Monday, January 31, 2011

ஒரு குட்டிக் கதை...



தாய் ஒட்டகம் ஒன்றும் அதன் குட்டி ஒட்டகம் ஒன்றும் ஒரு மாலைப் பொழுதில் பச்சைத் தளிர்களை மேய்ந்தவாறு உலாத்திக் கொண்டிருந்தன.குட்டி ஒட்டகம் படு சுட்டி. ஓயாமல் வாய் சதா கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டேயி ருக்கும்.அன்றைக்கும் அப்படித்தான்.

'அம்மா!ஏனம்மா நமக்கு மட்டும் முதுகில் திமில் எதற்கு இருக்கு'?

தாய் எப்போதும் பொறுமையாக பதில் செல்லும்.

'நாமெல்லாம் இயல்பாக பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலை வனத்தில் தண்ணீர், பாலைவச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினந்தோறும் கிடைக்காது!கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகித்துகக் கொண்டால், தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு'

குட்டி திரும்பவும் கேட்டது.'அப்போ நமக்கு ஏன் கண் இமை கெட்டியாக இருக்கு? மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கு?மத்த மிருகங்களுக்கு அப்ப டியில்லையே? அது ஏன்?


தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது

'பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும்.அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண் ணுலயும் மூக்குலயும் மணல் போயிடும்.அதனாலதான் நமக்கு அப்படியொரு மூடி இருக்கு.'

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது.'இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதற்கு?


'அது கண்ணு...மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்' பொறுமையாகப் பதில் சொன்னது அம்மா ஒட்டகம்

'பல்லும் நாக்கும் இவ்வளவு தடியா கெட்டியா இருக்கே..அது ஏன்' இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது'பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சுவைத்துத் தின்ன வேண்டாமா?

இப்போது குட்டி பட்டென்று கேட்டது.'இதையெல்லாம் வைத்துக் கொண்டு இந்தக் குளிர்ல லண்டன் மிருகக்காட்சி சாலையில நாம ரெண்டு பேரும் என்ன செய்துகிட்டிருக்கோம்?

இது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பு மலரில் வாசித்தது.

Monday, January 17, 2011

நீராலானது...கவிதை அனுபவம்


மனுஷ்ய புத்திரனின் இந்தப் புத்தகத்தை பல தடவைகள் படித்தாயிற்று.அவரது கவிதைகள் படிக்கப் படிக்க ஒரு சுவாரஷ்யத்தைத் தந்து கொண்டே இருக்கின்ற அதேவேளை நம்மை அந்தரத்திற்கு அலைத்துச் செல்கின்றன. உன் னோடிருத்தல், தன்னோடிருத்தல்,பிறரோடு இருத்தல் என மூன்று வகைகளில் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  அன்பே இக் கவிதை களின் ஆதார நீரோட்டமாக இருக்கின்றது.


'ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்  டமாக அமைந்திருக்கின்றது.

 அது ஏற்புக்கும்  மறுப்புக்குமிடையே இடை யறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கின்றது... எப்போதும் மறுக்கப்படுகிற கரைந்துகொண்டிருக்கிற உண்மையில் இருக்கிறதா இல் லையா? ஏன்று கூடத்தெரியாத காதல்களைப் பற்றி எழுதுகிறவனாக இருக்கிறேன் என்பதால் இத்தொகுப்பு 'நீராலானது' என்று பெயரிடப்படுகிறது. அதன்பின் நீர்மையில் நிரைந்திருக்கும் ஈரமும் பரிவும் நிச்சயமின்மையும் நிராகரிப்பும்தான் என்னைப் பற்றியும் இந்த வாழ்க்கையைப் பற்றியும் நான் திரும்பத் திரும்ப அறியக் கூடியதாக இருக்கிறது.'  என முன்னுரையில் மனுஷ்ய புத்திரன் சொல்வது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

நீராலானது என்ற சொல் முதலில் எனக்கு அரூபமாக இருந்தது.எனவே முதலில் அந்தக் கவிதையைத் தேடினேன்.


வெறுப்பைப் போல திடமாக
வஞ்சகம் போல சந்தேகிக்க முடியாத
தீமையைப் போல தொடர்ந்து வருவதாக
கசப்பைப் போல நெஞ்சோடு அடைப்பதாக
குற்றத்தின் கறைகளைப்போல கழுவித் தீராததாக
ஒரு பொய்யைப் போல வாக்குறுதி அளிப்பதாக
இல்லை
உனதிந்தப்
பிரியங்கள்

நிசப்தமற்ற சலனங்களை இந்த வரிகள் உண்டுபண்னி விடுகின்றன.அதன் கடைசி வரிகள் கனத்த பாரத்தை தருகின்றன.

......................

ஒரு மழையைப் போல
சேமிக்க முடியாத
சம்பவங்களின் நாளை
நினைத்தபடி...

இன்னுமொரு கவிதை இப்படி முடிகின்றது.எல்லா மழையையும் சேமிக்க முடியாதுதான்.நினைவுகளும் அப்படித்தான்.



 

 


 















விடை கொடுக்கும் போது...எனும் கவிதை அற்புதமாகத் தோன்றுகின்றது.

விடை கொடுக்கும் போது
உன்முகத்தில் நிழல்கள் விழுவதில்லை
இன்னும் நம்பிக்கைக்கு
இடமுண்டாவென திரும்பிப்
பார்க்கவே செய்கிறேன்
விடைகொடுக்கும் போது
உன் கண்கள் எதையும்
வெளிப்படுத்துவதில்லை
இந்த உலகை விட்டுச் செல்லும் ஒருவன்
என்னை மட்டும் ஏன் அனுப்புகிறீர்கள்?
என்று கேட்பது போல
உன்னைக் கேட்க விரும்பினேன்
விடைகொடுக்கும் போது
உன் அசையும் கைகள்
உறுதியிழப்பதேயில்லை.
இந்த முறையும்
சரியாகச் சொல்லிக்கொள்ளவில்லையோவென
வழியெல்லாம் நினைத்துக்கொண்டு போகிறேன்.


கேட்காததும் சொல்லாததும் என்ற கவிதையைப் பாருங்கள்.நம் அன்றாடத்தில் எல்லோர் மனதிலும் இருக்கும் வரிகளாகவே இவை எனக்குத் தோன்றுகின்றன.

கேட்பாய்
கேட்பாய் என
சொல்லாதிருந்தவை
சொல்வாய்
சொல்வாய் என
கேட்காதிருந்தவை
வேறொன்றுமில்லை
இரகசியமென்றும்
இடைவெளியென்றும்.


விடுவிப்பிற்குப் பின்..என்கிற கவிதை பிரியத்தின்ஏற்காமையைச்சொல்கின்றது.

இத்தோடு
என்னைப் பற்றிய
குற்ற உணர்வுகள் அனைத்திலிருந்தும்
உன்னை விடுவித்துவிட்டேன்
ஆனால்
அது ஏன்
ஒரு வெறுப்பைப் போல
ஒரு பிரிவைப் போல
ஒரு புறக்கணிப்பைப் போல
காட்சியளிக்கிறது?



நிலை எனும் கவிதை காத்திருத்தலின் அனுபவத்தைத் தருகின்றது.


பேரூந்து
நிலையத்தில் இதோ
வருகிறேன் என்று
சொல்லிப்போன
அம்மாவுக்காக
எவ்வளவோ நேரமாய்
காத்திருக்கிறது
ஒரு குழந்தை
பார்க்கப் பார்க்க
தீராத முகங்iகைப்
பார்த்தபடி...




 
















 மீறல் ஒரு மென்மை அனுபவமாகத் தோணுகிறது.அது ஒரு மீறாத விதியைச் சொல்கிறது.

எல்லாப் பாதுகாப்பு
ஏற்பாடுகளிலும்
ஒரு கதவு
மூடப்படாமல் போகிறது
விளையாட்டின் விதிகளை
நாங்கள் யாரும்
மீறாவிட்டாலும்
மைதானத்தின் கோடுகள்
கரைகின்றன
இச்சிறு மழையில்.


கைகளை விடுவித்துக் கொள்வது எப்படி? என்ற கவிதை உறவுகளில் கண்களுக்குப் புலப்படாத பக்கங்களைச் சொல்கிறது.அவை பரிச்சயமான சொற்களாக இருந்தாலும் கவிதை தரும் பிரதிபளிப்பு நினைவுகளினூடு எப்போதும் பயணிக்கக் கூடியது
.

நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பது
உங்களுக்குத் தெரியும்

நான் ஒரு நல்ல மனிதன் என்பது
எனக்குத் தெரியம்

நீங்கள் உங்களைப் பற்றி
புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்

நான் என்னைப் பற்றி
புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றேன்

உங்கள் கவிதைகள் உங்களை
ஏமாற்றுகின்றன

என்னுடைய கவிதைகள் என்னை
ஏமாற்றுகின்றன

நீங்கள் வெறுக்கிற பெண்னைத்தான்
நீங்களும் காதலிக்கிறீர்கள்

நான் வெறுக்கிற பெண்னைத்தான்
நானும் காதலிக்கிறேன்

உங்களை அவமதித்தவர்களை
நீங்கள் பலி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்

என்னை அவமதித்தவர்களை
நான் பலி வாங்கிக் கொண்டிருக்கிறேன்

உங்களுடைய தந்நிரங்களால்
நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்கள்

என்னுடைய தந்நிரங்களால்
நான் முன்னேறிச் செல்கிறேன்

உங்களுடைய சீடர்களால் நீங்கள்
காட்டிக் கொடுக்கப்படுகிறீர்கள்

என்னுடைய சீடர்களால் நான்
காட்டிக் கொடுக்கப்படுகிறேன்

உங்களுடைய தெய்வங்கள்
உங்களுக்குத் துணையிருக்கின்றன

என்னுடைய தெய்வங்கள்
எனக்குத் துணையிருக்கின்றன

உங்களுக்கு நீங்கள் மன்னிப்பு அளிக்கிறீர்கள்

எனக்கு நான் மன்னிப்பளித்துக் கொள்கிறேன்

என்னை எப்படிக் கையாள்வதென்று
உங்களுக்குத் தெரியும்

உங்களை எப்படிக் கையாள்வதென்று
எனக்குத் தெரியும்

நல்லது நண்பரே!
நமக்குள் யார் மனமும்
சந்தேகமில்லாமல் நம் கைகளை
விடுவித்துக் கொள்வது எப்படி?


 






 





 




 


Thursday, January 13, 2011

ஷாகிரின் புகைப்படங்கள்



ஷாகிர் எனது வகுப்பு நண்பன்.பாடசாலை நாட்களில் அவனுக்குள் இருக்கும் தேர்ந்த புகைப்படக் கலைஞனை என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. இப்போது அவனை ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனாகவும் cameraman ஆகவும் காணும் போது மகிழ்ச் சியாக இருக்கிறது.

    அவனது புகைப்படங்கள் எனக்கு மகிழ்ச்சி தருபவை. அவை தரும் உணர்ச்சியும் பிரதி பளிக்கும் கருத்தும் ஆழம் நிறைந்தவை யாகவே எனக்குத் தோன்றுகின்றது. ஏனெ னில்  ஒரு கலைஞன் காணும் உலகும் அவன் அதனை ரசிக்கும் விதமும் அலாதியானது. ஷாகிரின் சில புகைப்படங்கள் அத்தகை யதொரு ரசனையை தரக்கூடிய வல்லமை மிக்கவை.







ஷாகிரின் சில புகைப்படங்கள்...















































































                                                                                                            

































































































































Monday, January 10, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கடந்த 6ம் திகதி ஆரம்பமாகி 9ம் திகதி ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்த மாநாடு நடந்து முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதி நாளன்றே என்னால் கலந்து கொள்ள முடியுமாக இருந்தது. செவ்விதாக்கம் தொடர்பாக நடைபெற்ற முதலாவது அமர்வில் சில பிரயோசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது. இறுதியில் இராம கிருஷ்ண மிஷனில் கலை விழாக்களை மிகவும் ரசித்திருந்தேன்.

எழுத்தாளர்கள் சந்தித்துக் கொள்ள ஒரு வெளியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கள் தொடர்பாடல் உயிர்பெற வேண்டும். எழுத்தாளர் களுக்கு மத்தியில் சகோதர வாஞ்சையை அதிகரிக்க வேண்டும் என்பனவே இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமாக இருந்ததே தவிர யாருக்கும்   பொன்  னாடை போர்த்துவது இதன் நோக்கமாக இருக்கவில்லை என மாநாட்டின் ஒருங் கினைப்பாளர் முருகபூபதி அவர்கள் குறிப்பிட்டார்கள்.
மாநாடு சில புதிய அனுபவங்களைத் தந்தது. பலரைச் சந்திக்கவும் கதைக்கவும் முடிந்தது.ஒன்றாகத் தேநீர் அருந்தக் கிடைத்தது.இதுதான் இந்த மாநாட்டின் சாதனை. மாறாக இந்த மாநாடு எதிர்புக்களைக் கடந்து நடந்தது முடிந்தது என்பது சாதனையல்ல என முருகபூபதி அவர்கள் சொன்னார்கள். அது பிடித்தி ருந்தது.
























 எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளர் முருகபூபதி அவர்களுடன்.




















டொமினிக் ஜீவா அவர்களுடன்
























  
பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் சிறிதர சிங் அவர்களுடன்




















சிறிதர சிங் மற்றும் பிரான்ஸ் அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளருடன்





















கலை நிகழச்சியின் போது

Monday, January 3, 2011

கவிக்கோவின் கவிதை




















’இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்

‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்

இறைவன் கூறினான்:
‘மழை வெண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா’
ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்
கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்

உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்’

வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?
புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!

மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?
கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?

முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம் தானே அது
கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!

மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது...