Saturday, October 20, 2012

மழைக் குறிப்பு




நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை நாள் ஒன்றில் வீட்டில் இருக்கிறேன்.நீண்ட கோடைக்குப் பின் வந்த மழை என்பதால் யாரும் மழையை கடிந்து கொள்ளவில்லை.எல்லோர் மனதிலும் ஒரு ஆனந்தம் மிதந்து கொண்டிருக்கிறது.ஒரு மழை நாளில் அமைதியாய் வீட்டில் இருப்பதற்கு இப்போது அரிதாகத்தான் சந்தர்ப்பம் கிடைக்கிறது.வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொண்டு மழையைக் காண்பது ஒவ்வொரு வயதிலும் நடப்பதுதான்.ஆனால் அது ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு அனுபவங்களாக நிகழ்கிறது.

சிறுவனாக இருந்த நாட்களில் மழை பெய்யும் போது காகிதக் கப்பல் செய்து விளையாடும் நினைவு எப்போது மழை பெய்தாலும் நினைவுக்கு வருகிறது.ஆனால் இந்த வயதில் ஒரு காகிதக் கப்பலை செய்து நீரில் விட மனது நினைப்பதேயில்லை.வீட்டில் திட்டு வாங்குவோம் எனத் தெரிந்தும்,கைகளில் குடையிருந்தும் நனைந்து கொண்டே இந்த வானத் திற்குக் கீழ் திரிந்த நாட்களைத் தொலைத்து எத்தனை வருடங்க ளாகின்றன.இருந்தும் அப்படிச் செய்து பார்க்க மறுபடி நினைத்ததில்லை. வெறித்தபடி மழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அவ்வளவுதான்.



பேரூந்து அல்லது ரயிலில் இருந்து மழையைப் பார்ப்பது மழையோடு பயணிப்பதைப் போன்றது.பயணம் முழுக்க “இறங்கும் போது எப்படியாவது மழை நின்று விட வேண்டும்“ என்ற பிரார்த்தனையோடே மனது இருக்கும்.வேகமாக ஜன்னலில் பட்டுத் தெரிக்கும் ஒரு துளி மழையானது எம்மைப் பாதிக்கும் ஒரு கவி வரி போலவே இருக்கின்றது.ஜன்னலில் படிந்திருக்கும் துவானத்தில் நம் பெயரையோ நமக்குப் பிடித்தவர்களின் பெயரையோ யாரும் காணாத வன்னம் எழுதி அழித்து விடுகிறோம்.ஆனால் குழந்தைகள் அதன் பாட்டிற்கு எழுதிக் கொண்டிருக்கின்றன.

ஒரு மழைநாளில் இந்தப் பிரபஞ்சமே நனைகிறது.மனிதர்கள் எப்படியாவது தம்மை மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.ரயிலுக்குள் அமர்ந்திருக்கிறேன் முழு ரயிலும் நனைகிறது.ரவிக்குமாரின் இந்தக் கவிதை வரிகளோடு என் நினைவும் அதன் பயணத்தைத் தொடர ஆரம்பிக்கிறது.

மழையில் நிற்கும் ரயிலை விட
சோகமானது வேறெதுவும் உண்டா
என்று கேட்கிறாய்
தண்டவாளம் எப்படி மறந்தது உனக்கு.



Tuesday, October 9, 2012

இறந்த பின்பும் வாழ்தல்...

சின்ன வார்த்தைகள்.சலனம் தரும் அர்த்தங்கள்.நண்பர் பகல்நிலவனின் மொழிபெயர்ப்பில் கீற்றில் வெளியானது.உங்களுடனும் பகிர நினைத்தேன்.


ஆனந்த் பட்வர்தன் பல பட்டைகள் கொண்ட வைரம் போல ஒரு மின்னும் போராளி. ஆங்கில இலக்கியம், சமூக வியல், தொடர்பாடல் (communication) துறை களில் பட்டம் பெற்றவர்.தனது மாண வப்பருவம் தொட்டே வல்லாதிக்க எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, சனநாயகம் & குடிமக்கள் உரிமைக்கான போராட்டம், அணுகுண்டு தேசியவாத எதிர்ப்பு, ராணு வமயமாக்க எதிர்ப்பு, ஹிந்துத்வ ஃபாஸிச எதிர்ப்பு, தொடர்ச்சியற்ற நிலையற்ற மேம் பாட்டு எதிர்ப்பு, வகுப்பு நல்லிணக்கம், நகர்ப்புற சேரிவாசி களுக்கான வாழ்விட உரிமை, கிராமப்புறம் & கல்வி வளர்ச் சிக்காக உழைத்தல் என அவரது பொது வாழ்வின் பட்டியல் நீள் கின்றது.

தெருவில் இறங்கி மக்களுக்காகவும், நீதிக்காகவும் போராடிய ஆனந்த் பட்வர்தன் அவற்றை கீழ்க்கண்ட திரைப்படங்களின் வாயிலாக வரலாற்று ஆவணங்களாகவும் பதிந்து விட்டார்.

ராம் கே நாம் {கடவுளின் பெயரால்1992},
பித்ர புத்ர தர்ம யுத்த (தந்தை மகன் புனிதப்போர் 1995)
நர்மதா டயரி[1995)
ஜங்க் அவ்ர் அமன்{ போரும் அமைதியும் 2002}

அவரின் மிக சமீபத்திய வெளியீடான ஜய் பீம் காம்ரேட் என்ற படமானது 1997 ஆம் ஆண்டு நடந்த காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தலித்கள் தொடர்பானது.அவர் மொத்தம் 16 ஆவணப் படங்களை எடுத்துள்ளார். அவைகள் 31 உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளை பெற்றுள்ளன.
நடுவண் திரைப்பட தணிக்கை வாரியம், தூர்தர்ஷன் ஆகிய அரசு நிறுவனங்கள் விதித்த தடைகளை உடைத்தெறிந்து அவரின் பிரபலமான எட்டுப்படங்கள் (ராம் கே நாம், ஜங்க் அவ்ர் அமன், பித்ர புத்ர தர்ம யுத்த அடங்கலாக) வெற்றிகரமாக நாடெங்கும் திரையிடப்பட்டது.
அவருடனான நேர்காணல் The Hindu, Metroplus, September 29,2012 நாளிதழில் வெளி வந்தது. அதன் மொழியாக்கத்தை தருகின்றோம்.

வரலாற்று நாயகர்களில் எவரோடு நீங்கள் உங்களை கூடுதலாக அடை யாளப்படுத்துவீர்கள்?

யாரை முன்னோடியாகக் கொள்கின்றோம் என்பதும் யாருடன் அடையாளப் படுகின்றோம் என்பதும் வெவ்வேறானவை. இரண்டு வகையானவை. காந்தியுடன் நான் வளர்ந்தேன். மார்க்ஸையும் அம்பேத்கரையும் பின்னர் கண்டடைந்தேன். எனது முன்மாதிரி என்பது இவர்களின் கலவைதான் என்றாலும் அவர்களில் வரலாற்றின் புரிதல் வழியாக தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் வலிமை படைத்தவரே எனது முழுமையான முன் மாதிரியாகும்.
தன்னுடைய மனசாட்சியை நச்சரிக்கக்கூடிய, இன்பத்தையே நோக்கமாகக் கொண்ட ஒருவரோடுதான் என்னை நான் அடையாளப்படுத்த முடியும். இதற் கு எடுத்துக்காட்டாக சாப்ளினைக் கூறலாம்.

வாழும் மனிதர்களில் யாரை நீங்கள் மிகவும் மதிக்கின்றீர்கள்?

தற்சமயம் சுப.உதய குமாரைத்தான் மிகவும் மதிக்கின்றேன். இவர் நீதி நியாயத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் கூடன்குளம் அரக்கனுக் கெதிராகவும் வலுவான சமரை முன்னெடுத்து செல்லுகின்றார்.
  
உங்களுக்குள்ளேயே நீங்கள் மிகவும் வருந்தும் தனித்த பண்புக்கூறுகள் எவை?

தன்னலமும் தன்னை மையப்படுத்துதலும்தான். மிகக்குறைந்த அளவில்தான் என்றாலும் பொறாமைக்கு எதிராகவும் சிந்தனையற்ற விமர்சனத்திற்கு எதிரா கவும் கூடுதல் கூருணர்வுடன் இருத்தலும்தான். அதை விட்டு விட்டு நான் லட்சக்கணக்கான உடன்பாடான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக என்னிடம் உள்ள வருத்தமளிக்கக்கூடிய பண்பாக சோம் பேறித்தனம்தான் என சொல்ல நான் முனைந்தாலும் இவ்வுலகிற்கு சோம் பேறித்தனம்தான் சிறந்தது.

நாம் எல்லோரும் வேகத்தை குறைக்க வேண்டும். அத்துடன் குறைவாக செயல்பட வேண்டும்.

பிறரிடம் இருக்கக்கூடிய வருந்தக்கூடிய அம்சங்களாக நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள்?

மனிதாபிமானமின்மை, கொடூரம், மனக்காழ்ப்பு ஆகும். இவ்வகையான வக்கிரங்களுக்கு நுணுகிக் காணக்கூடிய ஒரு சார்பு நலம் அல்லது மதி கெட்ட நடத்தை இயல்பாகவே இருக்கும். ஆனால் துயர் தரும் தரும் விடயம் என்னவெனில் இவைகளுக்கு ஒரு விளைவு இருக்கும். அத்துடன் அந்த வளை யம் நீடித்ததாகவும் இருக்கும்.

உங்களின் மிகப்பெரும் ஊதாரித்தனம் எது?

காலாவதியாகக் கூடிய சாதனங்களை எனது திரைப்படங்களை முடிக்கும் முன்னர் வாங்குவதாகும். நவீன தொழில் நுட்ப விஷயங்களில் நான் பின் தங்காமல் இருப்பதற்குள்ள பொருத்தமான வழி என்னவென்றால் அத்தகைய சாதனங்களை நான் வாடகைக்கு எடுப்பதாகும். ஆனால் ஒரு படத்தயாரிப் பாளாராகிய நான் படப்பிடிப்பை முற்கூட்டியெல்லாம் திட்டமிட இயலாது. நான் எனது போக்கிலேதான் படத்தயாரிப்பு வேலைகளை செய்வதை நான் விரும்புகின்றேன். எனவே நான் தயங்குவதில்லை.


 மகிழ்ச்சி என்கின்ற உணர்வு தொடர்பாக தங்களின் கருத்தென்ன?

மகிழ்ச்சி என்பதை நினைக்கும் பட்சத்திலேயே அது எளிதாக அழியக்கூடியது. சென்ற காலத்தை மீட்டிப் பார்க்கும்போது மகிழ்ச்சி என்பது நினைவிற்கு வரக்கூடியது.
நீண்ட காலத்திற்கு முன் நான் எழுதிய கவிதையின் வரிகள் எனக்கு நினை விற்கு வருகின்றது.

“பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கேட்டார்
எங்களில் மகிழ்வாக இருப்பவர்கள்
கைகளை உயர்த்தட்டும்
நான் எனது கையை உயர்த்தினேன்
வேறெவரும் கைகளை உயர்த்தவில்லை
மகிழ்வாயிருத்தல் என்பது
மிகக்கடினமான ஒன்று என்ற
முடிவிற்கு வந்தேன்”.

உங்களுக்கு பிடித்தமான பயணம் எது?

முதலில் பயணம் என்பது வார இறுதியில் எனது பெற்றோர்களை காணச் செல்வதாக இருந்தது. அவர்கள் காலமான பிறகு அது போன்ற பிடித்தமான பயணங்கள் என்று எதுவும் இல்லை..
நான் முன்னர் கூறியது போன்று மகிழ்ச்சி என்பது சென்ற காலத்தை மீட்டிப் பார்ப்பதில்தான் உள்ளது எனக் கூறுவேன்.
இன்றிலிருந்து சில வருடங்கள் கழித்து என்னிடம் நீங்கள் கேட்டால் தற் காலத்தில் நான் மேற்கொள்ளும் பயணங்கள் பிடித்தமானவையாக இருக்கும் என விடையளிப்பேன்.

உங்களுக்கு பிடித்தமான ஓவியர் யார்?

ஒரே ஒரு ஓவியரையே காலாகாலத்திற்கும் அவர்தான் பிடித்தமானவர் எனக் கூற முடியாது. ஆனால் தற்சமயம் எனக்கு பிடித்த ஓவியர் யாரெனில் ராம்கிங்கெர் பைஜ் என்பவராவார். அவர் சாந்தி நிகேதனில் எனது தாயாரின் ஆசிரியராக இருந்தவர். சாந்தி நிகேதனை சுற்றிலும் வாழ்ந்த தலித்துகளும் ஆதிவாசிகளும்தான் அவரின் படைப்புகளுக்கு தூண்டுதலாக இருந்தார்கள்.

மிகைப்படுத்தப்பட்ட ஒழுக்க பண்புகளாக எவற்றை நீங்கள் கருது கின்றீர்கள்?

உடற் துணிவு, நாட்டுப்பற்று, மத உணர்வு,

எந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் பொய்யுரைப்பீர்கள்?

பிறரை காயப்படுத்தாமலிருக்க அறிந்தே பொய் சொல்லுவேன். நான் காயப்ப டாமலிருக்க என்னையறியாமலே பொய் கூறுவேன்.

உங்களது தோற்றத்தைப் பற்றி மிகக் கூடுதலாக நீங்கள் விரும்பாத விஷயம் எது?

விரும்பாத விஷயம் என எப்போதும் ஏதாவது இருந்து கொண்டேதான் இருக்கின்றது.
நான் இளையவனாக இருந்த போது குள்ளமாக இருந்தது.வயதாகும்போது முடி கொட்டி உடல் தடிமனாகுதல்.
இந்த தேய்மானங்கள் என்னை ஒரு ஒழுங்கிற்கோ அல்லது உடற் பயிற் சிக்கோ இட்டுச் செல்லவில்லை என்பதுதான் துயரமானதாகும்.

நீங்கள் மிகையாக பயன்படுத்தும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எவை?

எதிர்ப்பு, போராட்டம், நீதி, சனநாயகம், வெளிப்படையான தன்மை.
இவை தேய் வழக்குகளைப்போல் ஒலிக்கின்றன. ஒருவர் இந்த கொள் கைகளை புதிய முறையில் வெளிப்படுத்துவதற்கு வழியொன்றை கண்டு பிடிக்காத வரையில் அவைகளை பயன்படுத்துவதற்கு மிகச்சிறிய வாய்ப் புகள்தான் உள்ளன.

உங்களது மிகப்பெரும் அச்சம் எது?

அச்சமென்பது முன்னர் என் பெற்றோர்களின் இறப்பை குறித்து இருந்தது. தற்பொழுது எனக்கு முன்னர் என் நேசத்திற்கு உரியவர்கள் இறப்பது பற்றிய அச்சம் எனக்கு இருக்கின்றது.
அல்லது தலையாய விஷயங்களை செய்யுமுன்னர் அல்லது அவற்றை பாதியில் செய்த நிலையில் நான் இறப்பது என்பதுவும் எனக்கு அச்ச மளிக்கக்கூடியதாகும்.

உங்களது மிகப்பெரும் துயர் என்ன ?

மகிழ்ச்சியென்பது விரைவில் கடந்து செல்லக்கூடியதாக உள்ளது. நீங்கள் நேசிக்கும் ஆட்கள் என்றென்றைக்கும் உயிர் வாழப் போவதில்லை என்ப துதான் எனது மிகப்பெரும் துயரமாகும்.

உங்களது வாழ்வின் மிகப்பெரும் அன்பிற்குரிய விடயம் எது? அல்லது அன்பிற்குரிய ஆளுமை யார்?

94 வயது வரை எவ்வித வன்ம நோக்கமும் இல்லாமல் வாழ்ந்த எனது தந்தைதான் எனது மிகப்பெரும் அன்பிற்குரியவர். முன்னுணர்வுடனும் தன் னையறிந்தும் வாழ்ந்த அவர் எப்பொழுதும் சிரிப்பை இழந்ததேயில்லை.

எப்பொழுது எங்கு நீங்கள் மிகவும் மகிழ்வாக இருந்திருக்கின்றீர்கள்?

இந்த கேள்விக்கு நான் முன்னரே விடையளித்திருக்கின்றேன் என நினைக் கின்றேன். சுருக்கமாக சொல்வதெனில் எனது இரு பெற்றோர்களும் உயி ருடன் இருந்த வரை தாக்குதல்களிலிருந்தும் காயப்படுவதிலிருந்தும் பாது காப்பு பெற்றவனாக என்னை நான் உணர்ந்திருக்கின்றேன்.

தற்பொழுது உங்கள் மன நிலை என்னவாக உள்ளது?

என்னால் முடிந்த அளவு சிறந்ததை செய்தல்.

நீங்கள் எப்படி இறக்க விரும்புகின்றீர்கள்?

உடனடியாக இறப்பைப் பற்றிய கவலையின்றி வலியின்றி எனது இறப்பு என்பது நிகழ வேண்டும்.
நான் காலமான பிறகும் நீண்ட காலத்திற்கு பயனளிக்கக்கூடிய விடயங்களில் பங்களிப்பதற்கு முன்னர் விரைவாக நான் இறந்து போக விரும்பவில்லை.

மொழியாக்கம்: பகல் நிலவன் ( pakalnilavan@gmail.com)

Monday, October 1, 2012

வறுமை

நண்பர், சாளை பஷீரின் கவிதை ஒரு பகிர்விற்காக...






நான் தவழ்ந்த தெருவது
தெருவை மறைக்கும் வீட்டு முகப்புகள்


எல்லா திசைகளையும் மறைத்து நிற்கும்
மலைகளையொத்த கட்டிடங்கள்

வசீகரிக்கும் கம்பீர மலைப்பொதும்பில்
வசிக்கும் குருவியின் கூடு போல
அந்த வீடிருந்தது.

பெருநாள் கொடைக்காக கதவை தட்டினேன்
அறியாத முகமாகயிருக்கும் என எண்ணிய கணத்தில்
அறிந்ததாயிருந்தது அந்த மனிதரின் முகம்

என் பால்யத்திலிருந்தே பார்த்துப் பழகிய முகம்
அவரின் வறுமையின் வேர்களை அறிந்திடாத
அறியாமையை எண்ணி தலை கவிழ்ந்தேன்

விறைத்த பிணமாய் விறகு
வறுமையில் எரிந்து கொண்டிருந்தது

அவரின் ஒற்றையறை வீட்டில்
கரும்புகை எல்லா திசைகளிலும்
துயரின் இருளாய்ப் படிந்திருந்தது

கண்ணியம் மறுக்கப்பட்ட வாழ்வின்
தடயங்கள் அங்கு தெறித்து கிடந்தன

வாழ்வை மறுத்தவர்கள் மீது
அவருக்கு எவ்வித
முறையீடுமில்லை

சேவல்களே கூவாத தேசத்தில்
விடியலே இல்லாமல் போய் விடுமா?
விசும்பல்கள் இல்லையென்றால்
வேதனை இல்லையென்று ஆகி விடுமா?.

தடுமாறும்போதும் தன்மானத்தால்
கண்ணீரை புதைத்து வைத்து தவிக்கிறது
இரக்கத்தை எதிர்பாரா மனசு
ஒரு புன்னகையால் எல்லாவற்றையும்
சமன் செய்யும் அன்பிற்காக!!