Saturday, May 26, 2012

மரணத்தின் நிழலில் நடத்தல்...



வாழ்க்கைப் பாறையின்
மறு திசையில் எதிரொலிக்கிறது
தொண்டைக்கும்
நெஞ்சுக்குமான இடைவெளியில்
ஏதோ ஒன்று
அடைபட்டிருப்பதான வலி

மொத்த ஆயுளின்
அரைப்பகுதி முடிந்து போனதான
மன வலியில்
அங்கலாய்க்கிறது வயது

இதுவரையிலும் புதைந்து போன
மொத்தப் பிணங்களும்
எழுந்து வந்து
என் செவிகளுக்குள்
மரணம் குறித்து ஓதும் பாஷை
கண்ணீரை வரவழைக்கிறது
இரு விழிகளிலும்

வாழ்க்கை
ஓவ்வொரு மூச்சாய்
விட்டு விட்டு
மயானம் நோக்கி நடக்க
அதற்கு முன்னால்
நடந்து போகிறது
மரணம்...


2007 ஆம் ஆண்டு யாத்ரா 18 ஆவது இதழில் வெளியான எனது கவிதை

Monday, May 21, 2012

வீடு





த.வாசுதேவனின் இக் கவிதை நவீன வாழ்வின் புற,அக அம்சங்களை அழகிய முறையில் பதிவு செய்திருக்கிறது. படித்ததில் பிடித்த இக்கவிதையையை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


இந்தத் தெருவில்
குரைப்பதற்கு நாய்கூட இல்லை

வீடுகளின் குழந்தைகள்
ரெசிடென்சியல் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

பெரியவர்கள்
முதியோர் இல்லத்தில்
இறப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

எறும்புகளைக் கூட
மருந்து வைத்துக் கொன்றுவிட்டோம்.

குப்பைகளைக் கூட
பக்கத்து வீட்டுப் புறக்கடைகளில்தான்
கொட்டுகிறோம்.

கொசுக்களையும்
பூச்சிகளையும்
சுருள்வத்தியால் கொல்கிறோம்.

பல்லிகளைக் கொல்லவும்
வழிவகைகள் காண்போம்.

வாசலுக்கு கான்கிரீட் போட்டுவிட்டால்
தவளைகள் இருக்காது.

காம்பவுன்ட் வால் கட்டிவிட்டால்
பாம்புகள் வராது.

மரங்களை வெட்டிவிட்டால்
பறவைகள் இருக்காது.

குயில் சத்தமும் இருக்காது.
எச்சமும் இருக்காது.

தங்கத்தை பேங்க் லாக்கரில்
வைத்திருப்பதால் திருடர்களும் வரமாட்டார்கள்.

மிச்சமிருக்கும் உணவை
வைப்பதற்கு ஃபிரிட்ஜ்
இருப்பதால் பிச்சைக்காரன்கூட
இங்கு வரமாட்டான்.

அருகில் இருப்பவனிடம்
எதற்குப் பேசுவது?
கைபேசி இருக்கிறது
தூரத்தில் உள்ள உறவோடு பேச

ஏ.டி.எம் இல் பணம் இருக்கிறது
செலவு செய்ய.

நாங்கள் அநேகமாக அலுவலகத்தில்தான்
இருக்கிறோம்.
வாடிக்கையாளரும்,எஜமானும்
வெளிநாட்டில் இருக்கிறார்கள்.

தமிழில் பேசுவது அரிதுதான்
மம்மி மொழி போதும் நமக்கு.

வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கிறது.
மனசும்தான்.

இந்த வீட்டில் டி.வி மட்டுமே
பேசவும் பாடவும் செய்யும்.

இந்த வீட்டில்தான் கதவுகளை நன்கு சாத்தியபடி
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.




Thursday, May 17, 2012

கனவுகளோடு...



இருட்டில் இருப்பதென்றால்
அப்படியொரு பிடிப்பெனக்கு.
அப்போதுதான் விழிநீர்
வெளியே தெரியாமல்
மொத்தமாய் அழுது
தொலைக்கலாம்...

பிறகென்ன...
பேனை  பிடிக்க நினைத்தபோது
கைகளில் அகப்பை தந்து
அழகு பார்த்தாள் உம்மா.

எல்லாத் திறமைகளுக்கும் சேர்த்து
பர்தா போட்டார் வாப்பா.

எனக்குள்ளும்..
நிறைய ஆசைகள் திறமைகள்

சமயலறைக்குள்ளே  புதைந்து
போகுமென்று
எனக்கெப்படித் தெரியும்?

உம்மா...!
எனக்கோர் ஆசை
பல ஊர்களைப்
பார்க்க வேண்டும்.
பல மனிதர்களை, மனங்களை
சந்திக்க வேண்டும்.

என்ன செய்ய...?
வீட்டு முற்றத்தில்
ஐந்து நிமிடம்
நிற்க விடாத
உம்மாவிடம் தான்
இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போதெனக்கு முடிந்ததெல்லாம்...
வீட்டுச் சுவரில்
எத்தனை கிறுக்கல்கள்...

மொத்த வீட்டையும்
கூட்டி முடித்து.
பாத்திரங்களைக்
கழுவி வைக்க எடுக்கும் நேரம்.

ஆடைகளை எவ்வளவு
சீக்கிரம் கழுவலாம்.
என்பதையெல்லாம்
மூச்சுவிடாமல்
சொல்லி முடிக்கத்தான்.

என் முந்தானைக்குள்
நிறையக் கனவுகளை
முடிந்து வைத்திருக்கிறேன்.
இப்போது கொஞ்சம்
சோகங்ளையும்
முடிந்து கொள்கிறேன்.
நாளை எனக்குத்
திருமணம் என்பதால்...

Friday, May 11, 2012

நாகூர் ஈ.எம் ஹனீபாவை நினைத்து...



இறைவா உன்னைத் தேடுடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன்.
அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன்...

அந்த கம்பீரமான காந்தக் குரல் செவிகளுக்குச் சமீபமாக இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அக் குரலின் இனிமையும் ஆசுவாசமும் எல்லோர் மனதையும் பரவசப்படுத்தக் கூடியது தான்.ஆறு அதன் பாட்டுக்கு ஓடுவது போல மிக இயல்பாக வந்து விழுகிறது அவர் குரல்.மூங்கில் பாடும் ராகம் போல இதயத்திலேயே தங்கி விடுகிறது அக் குரல்...

அவருடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டுதான் இதனை எழுதிக் கொண்டிருக் கொண்டிருக்கிறேன்.வரிகளின் எளிமையிலும் குரலின் இனிமையிலும் எத்தனை வசீகரம்.

எனக்குப் 10 வயதிருக்கும் என்று நினைக்கிறேன் என் பாட்டி ஒருவர் எப்போது நான் அவர் வீட்டுக்குச் சென்றாலும் வீட்டிலுள்ளவர்களை அழைத்து வைத்துக் கொண்டு என்னைப் பாடச் சொல்வார்.ஈ.எம் ஹனீபாவின் பாடல்களையே அப்போது நான் பாடுவேன்.'சொன்னால்' என்பதை அவர் பாணியில் 'ஷொன்னால்' என உச்சரிக்கும் போது அவர் சிரிப்பது இன்னும் மங்கலாக நினைவிருக்கிறது.


பின்நாட்களில் அவரது பாடல்களால் தீவிரமாக ஆட்கொள்ளப் பட்டிருந்தேன்.என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட என் சகோதரி ஒருத்தி அவரது அதிகமான பாடல்களை எனக்கு ஒரு கொப்பியில் எழுதித் தந்தார்.இன்றும் அதனைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இஸ்லாமிய கீதம் என்பதற்கு வரைவிலக்கணமாகவே ஈ.எம் ஹனீபா அமைந்து விட்டார் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டிலும் இலங்கை யிலும் முஸ்லிம்களின் மனதில் அவருக்கு இடமிருக்கிறது.எல்லோரும் அவரது பாடல்களைக் கொண்டாடுகிறார்கள்.மத ரீதியான வைபவங்களிலும் அவரது பாடல்களு;கு இடமிருக்கின்றன.ஆனால் இசையையும் பாடலையும் ஹராம் என வாதிடுபவர்கள் கூட அவற்றைச் சத்தமாக ஒலிக்கச் செய்து கேட்டுக் கொண்டிருப்பதுதான் என்னை எப்போதும் வியப்படையச் செய்யும் முரணாக இருக்கிறது.



1940 களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கியுள்ளார் ஹனீபா.இஸ்லாமிய கீத உலகின் சிகரத்திலே சக்கர வர்த்தியாக அவர் அமர்ந்திருக்கிறார்.படித்தவர்களும் பாமரர்களும் அவரது பாடலுக்குச் செவிசாய்க்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் 1925 டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் ஹனீபாஅவர்கள் பிறந்தார்கள்.இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பது இவரது பெயர்.அப்பெயரைச் சுருக்கி இ.எம் ஹனிபா என அழைக்கப் பட்டார்.தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால்பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.இசை உலகில் பிரபலமானவுடன் 'இசை முரசு' எனும் அடைமொழியும் அப்பெயரோடு இணைந்து கொண்டது.


ஈ.எம் ஹனீபாவுக்கு ஒரு அரசியல் பரிமாணம் இருப்பதனை அண்மையில்தான் நான் அறிந்து கொண்டேன்.சமநிலைச் சமுதாயத்தில் வெளியான ஆளுநர் ஷாநவாஸின் கட்டுரையே அதற்கு வழிசெய்தது. ஹனீபா அவர்களுக்கு நேர்மையான ஒரு அரசியல் பக்கமும் இருக்கின்றது. கலைஞரையும் பேராசியர் அன்பழகனையும் அவர் அணைத்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை முதல் தடைவ பார்த்ததும் ஒரு கணம் ஆச்சரியப் பட்டேன்.தி.மு.வின் வளர்ச்சிக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார்.

'கடந்த டிசம்பர் 25 ஆம் நாளோடு அவருக்கு 86 வயது நிறைவடைந்துவிட்டது.89 வயதான பேராசியர் அன்பழகன் தி.மு.கவின் பொதுச் செயளாளராக இருக்கிறார்.88 வயதான கலைஞர் தி.மு.கவின் தலைவராக இருக்கிறார்.87 வய தான ஹனீபா நாகூரில் தாம் கட்டிஎழுப்பிய கலைஞர் இல்லத்தில் வெளிச்சம் குன்றிய ஓர் அறையில் ஒரு ஈசி கதிரையில் சாய்ந்தவாறு ஓய்வில் இருக் கிறார்.'

சிறு வயதிலேயே இவர் பாடத் தொடங்கிவிட்டார்.தனது 15 ஆவது வயதிலே 1941 ஆம் ஆண்டு தனது முதல் இசைக் கச்சேரியை ஒரு திருமண நிகழ்விலே அவர் நடத்தினார்.இத்தனை இருந்தும் எடுப்பான குரல் வாய்ந்த ஹனிபா அவர்கள் முறையாக சங்கீதம் கற்றவரல்ல என்ற செய்தி எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமான செய்திதான்.முறையாக சங்கீதம் கற்றிருந்தால் அதிகமாக சாதித்திருக்க முடியுமே என்று ஹனிபாவிடம் கேட்ட போது 'முஸ்லிம்கள் கர்நாடக சங்கீதத்தை விரும்பிக் கேட்பதில்லை.அப்படி நான் முறையாக சங்கீதம் கற்றிருந்தால் இன்று இந்த அளவுக்கு மக்களிடம் புகழ் பெற்றிருக்க மாட்டேன்.எனது சங்கீதத்தை மேட்டுக் குடி மக்கள் மட்டுமே கேட்டு ரசித்திருப்பார்கள்.ஆனால் எனது குரலை இன்று தமிழ் கூறும் நல்லுலகம்  முழுவதும் கேடகின்றது.சாதாரண மக்கள் கூட எனது பாடல் களால் ஈர்க்கப்பட்டு ஒரு மக்கள் பாடகனாக விளங்குகிறேன்.'என்று பதில் சொன்னார்.

உண்மையில் ஹனிபாவின் பாடல்களின் வெற்றி இங்குதான் இருக் கின்றது.தமிழ் கூறும் நல்லுலகில் அவரது பாடல்களின் பிரதான வெற்றிக்கு எளிமையான வரிகளும் அழகிய குரலுமே பிரதான காரணம் எனச் சொல் லலாம்.இலங்கைச் சூழலில் அண்மைக் காலங்களில் வெளியான இஸ் லாமியப் பாடல்களின் வெற்றியின்மைக்கு மேற்படிக் காரணங்களில் உள்ள போதா மைகளும் ஒரு காரணம் என இங்கு குறிப்பிடலாம்.

நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பிரபல்யமாவதற்கு புலவர் ஆப்தீன் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.ஏனெனில் அவரது அதிகமான பாடல்களை அவரே எழுதியிருக்கிறார்.புலவர் ஆப்தீனும் ஒரு பாடகராக இருந்தாலும் ஹனீபாவின் பாடல்களால் கவரப்பட்டு தான் பாடுவதை நிறுத்திக் கொண்டு ஹனீபாவுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார்.இந்த 'நாகூர் இரட்டையர்கள்'இஸ்லாமிய கீத உலகில் புதுப் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.

இறை தூதர் (ஸல்) அவர்களது சீராவைச் சொல்வதில் இவரது பாடல்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன.தூதர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை அவை எப்போதும் நினைவில் வைத்திருக்க அப் பாடல்கள் துணை புரிந்திருக்கின்றன.

 இவரது சில பாடல்களில் கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பதனை மறுக்க முடியாது.இருப்பினும் நமது மொத்தக் கவனத்தையும் அதன் பக்கம் திருப்பி நல்லவைகளை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை.நிச்சயம் இவரது பாடல்கள் சமூக,பண்பாட்டுத் தளத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மொத்தமாக நாகூர் ஹனீபாவின் இசைப் பாடல்களை நோக்குகின்ற போது அவை மக்கள் ரசனையின் நீண்ட இடைவெளியை நிரப்புவதற்கான பெரும் சாதனமாகப் பயண்பட்ட அதே நேரம் கலாசாரப் பண்பாட்டுத் தளத்தில் முக்கிய அதிர்வுகளையும் செய்துள்ளது.

ஆரம்ப காலத்தில் இவரது பாடல்கள் ஹிந்திப் பாடல்களின் மெட்டில் அமைந்திருந்தாலும் காலப் போக்கில் தனக்கான இசைப் பாணியொன்றை அவர் அமைத்துக் கொள்வதில் வெற்றியடைந்தார்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய கீதங்கள் முறையான செவ்வியல் இசை மரபில் அமையாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவை தமது இசைப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

கலாநிதி எம்.எஸ்எம் அனஸ் கூறுவது போல'இஸ்லாமிய கீதத்தின் அல்லது முஸ்லிம் இசையின் கடந்த 75 வருட கால வரலாற்றை நோக்கினால் அது தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் மட்டுமல்லாது தென் கிழக்காசிய இசைக்கும் தமிழ் இசைக்கும் அது அதன் பங்கைச் செலுத்தியுள்ளது'

எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏகாந்தத்திற்கு இவரது பாடல்கள் அர்த்தத்தை வழங்கின.இதனால் இசை ரசனைக்கு ஒரு வடிகாலாகக் கூட அவற்றை அமைத்துக் கொண்டார்கள்.அல்லாஹ்வைப் பற்றியும் நபியைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் அவரது பாடல்கள் அமைந்திருக்கின்றன.இதனால் மார்ககம் குறித்த ஒரு நினைவுபடுத்தலாயும் இவை இருந்ததாகக் கொள்ளலாம்.

எல்லாப் பாடல்களும் ஈர்ப்புடையதாய் இல்லாவிட்டாலும் மிக அதிகமான பாடல்கள் எல்லோர் மனதையும் தொட்டவை.பாடும் காலத்தில் அவர் கொண்டாடப்பட்டது போல இப்போது அவர் கொண்டாடப்படுவதில்லை. எல்லாக் கலைஞர்களதும் அந்திமப் பொழுது இப்படித்தான்.அவர்கள் ஒரு காலத்தில் எல்லோரையும் பேசவைக்கிறார்கள்.பின் யாராலுமே பேசப்ப டாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.

ஈ.எம் ஹனீபா காலத்தால் மறக்கப்படாத ஒருவராக இருக்க அவரது பாடல்களே போதுமானது.அவரது குரல் கேட்க ஆரம்பித்துவிடும் போது சட் டென ஒரு புத்துணர்ச்சி இதயமெங்கும் பரவ ஆரம்பித்துவிடுகிறது.மூங்கில் பாடும் ராகம் போல என்றைக்கும் எவரையும் மகிழ்விக்கும் சக்தி அவரது குரலுக்கு இருக்கிறது.இதனால் இஸ்லாமிய கீதத்தின் சிகரத்தில் என்றைக்கும் அவர் அமர்ந்திருப்பார்.


இம்மாத வைகறை இதழில் வெளியானது










Thursday, May 3, 2012

நேர்காணல்: B.H அப்துல் ஹமீத்


ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும் 

                    சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்



சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள், வடக்கைச் சேர்ந்தவர், இல்லை இல்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்பிர தேசங்களைச் சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதுண்டு. உண்மையில் இவர் கொழும்பு, தெமட்டகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.. வறிய குடும்பம் ஒன்றில் பிறந்து, இளமையிலேயே தந்தையை இழந்த இவரை தாயார் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்கு ஆகாரம் விற்றுக் கிடைக்கும் வருமானத்திலேயே படிக்க வைத்தார். எதிர்பார்ப்புக்கள் எதுவும் அற்ற வாழ்க்கைச் சூழலில் எதேச்சையாக  வானொலி   துறைக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது என்று கூறும் இவருக்கு, பாடசாலைக் காலத்தில் நல்லாசிரியர்களின் வழிகாட்டலில், தமிழ் அட்சரங்களைப் பிழையின்றி உச்சரிக்கவும்;, தூய தமிழில் உரையாடவும் கிடைத்த பயிற்சி வானொலி நிலையத்தில் காலடி வைத்த முதல்நாளே கைகொடுத்தது.

பின்நாட்களில் இவரது சாதனைகளுக்கு அதுவே அடிநாதமாக அமைந்து விட்டது. 11வது வயதில் 1960ம் ஆண்டு 'சிறுவர் மலர்' எனும் வானொலி நிகழ்ச்சியில் ஒலிக்க ஆரம்பித்த இவரது குரல், இன்று உலகத்தின் எந்த மூலையிலும் வாழும், தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவர் அனைவரும், மதித்து நேசிக்கும் குரலாக சிகரம் தொட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. அறிவிப்பு, நேர்முக வர்ணனை, செய்திவாசிப்பு, சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பு, நாடக ஆக்கம், பாடலாக்கம், நடிப்பு என பன்முகத் திறமைகளை ஒரு சுயம்புவாக வளர்த்துக்கொண்ட இவர்; தென்னிந்தியாவில் வரலாறு படைத்த கலைஞர்கள் பலரது, நேசத்துக்கும் பாசத்தும் உரிய ஒலிபரப்பாளராக இன்று வரை மிளிர்கிறார். அதன் காரணமாக, தென்னிந்திய திரைத்துறையிலும் பாடலாக்கம், நடிப்பு என இவரது பங்களிப்பு தொடர்ந்துள்ளது.  

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலே ஒரு ஒலிபரப்பாளராக 1967 முதல் தொடர்ந்து 32 ஆண்டுகள் பணியாற்றிய இவர், பல்துறை சார்ந்த அறிவைத் தேடித் திரட்டிக்கொள்ள 'வானொலி நிலையம் ஒரு பல்கலைக்கழகத்தை விடச் சிறந்த தளமாக தனக்கு அமைந்ததாக நன்றியுணர்வுடன் கூறுகிறார்.                   மீள்பார்வை அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


சந்திப்பு : இன்ஸாப் ஸலாஹதீன், அஹ்ஸன் ஆரிப்


32 ஆண்டுகள் வானொலியிலே பணியாற்றியிருக்கிறீர்கள். அதனது ஆரம்ப காலத்திற்கும் கடைசிக் காலத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை எப்படி உணர்கிறீர்கள்?

வானொலியில் நான் பணியாற்றிய காலத்தின் முதல் இரண்டு தசாப்தங்களும், நல்ல சுதந்திரமும் மகிழ்ச்சியும், ஊக்குவிப்பும் நிறைந்த பொற் காலமாகும். எனக்கு வழிகாட்டிகளாய் இருந்து, ஊக்குவித்த மூத்த ஒலிபரப்பாளர்களை, என்றென்றும் மறக்க மூடியாது. அங்கு, 17 வருடங்கள் பணியாற்றியதன் பின் 1985ம் ஆண்டு சிறப்புப் பயிற்சிக்காக நெதர்லாந்து (ஹாலந்து) சென்றேன். ஆறுமாத பயிற்சி முடிவில் மூன்று நட்சத்திர அந்தஸ்துடன் சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டது. பின், 1996ல்; மேற்கு ஆபிரிக்காவின் 'பெனின்' நகரில் நடைபெற்ற மற்றுமொரு பயிற்சிப்ப ட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

 இப்பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே, அமைந்த கடுமையான பயிற்சிகள். ஒரு முழுமையான ஒலிபரப்பாளனாக, நாடு திரும்பினாலும். நான் பெற்ற பயிற்சிகளின் பலனை இலங்கை ஒலிபரப் புத்துறைக்கு வழங்க முடியாத அளவுக்கு, நிலைமை மாறிப்போயிருந்தது. படைப்பாற்றல் மிக்கவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து இயங்கிய ஒலிபரப்புச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருந்தது. அரசியல் செல்வாக்குடன் வந்தவர்கள், பெரும்பதவிகளை பெறும் நிலை. அரசியல் வாதிகளைத் திருப்திப்படுத்துவதில்தான் அவர்களுக்கு அதிக அக்கறை இருந்ததே தவிர சமூகத்திற்கான பணியை வழங்கும் கடமை உணர்வோ, புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ, மூத்த வர்களை மதிக்கக் கூடிய பக்குவமோ இல்லாமல் இருந்தது. அபூர்வமாக சில நல்ல திறமைசாலிகளும் இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களாக வந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்களில் சிலரைப் பயிற் றுவிக்க என்னால் முடிந்தாலும் உயர்ந்த தரத்தில் வானொலி ஒலிபர ப்புக்களை மாற்றியமைக்கக் கூடிய காலம் உருவாகமல் பேய்விட்டது என்பதே கவலை.

ஆரம்பகாலத்தில், ஒலிபரப்புத்துறையில் கல்வி, தகவல், பொழுதுபோக்கு ஆகிய மூன்று விடயங்களே தாரக மந்திரமாய் இருந்தன. பின்நாளில் தகவல், அதற்கடுத்து பொழுதுபோக்கு, மூன்றாவது நிலையில் கல்வி என்றிருந்தது. காலப்போக்கில் கல்வி காணாமல் போனது. அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் தகவலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பொழுதுபோக்கு மட்டுமே முன்னுரிமை பெற்று விளங்குகிறது. இப்படி நான் ஆதங்கப்பட்டாலும் இந்நிலைமையை சீர்திருத்த செய்யக் கூடியது எதுவும் இல்லை என்பதே உண்மை. சீர்திருத்தங்களைச் செய்யக் கூடிய துணிச்சலும், அக்கறையும் உள்ள இளம் அறிவிப்பாளர்கள் சிலர் இருந்தாலும் இந்த ஊடகங்களை நடத்துபவர்களுக்கு, நிர்வாகிகளுக்கு, அல்லது அவற்றின் உரிமை யாளர்களுக்கு அவ்வாறான அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது. எப்படியாவது வருமானத்ததைத் தேடவேண்டும் என்ற நிர்பந்தந்தத்தில் அனைத்துமே வர்த்தக மயமாகிவிட்டது. தனியார் வனொலிகளுக்குத்தான் இந்தத் தலைவிதியென்றால், அரச வானொலியும் இந்த வர்த்தகப் போட்டிகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருப்பது வேதனையைத் தருகிறது. 

சினிமாச் சிந்தனைகளும், பாடல்களுமே நேயர்களுக்குத்தேவை என்றொரு மாயை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் பணியாற்றிய காலத் தில் இவ்வாறான ஜனரஞ்சக அம்சங்களை இனிப்பூட்டப்பட்ட மருந்தைக் கொடுப்பதுபோல, அளவோடு பயன்படுத்தினோம். அதிகமாக பயனுள்ள தகவல்களை வழங்கினோம். நேயர்கள் மத்தியிலும் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்கள், கவிஞர்களை உருவாக்கக் களம் அமைத்தோம்..

அத்தகைய சூழலில் தொடர்ந்தும் பணியாற்றாமல் நீங்கள் வெளியேறக் காரணம்?

ஆரோக்கியமான சூழல் மாற அரம்பித்ததாலும், அரசியல் செல்வாக்குடன் வந்தவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டதாலும், அவமானப்பட்டு வெளியேறும் காலம் வருமுன்; 1998 இல் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எனது பொறுப்பை இராஜினாமாச் செய்தேன். மும்மதங்களைச் சார்ந்து மொழியால் ஒன்றிணைந்த சமூகத்தை நோக்கியே எனது பார்வை இருந்தது. இன்று வரையும் அவ்வாறே இருக்கிறது. ஆனால் இராஜினாமா கடித்தை ஒப்படைத்தபோது, அடுத்த கட்டம் என்ன? என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், இதுவரை என்னைக்காத்த இறைவன் இனிமேலும் காப்பான என்ற நம்பிக்கையோடு தான் வெளியே வந்தேன். ஒரு வாசல் மூடி மறு வாசல் திறப்பான் இறைவன் என்பபார்களே! அதுபோல எனக்கு பல வாசல்கள் திறந்து வைத்தான் இறைவன். அதுவும் இடைவெளியே இல்லாமல்.


இன்றைய ஊடகங்கள் எதிர்நோக்கும் பிரதான சவால் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

நாங்கள் வளர்ந்த, வாழ்ந்த ஊடகச் சூழல் வேறு, அது, அரச ஊடகம் என்பதால் அங்கு வருமானத்தைத் தேடவேண்டிய கவலை எங்களுக்கு இருக்கவில்லை. ஆனாலும் தன்னிறைவு காண்பதற்கும் மேலதிகமாக, வருமானம் கிடைத்தது, அதற்குக் காரணம் எமக்குப் போட்டியாக, தொலைக்காட்சியோ, வேறு தனியார் வானொலிகளோ இருக்கவில்லை. ஆனால், தற்பொழுது ஊடகத் துறையில் பணியாற்றுபவருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் இத்தனை போட்டிகளுக்கும் மத்தியில், எப்படி பணம் உழைப்பது என்பதுதான். இவ்வாறு, போட்டிகள் பெருகும்போது விழுமியங்கள் தொலைந்து போவது இயல்புதானே.

இதனால், இலட்சியங்கள், சமூக கடப்பாடு என்பவை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆயினும், இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், மொழிப்பற்றோடு, அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளை நடத்தும் சில இளம் ஒலிபரப்பாளர்கள் உண்டு, அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் மனமாறப்பாராட்டவும் நான்தயங்குவதில்லை.                                                                            எத்தனை நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்,'வானொலி' என்பது இனி வரும் காலங்களிலும் அதி சக்திமிக்க ஊடகம் விளங்கும் என்பதை எவரும் மறுக்கமுடியாது. காரணம், தொலைக்காட்சிபோன்றவை நமது ஐம்புலன் களையும் ஒருமுகப்படுத்திப் பார்க்கவேண்டியவை. ஆனால் நமது அன்றாட அலுவல்களுக்கு இடையூறின்றி நமது செவி வழியாக வந்தடையக்கூடியது என்பதே வானொலியின், அசைக்கமுடியாத சக்தி. ஆயினும் அதனை நமது நாட்டில் சரியாக உணரந்து பயன்படுத்துகிறோமா? என்ற கேள்விக்கு இன்றைய தலைமுறைதான் பதிலளிக்கவேண்டும்.

அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் மொழியை, பிழையறப்பேச உச்சரிக்க, செவிவழி செல்லும் ஊடகமே சிறந்த பங்காற்றமூடியும். ஒரு குழந்தை செவி வழியாக கிரகித்த ஒலிகளைக் கேட்டு முதன் முதலாக பேச ஆரம்பிக்கிறதே அதுவே சிறந்த உதாரணம். செவிவழியாகச் செல்லும் எந்தமொழியும் கொச்சைப் படுத்தப்பட்டால் எதிர்காலத்தில், அந்த மொழியே சீரழிந்துவிடும் அல்லவா? அதுபோல் நமது மதம் காட்டும் நன்நெறிகள், மற்றும் சமூதாயம் சார்ந்த பண்பாட்டுக் கோலங்களை தக்கவைப்பதிலே ஊடகத்துறைக்கு, குறிப்பாக, வானொலிக்கு, மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது.




ஊடகத்துறையில் நீண்ட தூரம் பயணித்த நீங்கள் அத்துறையில் உள்ளவர்களுக்கு என்ன ஆலோசனைகளை முன்வைக்கிறீர்கள்?

நாம் தற்போது செய்மதி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால், எங்கெங்கோ இருந்து அநாச்சாரப் பழக்கவழக்கங்கள், நவீனநாகரிகம் என்றபோர்வையில் குக்கிராமம் வரை எட்டிப்பார்க்கின்றன. சமூக வரம்புகளை மீறிப் போகத் தூண்டுகின்றன. எனவே, நமது அடையாளத்தை, நாம்பெருமையோடு பின்பற்றிவந்த பண்பாட்டை, கலாசாரத்தை காக்கின்ற பணியையும், அதற்காக அடுத்த தலைமுறையை தயார்படுத்த வேண்டிய பணியையும் ஊடகங்களே செய்ய வேண்டி உள்ளது.

இதனையே 1996ம் ஆண்டு 'மேற்கு ஆபிரிக்காவின் பெனின் நகரில் நான் கலந்து கொண்ட பயிற்சிப் பட்டறையும்' (THE RELEVENCE OF THE MEDIA FOR ADOLESCENTS GROWING UP IN THE ISLAND SOCIETIES) வலியுறுத்தியது. உலகமயமாதலினால், கலாசார அதிர்ச்சி, ரசனை மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது எனினும்;, நமது சிறப்பான பண்பாடுகளைக் காக்க முயற்சியாவது செய்யலாம். அம்முயற்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பே மிகமுக்கியமானது. எனவே ஊடகத்துறை சார்ந்த எங்களது பார்வை அடுத்த தலைமுறையை நோக்கி யதாகவே அமையவேண்டியது அவசியமாகிறது

அதற்குப் புதிய அணுகுமுறையும் அவசியமாகிறது.  சிலவேளை நமது புதிய அணுகுமுறை, மூத்த தலைமுறையின் விமர்சனத்துக்குள்ளாகலாம். அதனால் விரக்தியடையாமல் எடுத்த முயற்சிகளைத்தொடரவேண்டும். அதேவேளை மூத்த தலைமுiறையை உதாசீனப்படுத்தாமல், அவர்களையும் மதித்துப் போற்ற வேண்டும். ஏனெனில், அவர்கள் விட்ட இடத்தில் இருந்துதான் நாங்கள் ஆரம்பிக்கின்றோம். 'ஒவ்வொரு தலைமுறையும் சாதிப்பதைவிட அடுத்த தலைமுறை அதிகமாக சாதிக்கும், அது காலத்தின் நியதி'.

இன்னொரு புறம் பார்த்தால், இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சி வேகமாக பரவிக் கொண்டிருப்பதனால், அச்சு ஊடகத்தின் வீச்சு குறைந்து கொண்டு வருவதையும் காணமுடிகிறது. எனவே, நவீன விஞ்ஞானத் தேரேறி இலத்திரணியல் ஊடகத்தோடு அச்சு ஊடகம் கைகோர்க்கவேண்டும். இப்போ தெல்லாம் இயந்திரகதியில் இயங்குகின்ற மனிதர்கள் மத்தியில், கையில் கொண்டு செல்லும் கருயின் மூலமே, பத்திரிகைகள், சஞ்சிகைகள் ,செய்திப் பக்கங்களை, வாசிக்கும் பழக்கம் மேலோங்கிவருகிறது. 'ஈ.புக்', 'ஓடியோ புக்' என்பனவும் மிகப்பிரபலம். எனவே இவற்றை நோக்கி எமது அச்சு ஊடகங்கள் வேகமாக நகரவேண்டும்.

நமது சமூகத்தைப் பொறுத்தளவில், நாம் எல்லோரும் ஒன்றிணைந்து, கைகோர்த்து இத்தகைய பணிகளை முன்னெடுக்க வேண்டும். தனித்தனித் தீவுகள் போன்று அமைப்புகளை உருவாக்கி, இயங்கும்போது ஒருவரை ஒருவர் அங்கீகரிக்காமல் விமர்சிக்கும் மனப்பான்மையே மேலோங்கும். எனவே நட்புறவுடன் சமகாலச் சிந்தனைகளில் ஒன்றுபடக் கூடியவர்கள் பொதுத் தளத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்.


இலங்கையில்-முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் என்ற கருத்தோடு உடன்படுகிறீர்களா?

இது ஒரு சிக்கலான விடயம். நாம் ஏன் அப்படி நினைக்க வேண்டும்? எது எங்களை அப்படி நினைக்கத் தூண்டுகின்றது? என்ற கேள்வி எழுகிறது. எமது சமூகத்தைப் பொறுத்தவரை மொழி அடையாளத்தைவிட எமக்கு மத அடையாளமே முதன்மையானது. ஆயினும் தமிழ் மொழி சார்ந்த நன்றி உணர் வையும் உரிமைகளையும் நாம் தைரியமாக வெளிப்படுத்துகிறோமா? எமது தாய் மொழி தமிழ் என்பதை நாம் மறுக்க முடியாது. அல்லாஹ்வைப் பற்றியும், எங்கள் நபிகள் நாயகத்தைப்பற்றியும், நாம் பின்பற்றும் மார்க்கத்தைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள மூலமானது எந்த மொழியோ அந்த மொழியே நமது தாய் மொழியானால் அந்தமொழியைப் புறக்கணித்து வாழவும் முடியாது. மொழியின் உரிமையை எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்ப வாதிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

இந்தமொழி மூலமான கல்வியையும், அதன் பலானாக கிடைக்கும் அனுகூலங்களையும் அனுபவித்துவிட்டு, மொழி அடையாளமற்ற அதாவது முகம் அற்ற சமூதாயமாகவே இங்கு வாழ்ந்து வருகிறோம். ஆனால், எமக்கொரு ஊடகம் என்று வேண்டும் என்று எண்ணும்போது அது தமிழ்மொழி சார்ந்ததாகவே பெரும்பாலும் அமையவேண்டிய நிர்பந்தத்தையும் மறுக்க முடியாது. அனால் நாங்கள் வாழ்வதோ பல்லின, பன்மொழிக்கலாசார நாடு, இங்கு நமது கவனைத்தை ஈர்த்து அலைக்களிக்கும் பல்வேறு ஊடகங்களுக்கு மத்தியில் 'எமக்கென்றொரு ஊடகம்' எனும் முயற்சிக்கு நமது சமூகத்தைச் சார்ந்தவர்களே எந்த அளவுக்கு ஆதரவு தருவார்கள் என்பது கேள்விக்குறி.

இத்தனைக்கும் மத்தியில், பொதுவாகவே தமிழைத் தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள், ஊடகத்துறையில் புறக்கணிப்படுவதால்தான், முஸ்லிம்களுக் கென்று தனி ஊடகம் என்ற சிந்தனை உருவாகிறது என்று வாதத்துக்கோர் பதில், இன்று இலத்திரனயல் ஊடகங்ககளில், கணிசமான அளவு முஸ்லிம் இளைஞர்கள் தமது சுய முயற்சியால் வாய்ப்புகளைப்பெற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதரசமூகங்களிடமிருந்து  எம்மை பிரித்து வைத்துக்கொண்டு மொழி அடையாளமின்றி, இன அடையாளத்தை மட்டும் வைத்து வாய்ப்புக்கள் இல்லை என்று நாம் சொல்வது தவறு. காரணம் நாம் பங்குகேட்பது மொழி அடிப்படையிலான பொதுத் தளங்களில். எனவே ஏனைய சமூகங்களோடு புரிந்துணர்வும், நட்பும் இன்றி எந்த ஒரு பொதுத்தளத்திலும் எமக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. மதம் சார்ந்து எமக்கென்றொரு ஊடகம் வேண்டுமானால் அமையலாம்.

அந்த வகையில் பார்த்தால். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 'முஸ்லிம் சேவை' என்று முஸ்லிம்களுக்கு மாத்திரம்தான் தனியான சேவை இருக்கின்றது. கிறீஸ்தவ சேவை, இந்து மத சேவை என்றெல்லாம் அங்கு கிடையாது என்பதை நினைத்துப்பாருங்கள். சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினாராக வாழும் எமக்கு, அரச வானொலியில், தனியாக ஒரு சேவை அமைந்திருப்பது, ஒரு வரப்பிரசாதமல்லவா? எமக்கென்றொரு ஊடகம் என்பதை விட இன்றைய காலத்தின் தேவை என்ன என்பதை முதலில் சிந்தித்துச் செயல்படவேண்டும் என்பதே என் கருத்து. அதாவது, முஸ்லிம் களின் குரல் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டுமே கேட்காமல், நம்மைச் சூழவுள்ளவர்களுக்கு கேட்கவேண்டும், அதுவும் நல்ல விதமாக கேட்க வேண்டும். இன்று சர்வதேச மட்டத்தில் ஊடகங்கள் அமெரிக்காவின், முஸ்லிம் விரோதக் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருப்பதை எவரும் அறிவர்.

முஸ்லிகள் என்றாலே ஈவு இரக்கமற்ற பயங்கரவாதிகள் என்ற உருவகமே திட்மிட்டுப் பரப்பப்படுகிறது. இந்த உருவகத்தை மாற்று மதத்தவர் மனங்களில் இருந்து அகற்றவும், நமது சாந்தி மார்க்கத்தின் உண்மைநிலையை, பெருமை களை அவர்கள் உணரவும் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டமிது. எனவே நம்மைச்சுற்றி வாழும் இதர மதங்களைச்சார்ந்த மக்களோடு சுமுக உறவுகளைப்பேணி உண்மைகளைத் தெளிவுபடுத்தும் ஊடகம் ஒன்று வேண்டும். அதுவே உண்மையில் 'நமக்கென்று ஒரு ஊடகம்' என்ற எண் ணத்தை அர்த்தமுள்ளதாக்கும்.