Wednesday, December 22, 2010

அதற்குப் பெயர்தான் தியாகம்...


ஒன்றை இழத்தலுக்கும் இன்னொன்றை அடைதலுக்கும் இடையிலான புதிர் அற்புதமாகத்தான் இருக்கின்றது. எல்லோரும் ஒன்றை இழந்து விட்ட பின் னர்தான் யோசிக்கிறார்கள்; இன்னும் சற்றே அதனை அடைந்திருக்கலாமென. இழத்தலின் வலி வார்த்தைகளுக்குள் அடங்காதது. அதுபோலத் தான், அடைத லின் மகிழ்ச்சியும்.

எல்லோருக்கும் பிரியமான விடயங்கள் இந்த உலகில் ஏராளம் இருக் கின்றன. எல்லோரும்   அவற்றை மிகப் பத்திரமாகப் பாதுகாத்து  வைத்தி ருக்கிறார்கள். அதன் வசீகரத்தைச் சிதைக்காமல் கவனமாய் இருக்கி றார்கள். அவற்றை விட்டுக் கொடுப்பது பற்றிய பேச்சே அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

சொத்து, செல்வம், மனைவி, பிள்ளைகள் எனத் தொடரும் ஆயிரம் விடயங்கள் அனைவரது வாழ்விலும் அழியாத தடயங்கள். வாழ்க்கையின் வசீகரத்தை அவையெல்லாம் காவு கொண்டு விடுகின்றன. எம்மை அவை களின் காலடியில் உட்கார வைத்து விடுகின்றன. அதனால்தான் அவை இறைவனின் சோதனைப் பொருட்களாக்கப்பட்டுள்ளன என்று நினைக்கத் தோன்றுகின்றது.

இந்த உலகில் அனைத்துமே ஏதோ ஒன்றை இழந் துதான் வாழ்ந்து  கொண்டிருக்கின்றன. இழத்தலே வாழ்வை அர்த்தப்படுத்துகிறது; வசந்தப் படுத் துகிறது.

வெளிச்சம் இரவுக்காக தன்னை இழக்கிறது. இரவு வெளிச்சத்திற்காக தன்னை இழக்கிறது. மழை வெயி லுக்காக, வெயில் மழைக்காக தம்மை இழக்கின்றன. இழப்பதும் அடைவதும் என வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் மத்தியில் இருப்பது புதிர்மிகுந்த ஒரு கோடு.


உயர் இலக்குகளை, சாதனைகளை அடைவதற்காக இந்த உலகில் எத் தனையோபேர் என்னென்ன வெல்லாமோ இழந்திருக்கிறார்கள். அந்த இழப்பே அவர்களது சாதனையை அடைய வைத்திருக்கின்றன. சிகரங்களை தொட வைத்திருக்கின்றன. வெற்றிகள் எப்போதும் முயற்சியினாலேயே சாத்தியப்படு கின்றது. முயற்சி என்பதென்ன? ஒரு மிகப் பெரிய இழப்புதானே அது.

வாழ்வின் உன்னத தருணங்களைக் கண்ட மனிதர்களின் வாழ்வைப் படித்துப் பார்க்கும்போது அவர்களின் இழப்பின் கணங்களை உணர்ந்து பார்க்க முடிகி றது.

தீக்குச்சி தன்னை இழந்துதான் வெளிச்சம் தருகிறது. மெழுகுவர்த்தி தன்னை உருக்கித்தான் ஒளி கொடுக்கிறது. அவை தம்மை இழக்கும் போது ஆயிரம் விளக்குகளை எரிய வைத்து விடுகின்றன. இழத்தலின் அர்த்தம் என்பது அதுதான். தியாகம் என்பது அதுதான்.

ஒரு தாய் தன் பிள்ளையின் பிரகாசமான எதிர்காலத்தைக் காண எவ்வளவோ இழக்கிறாள். தன் வாழ்க்கையை அர்ப்பணித்துத்தான் தன் பிள்ளையை ஆளாக் குகிறாள். அவள் தன் அடைவைக் காணும் போது எல்லா இழப்புகளையும் மறந்து போகிறாள். சந்தோசத்தை அணிந்து கொள்கிறாள்.


இழந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலியும் வேதனையும். அது எல்லோராலும் முடிவதில்லை. ஏனெ னில், எல்லாத் துயர்களையும் ஒரு வன் அதற்காக சகிக்க வேண்டி யிருக்கும். எதிர்பார்ப்புக்களை தூர வைக்க வேண்டியிருக்கும். கஷ் டங்களைச் சுவைக்க வேண்டி யிருக்கும்.

தியாகம் என்பது மாபெரும் இழப்பாகும். தன் பிரியங்களை இன்னுமொன்றிற் காக இழப்பதே தியாகம் ஆகிறது. எனவேதான், மனிதனிடமிருக்கும் மிகப் பெறுமதியான, அவனது பிரியமான உயிரை அல்லாஹ் சுவனத்திற்கு இணை யாக வைத்துள்ளான். அதை அவனுக்காக இழப்பானாயின் இறைவன் சுவர்க் கத்தைப் பரிசளிப்பான்.

இழத்தல் என்பது தொலைந்துவிடுதல் என்பதல்ல. ஒன்றைக் கொடுப்பது என்பதுமல்ல. தனக்கு மிக விருப்பமானதை தன் சம்மதத்துடன் விட்டுக் கொடுப்பதே இங்கு இழப்பாகும்; தியாகமாகும். அதனைத்தான் இப்றாஹீம் (அலை) அவர்கள் செய்தார்கள். அல்லாஹ் தன் நண்பனைத் தெரிவு செய்ய வைத்த பரீட்சை வித்தியாசமானது. இப்றாஹீம் நபியவர்கள் தனது நண்ப னுக்காக வாழ்க்கையையே இழந்தார்கள். அந்தத் தியாகத்திற்கு ஈடாக இந்த உலகில் எந்த நண்பனும் தன் நண்பனுக்குத் தியாகம் செய்துவிட முடியாது.

நட்பு, வார்த்தைகளால் வாழ முடியாது. அது அழகிய தியாகத்தினாலும் உண் மையான இழப்பினாலும்தான் உயிர்பெறுகிறது. தனது நண்பனை, அது தான் அல்லாஹ் அப்படிச் சோதித்திருக்கிறான். தியாகங்களால்தான் உறவுகள் வாழ்கின்றன. கொள்கைகள் வளர்கின்றன.

மகத்தான சாதனைகளின்பின் மறைந்திருக்கும் தியாகங்களையும் கண்ணீரை யும் புரிந்துகொள்ளத் தான் முடியுமே தவிர, தோண்டிப் பார்க்க முடியாது. ஏனெனில், இழத்தல் என்பது விளம்பரம் அல்ல.

உண்மையான தியாகம் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விடுகி றது. சதாகாலமும் அது தன்னை நினைவு படுத்துகிறது. இன்னும்பலரை அது உருவாக்குகிறது. அமைதி நிலையை கலைக்கிறது.


தியாகம் ஒரு வார்த்தையல்ல. அது ஒரு செயல். செய்துபார்க்கும்போதுதான் ஒருவர் அதனை அனுபவிக்க முடிகிறது. இறைவனுக்காக நாம் எதனை இழந் திருக்கிறோம் என்ற கேள்வி முன்வந்து நிற்கிறது. இறைவனின் தூதர்கள் தம் வாழ்வையே அர்ப்பணித் திருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை தியாகங்க ளாலே அழகுபெறுகிறது. தியாகம் ஒரு புதிய வாழ்வை எழுதுகிறது. அதற்கு வனப்பைத் தருகிறது. எமக்குப் புதிய பாதையைக் காட்டித்தருகிறது.


நினைப்பதனால் எதுவும் நடப்ப தில்லை. வெறுமனே நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கற்பனை செய்ப வர்கள் இந்த உலகிலே எதனையும் சாதிக்கவில்லை. நிலத்தில் கால் வைத்தவர்கள்தான் ஜெயித்தார்கள், சாதித்தார்கள்.


சுவர்க்கத்தை அடைந்துகொள்வதுதான் இந்த உலகில் மனிதனுக்கு இருக்க வேண்டிய இறுதி இலக்கு. அப்படியானால் எம்மிடமிருக்கும் மிகப் பெறு மதியான, பிரியமான விடயங்களை இறைவனுக்காக இழக்காத வரை அதனை அடைய முடியாது.

வாழ்க்கைப் பாடத்தில் தியாகம் ஒரு முக்கிய அத்தியாயம். அனைவரும் அதனைக் கட்டாயம் கற் றுக் கடந்துதான் ஆக வேண்டும். கஷ்டம், துன்பம், இழப்பு, வேதனை இல்லாத வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கப் போவதில்லை. அர்ப்பணங்களே வாழ்க்கையில் நிம்மதியைக் கொண்டு வருகின்றன. மகிழ்ச்சி என்பது நிலையானதல்ல. அது வரும் போகும், போகும் வரும். ஆனால், நிம்மதி என்பது எப்போதும் நிலையாக இருக்கக் கூடியது.

நாம் இவ்வளவு காலம் வாழ்ந்தோம், எவ்வளவு பெற்றோம் என்பதை விட எவ்வளவு கொடுத்தோம், அர்ப்பணித்தோம் என்பதுதான் முக்கியம். தியாகம் என்பது நாம் ஓய்வாக இருக்கும்போது செய்வதல்ல. அது நம் வாழ்வின் பிரதான ஓட்டத்தில் இடம்பெற வேண்டிய ஒன்று. இழக்க முடியாத ஒன்றை இழப் பதுதான் தியாகம். கொடுக்க முடியாத ஒன்றை கொடுப்பதுதான் அர்ப் பணம். எப்போதும் பிடிக்காதவற்றை இழப்பதைவிட மிகவும் பிடித்தவை களை இழக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் தியாகம்.