு என் வீடு வந்து சேர்ந்தேன். மஜீத் என் computer ஐ  on பண்ணியிருந்தான். Headphoneல் பாடல் இலேசாக கேட்டுக்கொண்டிருந்தது. என் தாய் தேநீர் கொண்டு வந்தாள். என் தாயைப் பார்த்து ஒங்களப் பாக்குற நேரம் என்ட உம்மாதான்…’ வார்த்தைகள் தடைப்பட்டன.

நீங்க மூனு பேரும் எனக்கு பிள்ளைகள்தான் என்றுஅவன் முதுகை தட்டிவிட்டு என் தாய் சொல்ல சுஹாவும் பின்னால் ஓடினாள். திடீரென்று அவன் சிரித்தான். முன்னைய தடவையை விட இப்போது சிரிப்பு பலமாக இருந்தது. அவன் சிரிப்பொலிகளில் சோகம் கலந்திருந்தது. Headphoneஐ கழட்டி எரிந்தான். மேசையிலிருந்த தேநீர் கோப்பையை வீசினான். என் DVD அல்பத்தை தூக்கி நிலத்தில் அடித்தான். Computer  ஐ குத்தப் பார்த்த போது கையைப் பிடித்து கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்தேன். என் பிடியிலிருந்து நழுவி கட்டிலில் விழுந்தான். 

இப்போது அவன் உறங்கிப் போகவில்லை. சுஹாவை அழைத்து இறுக அணைத்துக் கொண்டு அழுதான். என் கைகளைப் பற்றினான். நான் கையை எடுத்துக்கொண்டேன்.என் கையில் என்ன விஷமா இருக்குது' என்று கேட்டான். நான் துடித்துப்போனேன். ஏன் அவன் அப்படிக் கேட்டான். எனக்குள் இனந் தெரியாத சோகம் ஊடுருவியது. மனசெல்லாம் கனத்தது. இப்போது நாங்கள் எல்லோரும் அழுதோம்; என் தாய் ஆறுதல் சொன்னாள். என் கண்களை முந்தானையால் துடைத்து விட்டாள். என் அழுகை ஒருவாறு நின்றது. ஆனால் அவர்கள் இருவரும் அழுவதை மட்டும் என் தாயால் நிறுத்த முடியவில்லை.






Friday, October 29, 2010

பரீட்சை



பரீட்சை எல்லாவற்றையுமே

ஸ்தம்பிக்கச் செய்துவடுகிறது.

பத்திரிகை வாசிப்பதை

புத்தகம் படிப்பதை

பாடல் கேட்பதை

கணணிக்கு முன் அமர்வதை

காலாற நடப்பதை                                             

பரீட்சை எல்லாவற்றையுமே

ஸ்தம்பிக்கச் செய்துவடுகிறது.

நிம்மதியைப் பறித்துக் கொண்டு

சதாவும் அலைய விடுகிறது.                      

சுதந்திரத்தை

காவு கொண்டுவிடுகிறது.

பரீட்சை

வாழ்வை அப்பட்டமாக

வெறுக்க வைத்துவிடுகிறது.






Thursday, October 28, 2010

Heal and you will be healed





அண்மையில் வெளிவந்துள்ள sami yusuf  இன் wherever you are  என்ற இசைத் தொகுப்பு அற்புதமான மாதிரிகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. இதனை அவரது இசைப் பயணத்தின் அடுத்த கட்டமாகவும் பார்க்கலாம்.


அவரது கடந்த காலப் பாடல்களோடு ஒப்பிடுகின்ற போது இந்தப் தொகுப்பு பல வடிவங்களில் வேறுபட்டிருப்பதனைக் காண முடிகின்றது. முன்னைய பாடல்கள் சில வகையான கருத்துருக்களையே கொண்டிருந்தன. ஆனால் இந்தத் தொகுப்பு புதிய concept களோடு வித்தியாசமான இசைக் கோர்வைகளையும் கொண்டுள்ளது. அந்த இசையின் நுட்பங்களும் நுணக்கங்களும் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன.


healing என்ற பாடல் அற்புதமாக அமைந்திருக்கின்றது.காடசிப்படுத்தலின் அசைவுகள் மனதையும் அசைத்து விடுகிறது.எமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை இழுத்தெடுப்பது போல இருக்கின்றது.நாம் செய்யும் தர்மம், உதவிகள் எமக்கு நிவாரணியாக அமைகின்றன என்ற இஸ்லாமியத் தத்துவத்தை சொல்வது தான் இந்தப் பாடல்.இதனை இஸ்லாமிய மாற்றீட்டிற்கான மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.




It’s so hard to explain


What I’m feeling

But I guess it’s ok

Cause I’ll keep believing

There’s something deep inside

Something that’s calling

It’s calling you and I

It’s taking us up high

Healing, a simple act of kindness brings such meaning

A smile can change a life let’s start believing

And feeling, let’s start healing

Heal and you will be healed

Break every border

Give and you will receive

It’s Nature’s order

There is a hidden force

 Pulling us closer

                                                                       It’s pulling you and I

                                                                       It’s pulling us up high

                                                                       Hearts in the hand of another heart 
                                                                       and in God’s hand are all hearts

                                                                       An eye takes care of another eye 
                                                                       and from God’s eye nothing hides

                                                                       Seek only to give and you’ll receive
                                                                       So, heal and you will be healed 


 
              http://www.youtube.com/watch?v=Tug63dI4MEY



 

Wednesday, October 27, 2010

'இர ஹந்த யட' வெளிப்படையின் அழகியல்



இரவில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காயம்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் எதி;ர்பாராத விதமாக சந்தித்துக் கொள்கின்றனர். இராணுவ அதிகாரியைக் காப்பாற்ற கோப்ரல் முயற்சிக்கின்றார். இராணுவ அதிகாரியின் இறுதி நேரப்புலம்பல் கோப்ரலின் மனதை அசைக்கின்றது. அவர் மேல் கௌரவம் ஏற்படுகின்றது. அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சி பயனற்றுப் போகிறது.


இராணுவ அதிகாரி தனது மனைவி கிருபா மீது அளவு கடந்த காதல் கொண்டிருப்பதாகவும் அவளை எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் தனது காதலை அவளிடம் தெரியப்படுத்துமாறும் கூறுகிறார்.இராணுவ அதிகாரியின் மரணத்திற்கு தானும் பொறுப்பச் சொல்ல வேண்டுமென கோப்ரலின் மனசாட்சி அவரை உறுத்துகிறது. பின்  அவரது வாழ்க்கைப் பின்னனியைத் தேடிச் செல்கிறார்.அதன் மூலம் அவர் ஆறுதலைத்  தேடுகிறார்.
இந்த இரண்டு இராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மனித நேய செயற்பாட்டையே 'இர ஹந்த யட' பேசுகின்றது.




கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் மனித வாழ்க்கையை வெகுவாகப் பாதித்த ஒன்று. போரென்பது ஏராளமான கலைப் படைப்பிற்கு கருவாக அமைந்துள்ளது. போர் எல்லோரையும் யோசிக்கவும் பேசவும் வைத்தது.எல்லோரது கற்பனையையும் கலைத்து விட்டது.

பென்னடிக் ரத்னாயக தயாரிப்பில் வெளிவந்துள்ள 'இர ஹந்த யட' போரை மையமாக வைத்து இலங்கையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் சற்று வித்தியாசமானது.போரைப் பற்றி மட்டும் பேசாமல் அதற்குப் பின்னுள்ள வாழ்வியலையும் பேசுகின்றது.


குருதிக்குள் கரைந்து போன வாழ்வியலையும் மனித நேயத்தையும் அது பக்கச்சார்பில்லாமல் பதிவு செய்கிறது.இது தான் படத்தின் முக்கிய அம்சம். எல்லா மனிதர்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவே விரும்புகின்றனர். அது எல்லோருக்கும் பொதுவானது.மனிதமென்பது எம்மைச் சூழவுள்ள எல்லாத் தடைகளையும் உடைத்து மற்றவர்களுடனும் எம்மை உறவாட வைக்க வேண்டும். இந்த உண்மையை 'இர ஹந்த யட' அழுத்தமாகச் சொல்ல முனைகின்றது.


படம் எடுக்கப்பட்டுள்ள விதம், இசை, தொகுப்பு என மொத்தமாகப் பார்க்கின்ற போது அவை எந்த சலிப்பையும் ஏற்படுத்த வில்லை. ஆனால் இரண்டு மணி நேரம் மிக நீண்ட நேரம் ஓடியது போல் இருந்தது. யுத்தக் காட்சிகள் கூட அலுப்பில்லாமல் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன.


போர்கள் நிம்மதியற்ற உலகைத்தான் உருவாக்குகின்றன.அவை எல்லா சந்தோஷங்களையும் பறித்து விடுகின்றன.காயங்களையும் கண்ணீரையுமே பதிலிகளாகத் தருகின்றன. இந்த உணர்வு படம் முழுக்க இழையோடுகின்றது.ஒரு இராணுவ வீரனால் தன் மனைவிக்கு நிறைவானதொரு முத்தத்தைக் கூட கொடுக்க முடியாதனெ;பது புரிகின்றது.எல்லா இன்பங்களையும் குண்டுகளும் துப்பாக்கிகளும் பறித்து விடுகின்றன.


இந்தப் போரினால் நிம்மதியை இழந்தவர்கள்,துக்கத்தைச் சுமந்தவர்கள், வாழ்வைத் தொலைத்தவர்கள் எத்தனைபேர்களோ...? குரூர யுத்தத்தின் கனல் படிந்த நினைவுகளை படம் மீட்டிப் பார்க்க வைக்கிறது.


போராடிய இரு தரப்பினையும் யாருக்கும் வீர வணக்கம்  வைக்காமல் நியாhயமான முறையில் பென்னட் காட்டியிருக்கிறார்.மனிதமற்றவர்களும் மனிதமுள்ளவர்களும் எந்தத் தரப்பானாலும் இருக்கத்தான் செய்வார்கள்.
'சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் இந்த நாடு சொந்தம் அம்மா...' என்றொரு வசனம் படத்தில் வருகிறது.மேலும் ஒரு முஸ்லிம் இராணுவ வீரணும் புலிகளால் கைது செய்யப்படடிருப்பதும் அவர் தொழுகையில் ஈடுபடும் காட்சியும் வருகிறது.அதனைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.
மொத்தத்தில் ஒரு சமனிலைப் பேணுதலை படத்தில் கடைசிவரை அவதானிக்க முடிகிறது.போரினால் எல்லோரும் பாதிக்கப்பட்டாhகள்.மனித உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை.இனங்களைப் பொறுத்து அவை ஒருபோதும் வேறுபடுவதில்லை.கண்ணீரைத்தான் எல்லாக் கண்களும் சிந்துகின்றன.அந்த உண்மை வெளிப்படையானது.

 சூரியனுக்கும் சந்திரனுக்கும் கீழுள்ள யாவும் வெளிப்படையானவை.யாரும் அதனை மறைக்க முடியாது.அந்த மறையாமையின் அழகியல் தான் 'இர ஹந்த யட'.

Saumya liyanage, chandani senawirathneஆகியோரின் நடிப்பு காத்திரமாக இருக்கின்றது. udara rathnayake வின் நடிப்பு திருப்தி தருவதாக இல்லை .கிருபாவாக நடிக்கும் அறிமுக நடிகை tasha dharshani ஒரு தமிழ்ப் பெண்ணுக்குரிய எல்லாச் சாயல்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.இருப்பினும் நடிப்பில் போதாமைகள் இருக்கின்றன.


மனித நேயமும் அன்பும் தான் இந்த வாழ்வின் ஆதாரங்கள்.இலங்கை அதனைத்தான் தேடுகின்றது.சூரியனுக்கும் சந்திரனுக்கும் கீழுள்ள யாவும் அன்பினாலும் மனித நேயத்தினாலும் நிரம்ப வேண்டும்.சுதந்திரமும் ஐக்கியமும் அப்போதுதான் அர்த்தப்படும்.முதலில் எல்லோரையும் மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும்.மனிதத்தினாலும் அன்பினாலும் இந்தப் பூலோகம் நிரம்ப வேண்டும் இதுதான் 'இர ஹந்த யட' சொல்லும் வெளிப்படையான அழகியல்.

Tuesday, October 26, 2010

meherbaan....



நீ மொழி
நான் அர்த்தம்
நீ அழகு
நான் நாணம்
நீ இல்லாமல்
நான் நிலமற்றவன்
நீ இல்லாமல்
நான் வானமற்றவன்

நீதான் நதி
நான்தான் சங்கமம்
நீதான் புதிய காலம்
நான் புதிய பருவம்


நீ இல்லாமல்
நான் நிலமற்றவன், வானமற்றவன்...

நீ புகழுரை
நான் பணிவு
நீ உள்ளங்கை
நான் அலங்காரம்
நாங்கள் ஒன்றென்றும் எப்போதும் ஒன்றாய் நிற்போம் என்றும்
இன்று பிரகடணம் செய்வோம்...
புயல் அடித்தாலும் நாங்கள் தடுமாற மாட்டோம்..
வர்ணமற்ற இந்த உலகை அன்பினால் வர்ணமாக்குவோம்...
நம்பிக்கையின் விளக்கை ஒளிர வைப்போம்.
அதன் ஒளி எல்லா வீடுகளுக்கும் பரவட்டும்.

நீ காட்சி
நான் பார்வை
நீ கடல்
நான் கரை
நீ மொழி
நான் அர்த்தம்
நீ அழகு
நான் நாணம்


'அதா' படத்தில் வரும் மெஹருபா... என்ற பாடல் மிதக்கும் அனுபவத்தைத் தரக்கூடியது.
அந்த அனுபவம் அதனை மொழிபெயர்க்கத் தூண்டியது...
                                                                           2010 10 27

ஓரத்து வாழ்க்கை...



  நான் கடக்கும் இந்த நகரத்தில்
  எங்கோ ஒரு குழந்தை
  சிலேட்டில்
  ஆணியால் எழுகிறது
  விடுதலைஎன்றும்
  கடவுள்என்றும்


மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதை வரிகளை முப்பதிற்கும் மேற்பட்ட தடவைகள் வாசித்தாயிற்று. இதன் சொற்களின் வலி மனதுக்குள் ஒரு பாதிப்பை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கின்றது. எல்லோருமே விடு தலைக்காகவும் இறைவனின் அன்பிற்காகவும் பிரார்த்திக்கிறார்கள். வாழ்க்கையின் ஓரத்தில் நிற்பவர்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் சதாவும் உச்சரிக்கிறார்கள். தம் வெயில் நிரம்பிய வாழ்விலிருந்து நிழலைத் தேடவே எப்போதும் முயற்சிக்கிறார்கள். 

  ஒவ்வொருவரும் தம்மனசோடு வலிகளையும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு வலிகளே வாழ்க்கை. ஆனால் ஒவ்வொருவரதும் வாழ்க்கை பற்றிய பாடல் வித்தியாசப்படுகிறது. எல்லோர் மனசும் மொழிகள் அற்ற ஒரு துக்கத்தைப் பின்னிக் கொண்டே இருக்கின்றது. அந்தத் துக்கம் வாழ்வின் வசீகரத்தை அழித்து விடுகிறது.
அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நிறையப் பேர் இந்த உலகை நொந்து கொள்கிறார்கள். தம் வசதியற்ற வாழ்வில் எல்லா இன்பங்களும் தீர்ந்து போய் விட்ட தாக நினைக்கின்றனர். மற்றவர்களின் அங்கீகாரமற்ற பார்வையினால் அவர்கள் எப்போதும் வாழ்வின் விளிம்பிலேயே நின்று கொள்கின்றனர்.


அல்லாஹ் அனைவரையும் ஒரு ஆன்மாவிலிருந்தே படைத்தான். தங்களுக் குள் அன்பைப் பரிமாறிக் கொண்டு புரிந்துணர்வோடு வாழவே குலங்களையும் கோத்திரங்களையும் ஆக்கினான். ஆனால் இன்று ஒவ் வொருவரும் தனித் தனி மனிதர்களாக மாறிவிட்டார்கள். 

அழும் குழந்தையின் கண்ணீரை அங்கீகரிக்காதது போல நிறையப் பேர் இந்த உலக வாழ்வில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். துக்கம், புறக்கணிப்பு, அவம திப்பு போன்ற சொற்களோடு வாழ அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
உணவு வாங்க காசு இல்லாதவர்கள், மாற்றி உடுக்க ஆடை இல்லாதவர்கள், இன்னும் புத்தகப்பை வாங்காத மாணவர்கள், வீடு இல்லாதவர்கள், விரும்பி யதை வாங்கிக் கொள்ள முடியாதவர்கள் என்று இந்த உலகின் எல்லா ஊர் களிலும் எத்தனையோ பேர் கண்ணீரோடு வாழ்கின்றனர். 

நகர வீதிகளில் அன்றாடம் பயணிக்கும்போது எதிர்ப்படும் தெருவோர மனிதர்களின் நிழல் முகங்கள் மறைவதே இல்லை. அவர்களது முகத்தில் அப்பிக் கிடக்கும் துக்கம் மனதைப் பாதிக்காமல் விட்டதில்லை. வீதியோரங்களில் உறங்கும் மனிதர்களை சில வேளைகளில் பார்த்துக் கொண்டே இருந்த துண்டு. அவர்களுக்கு வீதியே வீடாகிப் போயிருக்கிறது. அந்த வீட்டில் புல் வெளி இல்லை... பூக்கள் இல்லை... வானமே அவர்களுக்குக் கூரை.  

வீதியும் ஒரு இலக்கியம் போலத்தான். கதாபாத்தி ரங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. கதை நகர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சிறுகதைக்கான, ஒரு திரைப்படத்திற்கான, நாவலுக்கான கருக்கள் தெருவெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. 

ஒரு வெயில் பொழுதில் ரயிலினுள் கண்ட காட்சி இன்னும் ஞாபகப் பரப்பில் அழியாமல் இருக்கின்றது. தன் அம்மாவிடம் கடலை கேட்டு அடம்பிடித்தது ஒரு குழந்தை. அவள் அதன் கைகளைத் தட்டிவிட்டு அழைத் துச் செல்கிறாள். அவள் மனதில் இருக்கும் வேதனை அந்தக் குழந்தைக்கு நிச்சயம் புரியப் போவதில்லை. இதுபோல பொம்மை கேட்டு, ஐஸ்கிறீம் கேட்டு கதறும் எத்த னையோ குழந்தைகளின் கைகள் தட்டப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. 
பேரூந்தும் ரயிலும்       நகர்ந்தாலும்    அவர்கள்    பற்றிய துக்கத்தின் ரேகைகள் மட்டும் நகராமல் அப்படியே இருக்கின்றன. தன் நாய்க் குட்டியை காரில் தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு செல்லும் குழந்தையைப் பார்க்கும் ஆயிரம் சிறுவர்கள் இன்னும் கார்களில் பயணித்ததே இல்லை. எத்தனையோ பேர் தனது சொந்த வாகனங்களில் மிகுந்த சொகுசோடு பயணிக்கி றார்கள். வெயிலில் கால் கடுக்க பஸ்ஸுக்காக நின்றருக்கும் மனிதர்கள் அவர்களது பார்வைக்குப் படுவதே இல்லை. 

எல்லோருக்குள்ளும் நிச்சயம் ஆசைகள் இருக்கும். இந்த உலகில் ஒரு மத்திமமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அனைவரும் நினைக்கின் றனர். இருப்பினும் வருமானம் அவர்களுக்கு இடம்கொடுப்பதில்லை. வருமா னம் இருப்பவர்கள் அதைச் செய்து கொடுக்க முன்வருவதுமில்லை. 

இதனால் அவர்கள் வாழ்வின் வசீகரத்தை தொலைத்து விட்டார்கள். அந்த வசீகரத்திற்குப் பதிலாய் அவர்களுக்குள் இடம்பிடித்திருக்கும் அடர்த்தியான துக்கம் அநேகரால் புரியப்படாத ஒன்று. அவர்கள் தங்களது எல்லாக் கனவுக ளையும் வீட்டின் உடைந்த கட்டிலுக்கு கீழேதான் வைத்திருக்கிறார்கள்.

ஏழைகள் எனும்போது இந்த உலகம் அவர்களைத் தாழ்த்தியே பார்க்கிறது. யாரும் அவர்களை மதிப்பதில்லை. செல்வந்தன் என்ற ஒரே காரணத்தால் அயோக்கியனையும் இந்த உலகம் அங்கீகரித்து கௌரவிக்கிறது. ஆனால் ஏழையாக இருக்கும் எத்தனையோ மனிதர்களை, அவர்களது புன்னகையை இந்த உலகம் புறக்கணிக்கின்றது. கௌரவமான ஆடைகளில் மனிதம் இல்லை என்பது அதற்குத் தெரியாது. 

வறுமையில் வசிப்பவர்கள், நிரந்தர நோயாளிகள், அன்பை இழந்தவர்கள், தொழி லற்றவர்கள், இறைவனின் நெருக்கத்தை விட்டும் தூரமானவர்கள் என்று அனேகர் வாழ்க்கையின் ஓரத்தில்தான் நிற்கின்றனர். அவர்கள் இந்த உலகை கருணையற்றதாகக் காண்கின்றனர். கடவுள் நம்பிக்கை அற்றவன் கடவுளைத் திட்டுகிறான். மற்றவன் விதியின் வசம் என விட்டு விடுகிறான்.
தம் வாழ்வை சூழ்ந்திருக்கும் துக்கத்திலிருந்து விடு தலை பெறவே எல் லோரும் முயற்சிக்கின்றனர். துக்கம் ஒரு ஆயுள் கைதியைப் போன்று அவர்களுக்குள் குந்தியிருக்கின்றது. இந்த உலகம் அவர்கள் மீது அன்பைக் காட்ட மறுப்பதுதான் அந்தத் துக்கத்தை உருவாக்குகின்றது. "என் வாழ்வின் எல்லாக் கேள்விகளுக்குமான பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். நான் தனிமையில் இருப்பேனா, நீங்களும் என் பக்கத்தில் இருப்பீர்களா? எனக்காக பிரார்த்தனை செய் சகோதரனே!" என்ற ஆங்கிலப் பாடல் வரிகள் செவிக்குச் சமீபமாகக் கேட்கின்றது. 

இப்படி எத்தனையோ கேள்விகளோடு தன் தனிமையைப் பார்த்து பயப்படும் மனிதர்கள் வாழ்வை அச்சத்தோடே பார்க்கின்றனர். வர்ணம் மறைந்து போய் வாழ்க்கை அவர்களுக்கு கறுப்புவெள்ளையாகவே காட்சியளிக்கின்றது.
மனித அழிவுகளுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் செலவிடும் தொகையை மனிதர்களது வாழ்வுக்குச் செலவிட்டால் என்ன என்று தோன்றுகிறது. 

இந்த உலகில் தனக்கு என்று வாழ்வதை விட பிறருக்காக வாழ்வதில்தான் ஆத்மதிருப்தி இருக்கின்றது. கண்ணீரோடு இருப்பவர்களை சிரிக்க வைப்பது தான் இன்றைய உலகின் மிகப் பெரிய விடுதலை. இறைவன் யாரையும் புறக் கணிப்பதில்லை. அவன் அன்பு நிறைந்தவன். இந்த வாழ்க்கையைக் கொண்டு அவன் மனிதர்களைச் சோதிக்கிறான். மற்றவர்களைப் பரிசோதிக்கிறான். 

வாழ்வின் ஓரத்தில் இருப்பவர்களை நாம்தான் வாழ்க்கைக்குள் அழைக்க வேண்டும். மற்றவர்களுடன் அன்பாக இருப்பதற்கு யாரும் காரணம் தேடத் தேவையில்லை. மழை அனைவருக்கும் பொழிகிறது. காற்று யாவருக்குமே வீசுகிறது.

எல்லோரும் தம் பக்கத்தில் இருப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும். அவ மதிக்கக் கூடாது. இந்த அவமதிப்பில் எல்லா சந்தோசமும் நசுக்கப்படுகின்றது. தெருவோர மனிதர்கள் இன்னும் வாழ வேண்டிய மீதி வாழ்க்கை இருக்கிறது.
இனி குழந்தைகள் விரும்பியதைக் கேட்டு நம்பிக் கையோடு கைகளை நீட்டட்டும். புன்னகையில் இந்த உலகம் நிறைந்திருக்கும்.




மரணம் ஒரு பக்கத்து நண்பன்...




    என்னதான் உறுதியாக நம்பியிருந்தாலும் மரணம் அடிக்கடி மறந்தே போகிறது... மையத்து வீடுகளில் முழுக் கபனில் முகம் மட்டும் பார்க்கும் போதும் மையவாடியில் கபுருகளுக்கு மத்தியிலிருக்கும் போதும் ஏற்படும் உணர்வு, வாழ்க்கையில் அன்றாட வீதிகளில் நடக்கும் போதும் ஏனோ தொலைந்துவிடுகிறது.



இருட்டு பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் படர்ந்த நிலவற்ற பொழுதொன்றில் மண்ணறைக்கு முன்னால் நின்றபோதுதான் தொடை நடுங்கத் தொடங்கியது...

இந்த மரணம் எல்லாக் கனவுகளையும் பறித்துக்கொள்ளும்... எல்லா நிம்மதிகளையும், ஆடம்பரங்களையும் மண்ணோடு சேர்த்துப் புதைத்துக் கொள்ளும்... இந்தப் பூமியின் மொத்த அழகிலிருந்தும் அழைத்துச் சேன்று ஒரு கருப்புக் குழிக்குள் வைத்துவிடும் என்பது புரிந்தது.

எவ்வளவுதான் திரும்பிப் பார்த்தாலும் மரணம் ஒரு சொட்டாவது தெரிவதில்லை. நம் நிழல்களுக்குள் பிணைந்து அது சதாவும் நம்மைத் துரத்துகிறது. எம் எல்லாத் தெருக்களிலும் நம்மோடு சேர்ந்து அதுவும் சமாந்தரமாக நடக்கிறது. ஆத்ம நண்பன் போல் பக்கத்திலே அமர்ந்திருக்கிறது. நிழல் மாதிரி கூடவே வந்தாலும் வேண்டாத பொழுதொன்றில் அது அழைத்துக் கொண்டு தான் போகப் போகிறது.

நினைக்க நினைக்க மனது நடுங்குகிறது. மலக்குல்மௌத் உயிரைப் பித்தெடுக்கும் நாளில் ஏற்படப் போகும் வலியின் கனதி உலகிலுள்ள எந்த நோவுக்கும் ஈடாகாது. வலிக்க வலிக்க... கதறக் கதற... அவர் உயிரை பித்துக் கொண்டு போவார்... சிறுபிள்ளையெனக் கெஞ்சினாலும் அவர் விடவா போகிறார்...? சின்னச் சின்னக் கத்திகள் கொண்டு உடல் முழுக்க யாரோ கீறுவது போல் இருக்கிறது. இந்த வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை இதுவரையாரும் சோல்லவில்லை.

இந்த வாழ்க்கைக்குப் பிரியாவிடை கொடுப்பது ஓர் அழகிய நிகழ்வுதான். படைத்தவனின் மகிமை இங்குதான் புரிகிறது.

குளிப்பாட்டி... ஆடைஅணிவித்து... தொழுகை நடத்தி... பாவங்களுக்காப் பிரார்த்தித்து... சில சோட்டுக் கண்ணீர்களோடு இதுவரையில் மெத்தையில் இருந்தவனை மண்தரையில் வைத்து மண்ணால் மூடிவிட்டு வருகின்ற காட்சி பிறப்பைவிடவும் அழகாத்தான் தெரிகிறது. பிறந்தபோது சிரித்து மகிழ்ந்த அதே முகங்களில் கண்ணீரும், கவலையும். சிலபோது புரிகிறது சோகமும் ஒருவகை அழகுதானென.

இருப்பினும் புதைகுழிக்குள் படுவது வேதனைதான் அதில் எந்தச் சுகமும் இருக்கப்போவதில்லை. அங்கு படுகின்ற ஒரு துளி வேதனையாவது வெளியில் இருப்பவர்களுக்குக் கேட்பதில்லையே...! அந்தக் கொடூர நிகழ்வை எப்போது நினைத்தாலும் விழிகளின் தொங்களிலிருந்தும் கண்ணீர்த் துளிகள் உருண்டு வருகின்றன. என்ன சேய... பிறந்தவனெல்லாம் இறந்துதானே ஆக வேண்டும் என்ற நினைப்பில் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது...

இதிலென்ன வேறுபாடு இருக்கிறது. ஒருவன் வாழப் பிறப்பது போல இறப்பும் இன்னொரு வாழ்க்கைக்கான பிறப்புத்தானே. மரணமென்றும் இறப்பென்றும் அழைக்கின்றோம் பெயர்மட்டும் வித்தியாசம். பிறப்பு போல இறப்பும் கொண்டாடக்கூடிய ஒன்றுதான்.. ஏனெனில் அது வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கான இடமாற்றம்.
அது ஒரு முடிவற்ற வாழ்க்கை... எந்தக் கனவுகளையும் கைகளில் ஏந்திக் கொண்டு துயரமில்லாமல் நடக்கலாம்.
ஆனால்ஒன்று, நினைத்தமாதிரி அந்த வாழ்க்கை கிடைப்பதில்லை. போட்டியில் வெற்றி பெறாமல் பரிசு கிடைக்காது. இந்த வாழ்க்கையின் வெற்றியில் தான் மறுமையின் மொத்த நிம்மதியும் தங்கியிருக்கிறது. சுவனம், நரகம் இரண்டிற்குமான பாதையை இறைவன் சொல்லித்தான் தந்திருக்கிறான். நாம் நடப்பதைப் பொருத்து வெற்றியோ தோல்வியோ எழுதப்படுகிறது. படைத்த இறைவனுக்குப் பிடித்தமாதிரி வாழ்பவனுக்கு வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஒரு புதிய தொடக்கமா இருக்கும்.. இல்லாதவனுக்கு அது ஒரு கருப்புப் பக்கமாக இருக்கும்.

மரணம் ஒவ்வொருவரினதும் நெருங்கிய பக்கத்து நண்பன்தான் எப்போதாவது அவன் நிச்சயம் அழைப்பான். அப்போது அந்த அழைப்பை எம்மால் புறக்கணிக்க முடியாமல் இருக்கும். எல்லாக் கனவுகளையும் வைத்து விட்டுப் பிரியவேண்டியதுதான்.

Monday, October 25, 2010

அந்திபடும் நினைவுகள்...


நினைவு-01

"நினைவுகள் கனவுகளைப் போன்றவை. தமக்கென்ற ஒரு பிரத்தியேக விதியில் இயங்குபவை" என்ற எங்கோ வாசித்த வரிகள்தான் நினைவுகளைப் பற்றி எழுத நினைக்கும் போது மேலெழுகின்றது. இதுவரையிலான எல்லா நினைவுகளும் மனதுக்குள் எங்கோ ஒரு தொங்கலில் சேகரமாகியிருக்கின்றன.

எல்லோர் வாழ்க்கையிலும் குழந்தைப் பருவ நினைவுகள் பனிபொழியும் ஒரு காலையின் நினைவு போல எந்த நாளும் வந்து வந்து போகின்றன. குழந்தைகள் மனதின் வசீகரங்கள். இதைத்தான் அல்லாஹ் குழந்தைகள் வாழ்க்கையின் அலங்காரப் பொருட்கள் என்கிறான். உண்மைதான். அந்த வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள்... இருப்பினும் குழந்தைகள் மீதுள்ள பாசம் அணையற்றுத்தான் இருக்கின்றது.

குழந்தைகள் ஒரு சிணுங்கலில், அழுகையில், சிரிப்பில் அனைவரையும் வீழ்த்தி விடுகின்றன; தம்பக்கம் ஈர்த்து விடுகின்றன. அதுதான்; மனசு பிள்ளைகளின் சிரிப்பைத் தட்டிவிடுவதில்லை. அந்தப் பிஞ்சு அனுபவம் வெண்பனிப் படரல் போன்று எப்போதும் குழந்தைகளைக் காணும்போது நெஞ்சுக்குள் இடறுகிறது.

எந்தப் பொறுப்பும் அற்று வாழ்ந்த அந்த சுதந்திர வாழ்க்கையின் படிமங்கள் நினைவுப் பதிவுகளில் இன்னும் உயிர் வாழ்கின்றன. இந்த உலகம் திறந்து வைத்த புத்தகம் போன்றுதான். குழந்தைகள் விரும்பிய பக்கத்தைப் புரட்டுகின்றன. இந்த உலகம் தடைகள் அற்ற ஒரு வெளி. கண்ணுக்கெட்டும் தூரமும் அவர்களதுதான். அவர்களது வாழ்க்கை பற்றிய பாடல் மிக்க இன்பமயமானது.

அப்போது மழலை மொழியின் எல்லாப் பிழைகளும் அங்கீகரிக்கப்பட்டு ரசிக்கப்பட்டன. ஆனால், இப்போது ஒரு வார்த்தையின் உச்சரிப்புப் பிழையும் நகைப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. அழுதுகொண்டே பள்ளி செல்வது... அடம்பிடிப்பது... மழைநீரில் விளையாடுவது... சேற்றில் புரள்வது... எல்லாமே பிரத்தியேக நினைவுகள்தான். மீட்டிப்பார்க்க முடிகிறதே தவிர வாழ்ந்து பார்க்க முடியவில்லை.





நினைவு - 02

ஒரு மஞ்சள் நிற அந்தியில் பாடசாலைக்கு முன் னால் நின்றிருந்த போது, வெள்ளைச் சீருடையோடு மீண்டும் பாடசாலை செல்ல வேண்டும் என்ற எண் ணமே மனதில் தோன்றித்தோன்றி மறைந்தது. வாழ்க்கை அப்போது வெள்ளைதான். அங்குதான் எல்லோரும் அதில் எழுதிக் கொள்கிறார்கள்.

வாழ்வைக் கற்றது அங்குதான். உறவை, நட்பைப் புரிந்ததும் அங்குதான். கறுப்பு வெள்ளை வாழ்வு அங்குதான் வர்ணமாகியது. விழிகளுக்குள் காட்சிகள் தோன்றக் காரணமாய் இருந்த ஆசிரியர்களை மனது நன்றியோடு நினைத்துக் கொள்கிறது. அவர்கள் தந்த அன்பில் மனது இன்னும் நிறைந்திருக்கின்றது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்ளட்டும். அவர்கள் உருவாக்கும் எத்தனையோ மாணவர்கள் அவர்களை விட்டும் எவ்வளவோ போய்விடுகின்றனர்; முன்னேறி விடுகின்றனர். ஆனால், எந்த உயரத்திலிருந் தாலும் அவர்களை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களுக்காகப் பிரார்த்திப்பதுதான் ஒரு மாணவனின் கடமை.

உறவும் நட்பும் பாடசாலையில்தான் துளிர்விடுகின்றது. பொறாமை, கசப்புணர்வில்லாத சுத்தமான உறவு அங்குதான் வலுப் பெறுகிறது. பக்கத்திலிருப்பவன் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறான் என்பது தெரியாமல் உண்மையாகப் பழகும் உறவு அதுதான். அங்கு கிடைக்கும் நல்ல சினேகங்கள்தான் ஆண்டுகளாக நீள்கின்றன.

பாடசாலையின் ஒவ்வொரு இடமும் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கின்றது. பேசிப் பழக தைரியம் தந்த மேடைகள், விளையாடப் பழக்கிய மைதானங் கள், அமர்ந்துபடித்த மேசைகள்... எல்லாம் நேற்றுப் போல் ஞாபகங்களில் நனைகின்றன. ஆயுளில் ஒரு முக்கிய பகுதி அங்குதான் கழிந்திருக்கிறது. வாழ்க்கைக்கு தைரியம் தந்த கனவுகளும், நம்பிக்கைகளும், புது விடியல்களும் பாடசாலை பூமியிலிருந்துதான் புறப்படுகின்றன. கடைசியாகப் படித்த வகுப்பறையும் அதைச் சூழ்ந்த நினைவுகளும் தொலைவில் மங்கலாகத் தோன்றி மறைகின்றன...



நினைவு - 03

பயணங்களின் போது ஜன்னலோர இருக்கை இதமானது. வாழ்க்கை போல எல்லாமே வேகமாக நகரும். பல வருடங்கள் பயணத்தில் கழிந்திருக்கிறது வாழ்வு. தனிமையில் தொடரும் பயணத்தில் வாகனச் சத்தமும் மௌனமும்தான் கடைசிவரை ஒலித்துக் கொண்டிருக்கும். பல மணித்தியாலங்கள் மௌனத்தில் இருப்ப தென்பது வேதனை நிறைந்த ஒன்று. அப்போதெல்லாம் நினைவுகள் அதன்பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும். மலைகள், ஆறுகள், மரங்கள், நுரைக்கும் அலைகள், வெவ்வேறு முகங்கள் என திரும்பத் திரும்ப வந்துபோகும் ஒரே காட்சிகள். "இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை" என்ற அல்குர்ஆன் வசனம் அப்போதெல்லாம் அடிக்கடி மனதில் வந்துபோகும்.


போர்ச்சூழல் மிகுந்த பீதியை உண்டுபண்ணியிருந்த போது கொழும்பு வீதிகளில் அச்சம் சூழ்ந்திருந்தது. எங்கும் குண்டுவெடிக்கலாம் என்ற எச்சரிக்கை ஒரு புது அனுபவத்தை மனதில் உண்டுபண்ணியது. ரயிலின் அறைகள் முழுவதும் ஒருவகை மரண ஓசை காதில் கேட்பது போன்று இருக்கும். அந்த நேரத்தில் நம் பக்கத்தில் குண்டொன்று வெடித்தால் எப்படியி ருக்குமென மனது நினைத்துப் பார்க்கும்.

பயணம் முதிர்ச்சி நிறைந்த ஒரு அனுபவம். அதுவும் ஒரு பாடசாலை போலத்தான். எவ்வளவோ சொல்லித் தருகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் பலமாதிரி யான பயணங்கள். சிலருக்கு வாழ்வே பயணம். இன்னும் சிலருக்கு பயணமே வாழ்வு. பயணம் எங்கள் நினைவுகளை வெளியில் அழைத்துச் செல்கிறது. அந்த நினைவுகள் தண்டவாளங்கள் போல நீள்கின்றன. அதன் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஓடும் ரயிலின் சத்தம் மட்டும் காதோரமாய்க் கேட்கிறது...



நினைவு - 04

புத்தகங்கள் நல்ல நண்பர்கள். அவற்றை நாம் நேசிக்கப் பழக வேண்டும். வாசிப்பின் மீதான காதல் அதிகரிக்கின்ற போதுதான் சிந்தனைகள் பிறக்கின்றன. யாரோ சொன்னதுபோல் ஒரு நல்ல புத்தகம் ஒரு விபத்தைப் போல நம்மைத் தாக்குகிறது. நம்மைச் சூழ இருக்கும் அமைதியைக் குலைக்கின்றது.

புத்தகங்களின் நினைவுகள் உள்ளுக்குள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. காசு கிடைக்கும் போதெல் லாம் புத்தகம் வாங்கலாமென்றே தோன்றுகிறது. அது ஒரு அலாதியான நினைவு; ஆனந்தம். எனக்கென்றால் புத்தகங்களை மிக்க நேர்த்தியாக வைத்துக் கொள்ளத் தான் பிரியம். அதை மடிப்பதையோ அதில் அடையா ளம் இடுவதையோ மனது ஒரு போதும் அங்கீகரிக் காது. ஏனெனில், அப்படிச் செய்வது புத்தகத்தின் ஆன்மாவை காயப்படுத்துவது போலத் தெரிகிறது.

புத்தகங்களுடனான நினைவுகள் வாழ்க்கைப் பயணத்தில் மறக்கக் கூடாத ஒன்று. எம்மை வளர்ப் பதில், எம் சிந்தனையை ஆழப்படுத்துவதில் எம்மை விட அவை எவ்வளவோ உதவியிருக்கின்றன. புத்தகங் கள் எனும்போது "சொர்க்கம் என்பது ஒரு மாபெரும் நூலகமென்றே நான் எப்போதும் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்" என்ற லூயி போர்ஹேயின் வார்த்தைகள்தான் நினைவைத் தட்டுகின்றன.



நினைவு - 05

சில மனிதர்களை மனது எப்போதும் நினைவில் வைத்திருக்கின்றது. அவர்களது நினைவை மீட்டிப் பார்க்கும்போது குளிர்ச்சியாக இருக்கின்றது. எல்லோர் வாழ்க்கையிலும் அப்படியானவர்கள் இருப்பார்கள். நிச்சயமாக அவர்களது நினைவுகள் எம்மையும் பாதிக் கின்றன. அந்த நல்ல உறவுகள் எம் வாழ்க்கை அத்தியா யத்தில் ஒரு நிரந்தரப் பக்கமாகி விடுகின்றன. இன்பத் திலும், துன்பத்திலும், நம் சின்ன அசைவுகளிலும்  எப் போதும் அவர்கள் எம் வாழ்க்கைக்கு சமீபமாகவே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் நிலையான, நீங்காத நினைவுகளில் தங்கியிருப்பவர்கள். அத்தகைய வர்களை மறப்பதும், இழப்பதும் கடினமான ஒன்று.


இப்படியான மனிதர்கள் வெகுசிலராக இருப்பது தான் கவலையைத் தருகின்றது. எல்லோரும் நினை வில் இருந்தாலும் சிலர் மட்டுமே பிரத்தியேக நினைவு களில் இடம்பிடித்து விடுகின்றனர். மேகத்தில் உறைந்த மழைத்துளி போல வாழ்வில் கலந்து விடுகின்றனர்.

புகைப்படங்களைச் சேகரித்து அல்பமாக வைத்துக் கொண்டிருப்பதுபோல மனதும் நினைவுகளால் அல் பங்களை செய்து வைத்திருக்கின்றது. நினைவுகளின் அல்பம் எப்போதும் உயிர்ப்புடனே இருக்கின்றது. சூரியன் எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும் அந்தியில் தான் அது அழகாகத் தெரிகிறது. நினைவுகளும் அது போலத் தான் அந்திபடும்போது இசையில் நனையத் தொடங்கி எப்போதும் ஞாபகப் பரப்பில் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

உங்கள் அன்பிற்கு நன்றி…




வாழ்க்கைக் காகிதம் எப்போதும் வெள்ளையாகத் தான் இருக்கின்றது. அதில் உறவுகள்தான் அழகியலை வரைந்து வண்ணமாக்குகின்றன. மனித வாழ்க்கை யில் எத்தனை வகையான உறவுகள்...பாசம் மனிதனைக் கட்டிப் போட்டிருக் கின்றது. ஒவ்வொரு புன்னகையின் அடியிலும் தெரிகிறது ஒரு அடர்த்தி மிகு அன்பு. இந்த உலகில் எல்லோரும் அன்பின் கைதிகள்தான். யாரும் இன்னும் விடுதலையடையவே இல்லை.


உலகில் மனிதன் கொண்டாடும் எல்லா உறவுகளை யும் நினைக்கையில் ஒருவகை ஆச்சரியமும் அல்லாஹ்வின் வல்லமையும்தான் தெரிகின்றது. அன்பிற்கு இறைவன் அத்தனை சக்தியைக் கொடுத்திருக்கிறான். மனித உறவிற்கு வழங்கப்பட்ட மகத்தான கௌரவமும் அது எல்லா உயிர்களும் அன்பையே பரிமாறிக் கொள்கின்றன. அந்த அன்பின் நிழல் எல்லா உறவுகளிலும் படர்ந்திருக்கின்றது.


அன்பு, பாசம் என்பன கிடைக்கும்போது ஒருவன் அடையும் மகிழ்ச்சி வார்த் தைகளில் அடங்காதது. அதுபோலத்தான் அவை மறுக்கப்படும்போது அடை யும் மனவேதனையும். அன்பு, வலி என்ற இரண்டு சொற்களும் மனித உறவுக ளின் துக்கம், மகிழ்ச்சி என்ற தருணங்களைத் தீர்மானிப்பவை. எல்லா உறவுகளும் இந்த இரண்டில் ஒன்றையே உருவாக்குகின்றன அல்லது பரிசளிக்கின்றன.


நல்ல நோக்கத்திற்காகக் கொள்ளும் நேசம் புனிதமா னது. அதிக அர்த்தம் நிறைந்தது. ஒரு மழைநாளில் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பது போல உன்னதமான தருணம் அது. அந்தத் தீராத பிரியத்தை, நட்பை, சகோதரத்துவத்தை இறைவனும் விரும்புகின்றான். அத்தகைய உறவில் இருப்பவர்கள் ஈமானின் சுவையை உணர்ந்து கொள்கின்றனர்.


எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து எப்போதோ சந்தித்துக் கொண்டவர்கள் இப்போது எப்படியெல்லாம் உறவில் இணைந்திருக்கிறார்கள். சந்திப்புக்கள், கை குலுக்கல்கள், புன்னகைகள் என எல்லாமே பேரின் பத்தை வழங்கு கின்றன. உயிருக்கு நெருக்கமாகிய சகோதரர்கள்... நண்பர்கள்... இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.

எல்லா உறவுகளும் ஒரு அந்நியத்தில்தான் பிறக்கின்  றன. அவை அப்படித் தான் அறிமுகமாகின்றன. கால நகர்வில் ஆழமான வேர்விட்டு, பின் அவை தனித்த நினைவுகளைக் கொண்ட ஒரு கனதியான புத்தகம் போல் ஆகி விடுகின்றன.


உறவும் நினைவுகள் போலத்தான். எவ்வளவு முயன்றாலும் அது தரும் வடுக்களை அழிக்க முடிவதில்லை. எப்போதும் இருந்துகொண்டே இருக்கின் றது. எப்போதும் அது வாழ்வின் ஆனந்தத்தைப் பறித்துக் கொண்டு போகலாம். அதுதான். வாழ்வில் மிகுந்த சந்தோசம் இருப்பதுபோலவே அடர்ந்த துக்கமும் இருக்கின்றது.





நிறையப்பேருக்கு அன்பு என்பது மறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அவர்கள் அதனைக் கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்; தேடிக் கொண்டிருக்கிறார் கள். அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே அதனைச் சுவைக்கவில்லை. பாவம் அவர்கள், எந்தப் பாடசாலையில் போய் அன்பைக் கற்பார்கள்? அன்பு மறுக்கப் படும்போது கிடைக்காமல் போகும்போது வாழ்வின் வசீகரமே செத் துப் போகின்றது. அந்த வாழ்க்கை வரட்சியாகக் காட்சியளிக்கின்றது. ஒரு பேரவலம் மனக் குகைகளில் வந்து குந்திக் கொள்கின்றது. அப்போது இந்த உலகம் பொழியும். எல்லையற்ற கருணையும் இல்லையெனத் தோன்றுகின்றது.


எல்லா உறவுகளும் தூய்மையான அன்பையே பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லோரினதும் பிரார்த்தனை. ஆனால், அது நிகழ்வதில்லை. தாயும் தந்தையும் தன் பிள்ளைக்கு அன்பை வெளிப்படுத்த வேண்டும். குறிப் பிட்ட வயதோடு அது நிறுத்தப்படும்போது குழந்தை ஏக்கத்தையே சுவாசிக் கின்றது.



அன்பை நேரடியாகக் காணும்போது; உணரும் போதுதான் மனிதன்தன் இருப் பின் அங்கீகாரத்தை நம்புகின்றான். நான் நேசிக்கப்படுகின்றேன் என்று ஒரு வன் உணர்வதே ஒரு எல்லையற்ற மகிழ்ச்சிதானே. எல்லோரும் முழுமை யான அன்பை வெளிப்படுத்தத் தவறுகின்றனர் என்றே எண்ணத்தோன்றுகின் றது. பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள்... என எல்லோரும்தான்.


ஒருவர் தனது நேசத்தை வெளிப்படுத்துவதுதான் உறவின் அடிப்படை. அதனைத்தான் இறை தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் ஒருவரை நேசிப்பதா யின் அவரிடம் அதனைத் தெரியப்படுத்தி விடுங்கள்என்றார்கள். இது ஒரு தூய்மையான நேசத்திற்கான மிகச் சிறந்த வரையறை. நாம் அந்த நேசத்திற் குச் செலுத்தும் மரியாதை.


மனிதர்களையும், மனதுகளையும் எதிர்கொள்வ தென்பது மிகப் பெரிய கலை. யாருமே அதனை முழுமையாகக் கற்றுக்கொள்ளவே இல்லை. கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் இல்லை. எல்லோரும் அவரவர் இயல் பிற்கேற்ப பழகவே விரும்புகின்றனர். தான் கொண்டிருக்கும் கருத்திற்கும் உணர்விற்கும் ஏற்ப ஏனையோரையும் இசைவாக்க முயற்சிக்கின்றனர். அதாவது அடுத்தவர் மனதைப் புரிய விரும்புகிறார்களே இல்லை. அதிகம் படித்தவர்கள்தான் இங்கே பிழைக்கிறார்கள்.


இப்படிச் சொல்லும்போது எல்லோரும் ஒன்று போல இல்லையே என்று சொல்லத் தோன்றும். உண்மையில் எல்லோரும் வேறுவேறுதான். அதனால் தான் உறவுகளில் கவனம் தேவைப்படுகின்றது. ஏனெனில், வாழ்க்கைப் பாதை யிலும் நினைத்தவாறு பயணிக்க முடியாது




மனதுதான் எல்லோரையும் வேறுபடுத்துகின்றது. சிலர் நுண்ணுணர்வுகள் கொண்ட மனிதர்கள். அவர்கள் எப்போதும் மனித உணர்வுகளை உணர்வுபூர்வ மாகவே பார்க்கின்றனர். அப்படித்தான் பழகுகின்றனர். ஒரு நுளம்பைக் கூட கொல்லலாமா, வேண்டாமா என்று யோசிப்பவர்கள். வார்த்தைகள், நடத்தைகள் என எல்லாமே அவர்களிடத்தில் பாதிப்பு ஏற்படுத்துபவை. ஒரு சின்ன நிகழ்வு அவர்களுக்குள் ஆயிரம் நினைவலை களை உருவாக்கி விடுகின்றது. அதிலிருந்து விடுபடவே பல மணி நேரம் எடுக்கும். 


  இறை தூதர் (ஸல்)அவர்களை நினைக்க ஆச்சரியம் தான் மேலிடுகின்றது.  எல்லோரையும் அணைத்துக் கொள்பவராகவும், யாரைவிட்டும் விலகாதவராக வும் இருந்திருக்கிறார்கள். அவரது தோழர்கள் யாரும் அவரைப் பகைத்துக் கொள்ளவில்லை, வெறுக்கவுமில்லை. அவர் தன்னோடுதான் அதிகம் நேசம் கொண்டுள்ளார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். இறைதூதர் போன்ற ஒரு நண்பர் இந்த உலகில் யாருக்கு வாய்க்க முடியும்?!



 நண்பன் என்பவன் பக்கத்து இருக்கையில் இருப்பவன் அல்ல. எந்த நேரத்தி லும் புறக்கணிக்காமல் இருப்பவன். தன் தேவையின் போது மட்டுமல்லாமல் என் றைக்கும் நினைவில் வைத்திருப்பவன். அவனால்தான் நட்பின் சுகந் தத்தை அழுகாமல் பாதுகாக்க முடியும்.


தாயின் மடியினைப் போலத்தான் நல்ல நண்பன். அவனாலும் நிச்சயம் அந்த ஆறுதலைத் தர முடியும். ஒருவனை சிரிக்க வைக்க முடியும். புறக்கணிப்பின் உலகிலிருந்து ஒருவனை விடுவிக்க முடியும். தன் எல்லையற்ற கரு ணையை அவனுக்குக் கொடுக்க இயலும். இறைதூதர் அவர்கள் கறுப்பு நிற அடிமையான ஸாஹிர் இப்னு ஹராமை சந்தையில் கட்டிய ணைத்து இவரை யார் வாங்குவீர்கள்? என்றபோது அவர் எத்தனை மகிழ்ச்சியை உணர்ந்திருப்பார். என்னை யார் வாங்குவார்கள்? என்ற அவரது ஏக்கக் குரலுக்கு நீ அல்லாஹ்விடத்தில் விலை கூடியவன்என்ற பதிலால் ஒரு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்த உத்தமர் சுவர்க்கத்தில் என்னையும் அப்படி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனது பிரார்த்திக்கின்றது.

இடைவெளிகள் இல்லாத உறவுதான் கௌரவமானது. என்றைக்கும் வாழ் பவை. தன் அன்பை யாரும் மிகைத்துவிடக் கூடாது என்பதற்காக உறவில் இடை வெளிகளை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. முழுமையான அன்பு அல்லாஹ்விடத்திலே இருக்கி றது. யாராலும் அதை மிகைக்க முடியாது.


சிலர் தம் வாழ்வின் சந்தடிகளுக்குள்ளும் அவர்களது நண்பர்களை நினைவில் வைத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்களோ சின்னச் சின்ன அவசரங்களில் கூட அவர்களை மறந்துவிடுவார்கள். ஏதோ ஒரு விட்டுக் கொடுப்பில்தான் உறவுகள் வாழுகின்றன.

நம்பிக்கை, வாக்குறுதி, உறவு, இதயம் என்ற நான் கையும் யாரும் வாழ்க்கை யில் உடைத்து விடவே கூடாது. அவை உடைபடும் போது எந்த சப்தத்தை யும் ஏற்படுத் துவதில்லை. ஆனால், அவை எண்ணற்ற வலிகளை உண்டுபண்ணுகின்றனஎன்ற எங்கோ வாசித்த வரிகள் நினைவில் நெருடுகின்றன.


உறவுகளின்போது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய வார்த்தைகள் இவை. நல்ல நண்பர்கள் உறவின் மிகப் பெரிய சொத்துக்கள். எத்தனையோ உறவுகள் இருந்தாலும் நட்பைத்தானே எல்லோரும் என்றைக்கு மான உறவாகக் காண்கிறார்கள். நட்பு ஒரு தீராத பிரியம். தயவுசெய்து நல்ல நண்பர்களை யாரும் இழந்து விட வேண்டாம். நல்ல நண்பன் எப்போதும் தன்னைவிட மேலாகவே தன் சக நண்பனைப் பார்க்கிறான். அவனுக்காக நிறைய விடயங்களை இழக்கிறான். இருந்தாலும் நல்ல நட்பு இலகுவில் கிடைப்பதில்லை.  அது வாழ்வின் அழகிய தரிசனம்தான்.


பலர் தமது நட்பை இதயத்திற்கு வெளியில்தான் வைத்திருக்கிறார்கள். சுய நலத்தில் கிளைத்த நட்பு ஒருபோதும் நீடிப்பதில்லை. தேவை முடியும் போது மறந்துபோகும் இழிவான உறவு அது. நல்ல நட்பு எல்லாத் தருணங்களிலும் நண்பனை நினைவில் வைத்திருப்பது. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றெ னப் பார்ப்பது. தன் வெற்றியை அவனுக்குப் பரிசளிக்க விரும்புவது.

நட்பு, சகோதரத்துவம் என எல்லா உறவுகளிலும் மற்றவரை மதிப்பதும் அங்கீகரிப்பதும்தான் மிக முக்கியமானவை. அதுதான் உறவின் எல்லையைத் தீர்மா னிப்பது. மரியாதையும் அன்பும் இல்லாதபோது அந்த உறவின் எல்லை மிகக் குறுகியதாகிறது. சில நாட்களுக்குள் உடைந்து போகின்றது.
அன்பைப் வெளிப்படுத்தும் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் போலி ருக்கிறது. உறவுகளில் யாரும் உடைந்து போகக் கூடாது. வீட்டுக்கு வந்து செல்பவரை வழியனுப்பிவிட்டு மறந்துபோகாமல் அவர் போய்ச் சேரும் வரை நினைவில் வைத்திருப்பதுதான் உண்மையான அன்பின் அடையாளம். நல்ல நண்பர்கள், சகோதரர்கள் இலகுவில் கிடைப்பதில்லை. அவர்களை இழப்பதும் அப்படித்தான். செழியனின் இந்த வரிகள்போல...

நல்ல நண்பர்களைத் தேடி
மலைகளின் உயரத்திற்குச்
செல்ல வேண்டியிருக்கிறது
அவர்களை இழக்கும்போது
மலைகளையே சுமக்க வேண்டியிருக்கிறது