Tuesday, December 18, 2012

மரங்கள்

வைக்கம் முஹம்மது பஷீரின் இக்கதையை எட்டு வருடங்களின் பின்னர் மறுபடியும் வாசித்த போது உங்களுடன் பகிராமல் இருக்க முடியவில்லை


ஒரு அழகிய மரத்தைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன். குழந்தைகளெல்லாம் இப்படிப் பக்கத்தில் வந்து இருங்கள். என்னால் சத்தம் போட்டுச் சொல்ல முடியாது. வயசு ரொம்ப ஆயிருச்சல்லையா சீக்கிரம் செத்துப் போயிருவேனென்று தோன்றுகிறது. இதில் ஒன்றும் சங்கடமில்லை. நீங்கள் எல்லோரும் தோன்றுவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே நான் இங்கே வந்துவிட்டேன் என்று ஞாபகமிருக்கட்டும். என்றாலும், அழகான இந்த உலகத்தை விட்டுப் பிரிய கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கிறது. குழந்தைகளே அழகாக இருப்பதற்கு என்ன காரணமென்று, பர்வதங்கள், மலைகள், குன்றுகள், நதிகள், வனங்கள், பாலைவனங்கள், சமுத்திரங்கள், உயிரினங்கள் இவைகளெல்லாம் விட ரொம்ப ரொம்ப அழகான விஷயம் எதுவென்று தெரியமா? மரங்கள். இவைகளெல்லாம் கடவுளின் தனிப்பட்ட அனுக்கிரகம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனிதர்களை விட மேலானவை மரங்கள். எனக்கு இந்த உலகத்திலுள்ள எல்லா மரங்களைப் பற்றியும் உங்களோடு சொல்ல வேண்டும் என்றிருக்கிறது. ஆனால், எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏராளமான மரங்களைப் பார்த்திருக்கிறேன். நானே நிறைய நட்டி வளர்த்துமிருக்கிறேன். நீங்கள் கவனமாயிருந்தால் நான் இப்போது சொல்லப் போகிற கதையை விட அழகான கதைகளை நீங்களும் சொல்ல முடியும்.

அழகான ஒவ்வொரு கதைதான் ஒவ்வொரு மரமும்.
நீங்கள் ஒரு மரத்தைத் தொடும்போது பெரும்பாலும் ஒரு மனிதரைத் தொடுவதாகவே நினையுங்கள்.

உங்களால் பார்க்கவியலாத ஒரு மனிதனின் உழைப்பு ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும் இருக்கிறது.

ஒரு மரம் நட்டு வளர்ப்பது ஆயிரம் புண்ணிய ஸ்தலங்களின் தரிசனத்தை விடவும், ஆயிரமாயிரம் பிரார்த்தனைகளை விடவும் மேலானது. நான் சொல்கிற இந்தக் கதையில் நிறைய மகாத்மாக்களுண்டு. இவர்களில் யதார்த்த மகாத்மா யாரென்று நீங்கள் கண்டு பிடியுங்கள்.

கதை இதோ வருகிறது. ஒரு இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பு கதை துவங்குகிறது. அன்று இந்தியா ஒன்றாகவிருந்தது. பாகிஸ்தான் உண்டாகவில்லை. இந்தியாவில் சில பகுதிகளில் சுற்றி கேரளத்திற்கு வந்து ஒரு நகரத்தில்  இலக்கியவாதியாக, வசித்து வருகிறேன். 

பாதையருகில் உள்ள ஒரு சிறய வீடு. அதன் மூலையிலுள்ள ஒரு சிறிய அறை, அதில் பெட்டி, படுக்கை, ஒரு சாய்வு நாற்காலி, ஷூஸ், ஒரு பிரிமஸ்டவ், கொஞ்சம் பாத்திரங்கள் எல்லாம் நானே செய்து கொள்வேன். சமையல், சவரம், துணி துவைத்தல், ஏதோ செய்து சாப்பிடுவேன். நிறைய எழுதுவேன். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவில்லையே. ஒரு பைப்பு.

இந்த அறைக்கு அடுத்த ரோட்டிலிருந்து அக்கம் பக்கத்திலுள்ள வீட்டுக்காரர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, ஆனால், என்னுடைய முக்கியமான வேலை பைப்பு பூட்டுவதுதான். யாராவது தண்ணீர் எடுத்துவிட்டு பைப்பை பூட்டாமல் போவார்கள். தண்ணீர் சர்ரென்று வீணாக ஒழுகிக் கொண்டிருக்கும். நான் எழுந்து சென்று பைப்பைப் பூட்டுவேன். இந்த பைப்பு பூட்டலை ஒரு நாளைக்கு பத்து நாற்பது தடவை செய்ய வேண்டியிருக்கும். சில நேரம் பாதி ராத்திரியில் உறக்கதிலிருந்து எழுந்து சென்று பூட்டிவிட்டு போவேன். இது ஜனங்களுடைய கவனக் குறைவால் ஏற்படுகிற நிகழ்ச்சி. கடவுளின் மகத்தான கருணையல்லவா தண்ணீர். இது எல்லா உயிரினங்களுக்கும் மரங்களுக்கும் வேண்டும். இதை வீணாக்கக் கூடாது. 

இந்த அறிவு ஏன் ஜனங்களுக்கு உண்டாகவில்லை. இதைப்போல, குப்பை கூளத்தை அள்ளி சாலையில் போடுவதும் சாலையில் மலஜலம் கழிப்பதும் செய்யாமலிருக்க வேண்டும். வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இங்கிலீஷில் ஏதோ சொல்வார்களே “சிவக் சென்ஸ் என்றோ, வேறோ, அது நமக்கு கொஞ்சம்கூட இல்லை. (இன்று பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் போய் விட்டது.

 இந்தியா சுதந்திரமடைந்து விட்டது. நாம் தான் நம்முடைய நாட்டை ஆட்சி செய்கிறோம். என்றாலும் பொதுச் சொத்துக்களை நஷ்டப்படுத் தாமலிருக்கவும், வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும் நாம் படிக்கவில்லை. மனிதன் மாறாமல், கவர்ன்மெண்ட் மட்டும் மாறியதனால் பெரிய காரியங்கள் எதுவும் நடக்கப் போவதில்லை)
அந்த பைப்பு காரணமாய் கடைசியில் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. உறக்கத்திலிருந்து திடுக்கிட்டெழுந்து நான் காதைத் தீட்டிக் கொண்டே கிடப்பேன். எழுந்து சென்று பைப்பைப் பூட்டி வந்து படுப்பேன். உறக்கம் வருவ தில்லை. இந்த முட்டாள் மனிதர்கள் அதைப் பூட்டி விட்டுப் போகக் கூடாதா?

அப்படி ஒரு கடுங்கோடை காலம் வந்தது. மத்தியானம் ரெண்டு மணியிருக்கும். வழக்கம் போல யாரோ ஒரு நீசன் பைப்பைத் திறந்து விட்டான் ஒரு வேளை நீசியோ?

நான் அசையவில்லை. வழியில் போகிறவர்களில் யாராவது பகுத்தறிவுள்ளவன் இருக்கிறானா என்று பார்க்கலாம். திறந்த பைப்பிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆட்கள் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் கவனிக்கவில்லை. நான் அந்த மனிதர்களை எண்ணத் தொடங்கினேன். ஒன்று... இரண்டு.. அப்படி இருபத்தியொரு பேர்களை எண்ணினேன். அவர்களெல்லாம் கடந்து போய்விட்டார்கள். அப்போது தூரத்திலிருந்து இருபத்தியிரண்டாவது ஆள் வந்து கொண்டிருந்தான். வெளி மாநிலத்தவராக இருக்க வேண்டும். நடை ரொம்ப வேகமாயிருந்தது. தலையில் ஒரு தொப்பி, காக்கிச்சட்டை, காக்கி    ஹாஃப் டிரவுசர்ஸ், கால்களில் கான்வாஸ் ஷூ, முதுகில் ஒரு பெரிய காக்கி கிட்பேக், கையில் ஒரு தடி, தாடி மீசை வளர்ந்திருந்தது.

அந்தப் பயணி தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த பைப்பிற்குப் பக்கத்தில் நடந்து போய் விட்டார். இல்லை. அவர் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பின்பு பைபின் அருகில் சென்று பைப்பைப் பூட்டினார். பின்பு ஏதோ யோசித்தார். ஒரு நிமிஷம் தயங்கி, தடியை கீழே வைத்திருந்த கிட்பேக்கின் முதுகில் ஹாட்டுக்கு அருகில் வைத்தார். தலை முழுவதும் வழுக்கை, தலையைத் தடவிக் கொண்டு ஒரு நிமிஷ நேரம் நின்றார். சுற்றிலும் பார்த்துவிட்டு எதிரேயுள்ள கொல்லைப் பக்கமாய் போனார். 

அங்கே ஒரு அஞ்சு தென்னையும், நிறைய குறும்புதர்களும் மண்டியிருந்தன. அங்கே சென்று அவர் ஒண்ணுக்கிருந்தார். அவர் வேகமாய் திரும்பி வந்து கிட்பாக்கைத் திறந்து அதிலிருந்து அலுமினியப் பாத்திரத்தை எடுத்து பைப்பைத் திறந்து குளிர்ந்த நீரைப் பிடித்துக் கொண்டு கொல்லைப் பக்கமாய் போனார். அவர் அந்த வாடி வதங்கிய செடியின் அருகில் அமர்ந்து அதனைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டிப் பாத்தி கட்டி, அந்தச் செடிக்குத் தண்ணீர் விட்டார். ஒரு மூன்று தடவை அவர் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் ஊற்றினார். பின்பு வந்து ஷூஸ் கழற்றி கைகால் முகம் கழுவினார். 

நான் எழுந்து அவருக்கு முன்பாகவே கொல்லைப் பக்கம் சென்று அவர் தண்ணீர் ஊற்றிய செடியைப் பார்த்தேன். ஒரு சிறிய கன்று, ரெண்டு மூன்று கிளைகளிருந்தன. நான் அவருக்கருகில் போய் நின்றேன்.
இந்த மகாத்மா யாரு?

அவர் ஷூஸ் மாட்டி, ஒரு பீடி கொளுத்திப் புகை விட்டுக் கொண்டே என்னைப் பார்த்தார். பின்பு சொன்னார்.

“ஏதோ ஒரு மகாத்மா மாம்பழம் தின்றுவிட்டு கொட்டையை எறிந்து வளர்ந்ததுதான் அந்த மாங்கன்று. அவர் மகாத்மாவேதான். 

இல்லையென்றால் அதைக் கொல்லைப் பக்கமாய் எறியாமலிருந்திருப்பார். அநாதையான ஒரு குழந்தையைப் போல ஆதரவில்லாமல் அது மடியத் தொடங்கியிருந்தது

நான் கேட்டேன், “நீங்கள் யார்?
அவர் சொன்னார், “சுபராம், ஒரு ஊர் சுற்றி ஒன்பது வருஷமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். கேரளம் சுற்றிப் பார்த்து விட்டு சிலோனுக்குப் போக வேண்டும்.

நான் சொன்னேன். “கஷ்டமில்லையென்றால் என் சார்பில் ஒரு டீ குடித்து விட்டுப் போகலாம்.

அதிர்ஷ்டவசமாய் என்னிடம் அப்போது ஒன்பது ரூபாய் இருந்தது. அவர் மூட்டை முடிச்சுகளுடன் என்னுடைய அறைக்கு வந்தார். நான் அவரை என்னுடைய சாய்வு நாற்காலியில் உட்கார வைத்தேன். நான் ஒரு பத்திரிகைத் தாளை விரித்து அதில் அமர்ந்தேன். பின்பு ஸ்டவ்வும், பாத்திரமும் எடுத்தேன். ஸ்டவ் பற்ற வைத்தேன்.

நான் சொன்னேன், “உங்களுடைய பாத்திரத்தில் நீங்களே தண்ணீரெடுத்து ஸ்டவ்வில் வையுங்களேன்.

சுபராம் கேட்டார். “உங்களுடைய பாத்திரத்தில் என்ன கோளாறு?
நான் சொன்னேன். “கோளாறு இருக்கு, இது ஒரு முஸ்லிம் உபயோகப்படுத்துகிற பாத்திரம். அந்த முஸ்லிம் நான்தான் பேர் பஷீர். வைக்கம் முகமது பஷீர் என்று சொல்வார்கள்.

இத்தனையும் சொல்வதற்குக் காரணமிருக்கிறது. நான் இந்த சுபராமினுடைய நாட்டில் வசித்து வருகிறேன். அங்கே இந்துவும், முஸ்லிமும் கீரியும் பாம்பும் போல இருக்கிறார்கள். அங்கே ரெயில்வே ஸ்டேஷன்களில் “இந்து தண்ணீர் “முஸ்லிம் தண்ணீர்இருக்கிறது. இந்து தொட்டதை முஸ்லிமும், முஸ்லிம் தொட்டதை இந்துவும் சாப்பிட மாட்டார்கள்.

சுபராம் கேட்டார், “பஷீர் சாகிப் என்ன வேலை செய்கிறீர்கள்?
நான் சொன்னேன். பெரிய வேலையொண்ணுமில்லை. கொஞ்சம் கதைகள் எழுதுவேன்.

“இலக்கியவாதி இல்லையா?

நான் சொன்னேன், “இலக்கியவாதியில்லை. இலக்கியத்தைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது.

“அப்புறம் என்ன தெரியுமா?

நான் சொன்னேன், “எனக்கெதைப் பற்றியும் எதுவும் தெரியாது. கொஞ்சம் கதைகள் எழுதுவேன்.

“எதைப் பற்றியும் எதுவும் தெரியாதென்றால் எப்படி எழுதுகிறீர்கள்?

நான் எழுதுவதை யார் வேண்டுமானாலும் எழுத முடியும். கொஞ்சம் அனுபவங்கள் வேண்டும். எனக்குத் தாராளமாய் அனுபவங்களிருக்கின்றன. நானும் உங்களைப் போல ஒரு ஊர் சுற்றியாய் இருந்திருக்கிறேன். அனுபவங்களிருந்தால் எந்த மடையனும் கதைகள் எழுத முடியும்.

பின்பு நாங்கள் அப்படியே பேசிக் கொண்டிருந்தோம் ரவீந்திரநாத் தாகூர், காந்தி, முகமது அலி சர்தார். பகத் சிங், மௌலானா அப்துல் கலாம் படேவ், பிரிட்டிஷ் கவர்ன்மெண்;ட், பாகிஸ்தான் வாத் என்றில்லை ஏகப்பட்ட மனிதர்களைப் பற்றியும், ஏகப்பட்ட ராஜ்யங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டவ்வில் சும்மா எரிந்து தீர்ந்து ஸ்டவ் கெட்டுப் போன விஷயம் தெரிந்ததே திடீரென அந்த இரைச்சல் நின்ற போதுதான். மௌனமாக நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தோம்.

“அதோ போகிறது டீஆகாரம் சாப்பிட்டால் என்ன?

நான் சொன்னேன். “நாம் ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாம்.

சுபராம் சொன்னார், “என்னுடைய பையில் கோதுமை மாவும், கல்லும் இருக்கின்றன. சப்பாத்தி செய்யலாம். சப்பாத்தி செய்தது நான் தான். பச்சைமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பச்சைத் தணணீர் கொஞ்சம் ஊற்றினேன். பின்பு கைவிரல்களினால் மாவைப் பிசைந்து பதமாக்கி சிறிய உருண்டைகளாக்கி, ஒரு தாளில் மாவு போட்டு ஒரு சிறிய தடியினால் உருட்டிப் பரத்தி அவருடைய கரியடுப்பில் கல்லை போட்டு சப்பாத்தி சுட்டேன். அவர் என்னுடைய ஸ்டவ்வில் என்னுடைய பாத்திரத்தில் பருப்புப் போட்டு அடுப்பில் வைத்தார். கூடவே கொஞ்சம் பச்சை மிளகாயும் போட்டார். பருப்பு வெந்தபோது உருளைக் கிழங்கும் வெங்காயமும், மிளகாய்த் தூளும் கொஞ்சம் கொத்தமல்லிப் பொடியும், சிறிது மஞ்சள் பொடியும் போட்டு எல்லாம் நன்றாக வெந்த பிறகு, நான் கீழேயிறக்கி ஒரு கரண்டி தேங்காயெண்ணெய் விட்டேன். கொஞ்சம் கறிவேப்பிலையும் போட்டேன். நாங்கள் சப்பாத்தியை தின்று விட்டு தாராளமாய் தண்ணீர் குடித்துவிட்டு ஊர் பார்க்கப் போனோம். நாங்கள் நகரத்தில் அங்குமிங்கும் நடந்த பின்பு நகரத் திற்கு வெளியிலுள்ள ஒரு மரத்தினடியில் சென்று அமர்ந்தோம்.

(கே.எம். சந்தோஷ் எடுத்து அனுப்பிய கதை
நன்றி : சமிகாலிக மலையாளம்.
வாரிக, ஜூலை 98)
வைகறை-2005



 

Monday, December 17, 2012

நீர்ப்பறவை - விளிம்புநிலை மனிதர்களின் கதையாடல்

நண்பர் பகல் நிலவன் நீர்ப்பறவை குறித்து எழுதிய திரைப்பார்வை உங்கள் வாசிப்பிற்கு...


' பற பற  பறவை ஒன்று'  என துரித கதியில் ஷ்ரேயா கோசலின் குரலில் ஒலிக்கும் பாடலில் துயரும் மகிழ்ச்சியும் மெலிதாக இளங்காற்று போல் அலையலையாய் வந்து கொண்டே இருக்கின்றது. மொத்த படத்தின் குறியீடாகவும் இந்த பாடல் விளங்குகின்றது.

 மீனவர்கள் அல்லாத தமிழர்களாலும் ஏன் ராமேஸ்வரம் இதஞ்சை மாவட்ட மீனவர்களைத்தாண்டி தமிழகத்தின் மற்ற பகுதி மீனவர்களாலும் பொது மக்களாலும் அவ்வளவாக சிந்திக்கப்படாத ஒரு அரசியலை துணிந்து வணிக சினிமாவாக எடுத்துக்காட்டிய சீனு ராமசாமியை பாராட்டத்தான் வேண்டும்.

'கடலுக்கு போய் பிழைக்கத்தெரியாதவன் ஊருக்குள்ள போய் ஓட்டல்ல எச்சி தட்டையா கழுவுவான் ? ' என்கின்ற லூர்துவின் கேள்வியில் கடல் மீதான அவரின் நம்பிக்கையின் ஆழமும் நகரத்தின் மீதான  கசப்பும் பளீரென தெறிக்கின்றது. மனிதனின் இயல்புக்கெதிராக அவன் மீது  வலிந்து  திணிக்கப்படும் வாழ்வியல் வன்முறைக்கெதிரான அருவருப்பு அந்த கேள்வியில் கசிகின்றது. இது ஒன்றே இன்னொரு கதைக்கான கருவாகத்தான்படுகின்றது.

 மகன் அருளப்ப சாமியின் குடிப்பழக்க சீரழிவினால் ஏற்படும் வேதனையில் நெஞ்சு நொறுங்கும் தந்தையாக நிற்கும்போதும் இ மகனுக்காக கட்டிய கணவனை கூட மண விலக்கு செய்ய துணியும் மனைவியின் கொந்தளிக்கும் உணர்வுக்கெதிரே கணவனாக தளர்ந்து நிற்கும்போதும்   இ அதே மகனின் சேட்டைகளினால் அன்றாடம் கூலிக்காக மீன் பிடிக்கும் வேலை பறிபோகும்போது ஏற்படும் அவமானத்தில் ஒரு வேலையாளாக உறைந்து நிற்குமிடத்திலும்  கையாலாகாத உணர்வின் பல முகங்களை தகப்பன் லூர்துவாக நடிக்கும் ராம் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தனது மகனை குடிப்பழக்கத்திலிருந்து மீட்ட அந்த மருத்துவருக்கு நன்றிசெலுத்தும் முகமாக லூர்து தனது இரு கைகளிலும் பெரிய மீன் ஒன்றை எடுத்து மெதுவாக நடந்து செல்கின்றார்.



அதை மருத்துவ மனையின் படியில் கிடத்தும்போது கண்களில் நீர் நிறைந்து விட்டது. அவர் தனது கையில் ஏந்தியிருந்தது அவரது ஆன்மாவின் ஆக உயர்ந்த உன்னதமான நன்றி காணிக்கை .

மகன் அருளப்பசாமி சொந்தமாக ஒரு மீன்பிடி படகை வாங்கி அதில் தனது தகப்பன் லூர்து சாமியின் பெயரை பொறித்துள்ளான்.


அந்த பெயரை தனது கண்களை இறுக மூடிக்கொண்டு உழைப்பின் தழும்பேறிய தனது முதிய விரல்களால் மெல்ல வருடுகின்றார் லூர்து. அந்த வருடலில் அவரின் மன நொறுங்கல் இ தளர்ச்சி இ அவமானம் அனைத்தும் மெல்ல அழிந்து போகின்றது.

கடவுளுக்கு அடுத்தபடியாக இந்த அளவிற்கு கடலையும் மீனையும் தனது ஆன்மாவோடு இரண்டற கலந்துள்ள அந்த மீனவர்களின் வாழ்வை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

அப்போதுதான் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் இ பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் மீன்பிடி இ இந்திய அரசின் சிறப்பு கடலோர மண்டல சட்டம் இகூடன் குளம் அணு உலை என கடலிலும் கரையிலும் மீனவர்களின் ஆன்மாவின் மீதும் வாழ்வின் மீதும்  தொடுக்கப்படும் தொடர் தாக்குதலை தீவிரமாக எதிர்க்க முடியும்.

15 வருடங்களுக்கு முன்னால் வங்க மொழியில்  வெளியான பழைய கறுப்பு வெள்ளை திரைப்படம் ஒன்றை காண நேர்ந்தது. அதில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாக திகழும் நதியானது ஒரு நாள் வறண்டு காணாமல் போய் விடுகின்றது. நிர்க்கதியாக நிற்கும் அந்த மக்களை கந்து வட்டி மூலம் மார்வாடி பனியாக்கள்  சுரண்டுகின்றனர். வாழ்வில் திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தையும் இ திட்டமிட்ட சுரண்டலையும்  அந்த உழைக்கும் மக்கள் ஹிந்து – முஸ்லிம் என்ற மத பேதமின்றி தங்க ளுக்குள் உதவிகள் செய்து கொள்வதின் மூலம் கடந்து செல்கின்றனர்.

 அந்த படத்தை பார்த்ததும் சிறுபான்மையினரை குறி வைத்து ஏவப்படும் கேமிராரூவெள்ளித்திரையின் வன்முறைக்கு எதிரான படங்கள் என்பது வெறும் கனவுதானா ? என்ற ஏக்கம் நிலைத்தது.

அந்த ஏக்கத்தின் விடையாகத்தான் நீர்பறவையில் உதுமான் கனியின் பாத்திரத்தைக்காண முடிகின்றது.

உதுமான் கனியாக நடிக்கும் சமுத்திரக்கனி சிறுபான்மை அரசியலை தர்க்க நியாயத்தோடு சொல்லிடும்போது  சீருடையில் நிற்கும் காவலரை பார்த்து  நீயும் சம்பளம் வாங்கும் ஒரு உழைப்பாளிதான் என்பதையும் சேர்த்து நினைவூட்டுகின்றார்.


அத்துடன் பொது மக்களின் வரிப்பணத்தில் வாழ்பவர்கள்தான் காவலர்கள் என்ற உதுமான் கனியின் வசனம் மூலம் காவல்துறையின் வானாளாவிய வரம்பற்ற அதிகாரத்திற்கு ஒரு எல்லைக்கோடு வரையப்படுகின்றது.

காவலர்களை அதி மனிதர்களாக உயர்த்திப் பிடித்திடும் மாய பிம்பத்தை கட்டமைத்து அதன் வழியே ஒரு கெடு பிடி பாணியிலான ஃபாஸிச ஆட்சிக்கு  முன்னுரைக்கும் விஜயகாந்த் இ அர்ஜுன் ஆகியோரின் நுண்ணரசியலுக்கு மாற்று இவ்வாறுதான் இருக்க வேண்டும்.

உப்பள முதலாளி இமான் அண்ணாச்சியின் தங்கையாக நடிக்கும் மனோ சித்ரா அருளப்ப சாமியின் மீதான தனது காதலை பூரிப்புடன் வெளிப்படுத்துகின்றார். அந்த காதல் மறுக்கப்படும்போது முகத்தில் வாட்டத்தை காட்டுகின்றார். அவன் வேறொருத்திக்கு உரிமையானவன் என்பதை சட்டென  புரிந்து கொண்டு இயல்பாக பழகுகின்றார். மூன்று வகையான முரணான உணர்வுகளை அவர் இயல்பாக வெளிப்படுத்துகின்றார்.

உப்பளத்திற்கு புதியதாய் வேலைக்கு வந்த இரண்டு மீனவ வாலிபர்களும் வேலையில் தாக்குபிடிப்பார்களா?  என்பதை சோதித்தறிய முதலாளி வேடத்தில் உள்ள இமான் ' உப்பள தொழிலாளிகளுக்கு காலில் ரத்தமொழுகும் . உப்பளத்தின் வெண் நிற எதிரொளியில் கண் பார்வை மங்கி விடும் ' என்கின்றார்.

உடனேயே குண்டு பையனும் இ அருளப்ப சாமியும்  ' ஏற்கனவே உப்பளத்தில் வேலை பார்ப்பவர்களின் நிலை என்ன ? ' என எதிர் வினா எழுப்பும்போது அவர்களுக்கு பழகி விட்டது என முதலாளி அசடு வழிகின்றார்.

கறுப்புக் கண்ணாடியும் இ கனத்த காலுறையுமின்றி வருடக்கணக்கில் பணிபுரியும் உப்பள தொழிலாளர்களின் அவலமும் அங்கே உடைந்து வெளியாகின்றது.

எஸ்தரின் காதலும் இ மனோ சித்திராவின் தோற்ற காதல் முயற்சியும் இ திருமணமும் படத்தின் கருவான  அரசியலை மிகைத்து விடாமல் இருக்க அது தொடர்பான கட்டங்களை அளவோடு நகர்த்துகின்றார் இயக்குனர். நகைச்சுவையும் அதே அளவில்தான் கையாளப்பட்டுள்ளது.

அருளப்ப சாமி இ எஸ்தர் தம்பதியரின் பிரிவிற்கு முந்தைய காட்சியில் காமம் சொற்களில் வழிந்தோடுகின்றது. சொற்கள் பரப்பும் நெடியை தாள முடியவில்லை. ஹாலிவுட் படங்களில் கண்ட இடத்திலும் காமமிருக்காது. ஒரு காட்சியில் மொத்த படத்திற்கும் போதுமான காமத்தால் நிரப்பி விடுவார்கள். அது போல்தான் இங்கும் உள்ளது.

அருளப்ப சாமியை எஸ்தர் நிரந்தரமாக பிரியப்போகின்றாள் என்ற நிகழ்வின் மேல் கனத்தை கூட்டுவதற்காகவும் இ பிரிவை முன்னறிவிக்கும் முகமாகவும்  மசாலாவை விரும்பும் தமிழ் மனதை நிறைவு படுத்துவதற்காகவும் காமம் மிகையாக பயன்படுத்தப்பட்டி ருக்கின்றது என்ற சமாதானத்தை இயக்குனர் சொல்லக்கூடும்.

இனி வரும் படங்களில் இந்த நெருடும் நிகழ்வை இயக்குனர் கடந்து வருவார் என நம்புவதற்கான சான்றுகள் இந்த படத்தில் நிறைய உள்ளது

வயதான எஸ்தரை விசாரணை செய்யும் பெண் காவல் அலுவலராக நடிப்பவரோடு அந்த பாத்திரம் ஒட்டவேயில்லை. அவரது நடிப்பிலும் உடல் மொழியிலும்  காவல்தன்மை மிகக்குறைவாகவே இருந்தது.

கோபத்திலும் இ நேசத்திலும் இரு எதிர் துருவ முனைகளை கண நேரத்தில் மாறி மாறி தொடுவதில் மீனவர்களுக்கு நிகர் மீனவர்கள்தான். இந்த குணாம்சமும் மீனவர் வாழ்வின் மேல் தேவாலயத்தின் ஆதிக்கம் இ மீனவரிடையே உள்ள உள்முரண்கள் ஆகியனவும் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடல் உள்ளிட்ட இயற்கை வடிவங்களை நாம் கண்ணில் காண்பது போல் கேமிராவிற்குள் உள்வாங்குவது என்பது அத்தனை எளிதல்ல. அது இங்கு சாத்தியப்பட்டுள்ளது. மேலிருந்து கீழ் காணும் காட்சிகளில் கடலும் இ காயலும் இ கரை மணலும் மாறி மாறி நிகழ்த்தும் வண்ண கலவை மனதில் நிற்கின்றது

படப்பிடிப்பு நடந்த தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு இ கூடுதாழை இ பெரிய தாழை உள்ளிட்ட கிராமங்களில் தாரங்கதாரா வேதியியல் ஆலை கழிவுகளினால் கடல் ரத்த சிவப்பில் மாறியிருந்தது. பச்சையும் நீலமுமாக எழிலூட்டும் கடல் சிவந்து போயிருந்தது என்பது மீனவர் வாழ்வின் துயரத்தை சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருந்தது.

மகன் அருளப்ப சாமியின் படகை தந்தை லூர்து நெருங்கும் போது மகனின் படகிலிருந்த பல துளைகளின் வழியே கடல் நீர் வெளியேறிக்கொண்டிருந்தது. அருளப்ப சாமியின் உயிரற்ற உடலை நாம் திரையில் காணும் முன்னரே இந்த படிமம் அந்த துயரை நமக்கு முன்னறிவிப்பு செய்கின்றது.

 படிமங்கள் காட்சிகளோடும் நிகழ்வுகளோடும் இயல்பாக ஒட்டியிருந்தது.

எளிய கிராமக்  காட்சிகளும் அங்கு வாழும் நிஜ மனிதர்களும் திரைப்படத்தை அவர்கள் பங்கிற்கு செழுமைப்படுத்துகின்றார்கள். மீதி பங்கு செழுமையை தொழில் முறை கலைஞர்களிடமிருந்து சீனு ராமசாமி  கறந்துள்ளார்.

இயற்கை வளங்களுக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பு இ விளிம்பு நிலை மனிதர்களுக்கும் இ சமூகச்சீரழிவில் உழல்வோருக்கும் மதத்தின் ஆறுதல் இ வர்க்க அரசியல் இ ஒடுக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிரான போரில் அடித்தள மக்களிடையே காணப்பட வேண்டிய ஒற்றுமை என திரைப்படம் நெடுக கதையாடல்  நிகழ்த்தப்படுகின்றது.

படத்தை பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது பரபரப்பான அண்ணா சாலையின் ஓரத்தில் 65 வயதிற்கும் மேற்பட்ட வயதுடைய மூதாட்டி சரிந்து விழுந்து கிடந்தார்.அவரின் உதடுகளில் உயிர் தனது இறுதி துளிகளில் துடித்து கொண்டிருந்தது.

அவரை சுற்றிலும் உலகம் எந்த நெருடலுமின்றி தனது போக்கில் போய்க்கொண்டே இருந்தது.

வங்காள விரி குடாவிலோ  அண்ணா சாலையிலோ  அல்லது மனிதர்கள் கூடும் பொது வெளிகளிலோ நிகழ்த்தப்படும்  மரணங்கள் மனித  நேயம் வறண்ட மனிதர்களால் எளிதில் கடக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் .

அவற்றை கலை வடிவிலும் களச்செயற்பாட்டின் உருவிலும் ஆவணப்படுத்துபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வறண்ட பாலை நடுவில் உள்ள சோலை போன்றவர்கள்.
















Wednesday, December 12, 2012

நாம் கண்ணை மூடிக்கொள்கின்றோம் என்பதற்காக மற்றவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். சீ. ரஸ்மின்  அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல்






எம். சீ. ரஸ்மின் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் விசேட பட்டம் பெற்று அதே பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தை அபிவிருத்திக்கான தொடர்பாடல் (Developmental Communication) துறையில் பூர்த்திசெய்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராகக் கடமையாற்றி வரும் இவர் 8 நூல்களை சிங்கள மொழியிலிருந்து பெயர்த்துத்தந்துள்ளார். ஊடகம், ஒலிபரப்புத் துறை குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் இவர் சமர்ப்பித்துள்ளதோடு அபிவிருத்திக்கான ஒலிபரப்பு, வானொலி நாடகம், பன்மைத்துவத்திற்கான ஒலிபரப்பு, ஒலிபரப்பு மொழியியல் (Broadcasting Linguistics)  மற்றும் பால்நிலையும் ஒலிபரப்பும் ஆகிய துறைகளில் ஈடுபட்டுவருகின்றார். சமூக வானொலி- மனித வலுவாக்கத்திற்கான ஊடகம் என்ற ஆய்வு நூலை அண்மையில் வெளியிட்டார். இந்தியா, மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வானொலி நாடகப் பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் எம். அஷ்ரப்கானின் வானொலி நாடகப் பாசறையில் வளர்ந்தவராவார். BBC யின் முன்னாள் வானொலி நாடகத் தயாரிப்பாளர் லூசிஹானா விடம் ஒரு மாதகால வானொலி நாடகப் பயிற்சியை பூர்த்தி செய்ததோடு வானொலி நாடகம் தொடர்பான சர்வதேசப் பயிற்சி நெறிகளிலும் பங்குபற்றியுள்ளார். தற்போது இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார்.

சந்திப்பு-இன்ஸாப் ஸலாஹுதீன்


வானொலி நாடகம் முஸ்லிம் சேவையில் ஏன் கைவிடப்பட்டது?


முஸ்லிம் சேவையில் சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு வானொலி நாடகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல செய்தி. உண்மையில் முஸ்லிம் வானொலி நாடகம் எமது சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய தனித்துவமான கலை. சமூகத்தில் பேசப்படாமலிருந்த பல பிரச்சினைகளின் குரலாக அமைந்தது. நாடகம் கேட்பதற் கென்று மக்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வானொலிப் பெட்டி தேடிப்போன ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் மீண்டும் வரப்போகின்றது என்கின்ற நம்பிக்கையோடு சொல்வதாக இருந்தால், நாடகம் கைவிடப்பட்டமைக்கு நிறையக் காரணங்கள் உண்டு. 


முஸ்லிம் நாடகங்களை எழுதியவர்கள் நாடு பூராகவும் இருந்தாலும் அதனை நடித்தவர்கள் பெரும்பாலும் கொழும்பையண்டியவர்கள். இதனால், நாடகத்தின் ஒரு பகுதி கொழும்பை அண்டியதாகவே வளர வேண்டியிருந்தது. சுமார் அறுபது ஆண்டு வரலாற்றில் சுமார் ஆறு பேர் மாத்தரமே முழு நேரத் தயாரிப்பாளர்களாக இருந்துள்ளார்கள். 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடகம் எழுத ஆட்கள் இல்லை என்ற நிலை உருவானது. சிறந்த பிரதிகளே வருவதில்லை. சில மூத்த எழுத்தாளர்கள் வேறு சிலரின் பெயர்களில் நாடகங்களை எழுதினர்.

தொடர்ந்து எழுதுவற்கு இளம் தலை முறையினர் தயாராக இருக்கவில்லை. இளம் தலைமுறையினர் தயார்படுத்தப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து நடிப்பதற்கும் இளம் தலைமுறை இருக்கவில்லை. இந்த வெற்றிடத்தில் என் போன்ற சிறுவர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அது தவிர, மூத்தவர்கள் வயோதிபத்தை அடைந்தபோது, வானொலி நாடகமும் அநாதையாகத் தொடங்கியது என்றுதான் சொல்வேன். இந்த பரம்பரை இடைவெளி நாடகம் கைவிடப் பட ஒரு முக்கிய காரணம். 


பரம்பரை இடைவெளியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞையும், முஸ்லிம் வானொலி நாடக பண்பாட்டினை பாதுகாக்க வேண்டும் என்ற நாட்டமும் உரியவர்கள் இடத்தில் இருந்திருந்தால் நாடகம் தொடர்ந்தும் ஒலித்திருக்கும். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன் - இறுதியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட அஸ்மி சாலியின் வரலாற்று நாடகம் ஒலிபரப்பாகாத நிலையில் நாடகத்தின் வரலாறு முடி வுக்கு வந்தது. இதன் பின்னர், நாடகம் ஒரு அநாதைக் குழந்தையைப் போலதான் பார்க்கப்பட்டது. 


ஒரு கட்டத்தில் அஷ்ரப்கான் போன்ற முன்னோடிகள் மன உழைச்சலுக்கு உட்பட்டனர். சமூகத்தின் நலன் கருதியாவது நாடகங்களை தயாரிக்க முயன்றாலும் கடைசிகால அனுபவங்கள் அவரின் உள்ளத்துக்கு அமைதியைக் கொடுக்கவில்லை. நாடகம் தயாரிக்கும் அவரது அர்ப்பணிப்பில் சிலர் குறுக்குமறுக்காக விழுந்ததை நான் கண்டிருக்கின்றேன். அத்தோடு, நாடகத் தயாரிப்பானது அதிகம் உழைப்பை வேண்டி நிற்கும் ஒன்று. அதற்கு அர்ப்பணிப்புடன், விடயதானம், சமூகத்தை நோக்கிய உண்மையான தரிசனம் மற்றும் நாடகத்தில் புத்தாக்க ஆளுமை என்பன வேண்டும். இதனால், இதில் விரும்பிக் கைவைப்பது பலருக்கு பிரச்சினைக்குரியது. நாடகம் தொடங்கப்படாமலிருக்க இதுவும் ஒரு காரணம். 


இலங்கை வானொலி கொடுப்பனவுகளை நிறுத்தியதால் நாடகம் கைவிடப்பட்டது என்ற ஒரு காரணமும் சொல்லப்படுகிறதே?  


சொல்லப்படுகின்றது. இதில் எனக்கு உடன்பாடில்லை. முஸ்லிம் நாடகத்தை உயிராக நினைத்து, ஒரு சமூகத்திற்கான சேவையாக நினைத்து பல்லாண்டு காலம் நடித்த முதியவர்களின் முதுகில் குத்துவதாவே இக்காரணம் உள்ளது. அப்போது கொடுக்கப்பட்ட 100 ரூபாய் சிலநேரம் அவர்களின் போக்குவரத்துக்குக் கூட போவதில்லை. சமூகத்தில் விழுமியங்களுக்கு உயிர்கொடுக்க தமது குரல்களை ஆண்டான்டு காலமாகத் தேய்த்துக் கொண்ட மூத்த கலைஞர்களின் உழைப்பு நூறு ரூபாய் இல்லாமல் நிறுத்தப்பட்ட தென்றால் இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். 


கொடுப்பனவே வேண்டாம் நாங்கள் ஒரு குடும்பமாகச் சேர்ந்து நடித்துத் தருகின்றோம் என்று பலர் முன்வந்தனர். நீங்கள் நாடகத்தை தொடங்குங்கள் நாங்கள் எழுதுகின்றோம் என பலர் துணிந்து சொன்னார்கள். வெறும் புகழினை சம்பாதித்துக் கொடுக்கும் தாக்கமற்ற நிகழ்ச்சிகளுக்காக கோடிகளை அள்ளியிறைக்கும் எத்தனையோ பேருக்கு இந்த நூறு ரூபாய் பெரியதல்லவே. 


நாடகம் நிறுத்தப்பட்ட காலப் பகுதியில் ஜாமியா நளீமியா, கொழும்புப் பல்கலைக் கழகம் மற்றும் வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பல இளைஞர் யுவதிகள் முஸ்லிம் நிழ்ச்சிகளில் குரல் கொடுத்தனர். அவர்கள் கொடுப்பனவை நாடி வந்தவர்கள் அல்லர். இத்தகைய ஒரு பரம்பரையினரை நாடகத்தின் பேரில் உருவாக்கியிருக்கலாம். எனவே, கொடுப்பன வுக்கும் நாடகம் நிறுத்தப்பட்ட மைக்கும் முடிச்சுப் போடத் தேவையில்லை. நாடகத்தை நிறுத்தப்பட் டது முஸ்லிம் ஒலிபரப்பின் இயலாமை. முஸ்லிம் சமூகத்தின் இயலாமை. இவ்விட யத்திலே  இலங்கை வானொலி உயர் நிர்வாகத்தை பிழை சொல்வது அதை விட இயலாமை.  


முஸ்லிம் ஒலிபரப்பை வயிற்றுப் பிழைப்புக்காக, அரசியல் இருப்புக்காக, சுய இலாபத்திற்காக பயன்படுத் துவர்களின் ஆதிக்கமும் செல்வாக்கும் அதிகமனது. இதனால், ஆளுமை மிக்க சிலர் ஒதுங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது. சிலர் தமிழ் சேவை தமது பெயருக்கு பாதுகாப்பு என்று நினைக்க வேண்டி ஏற்பட்டது. வரலாற்றுப் பொக்கிசங்களான நாடக ஒலிப் பதிவு நாடாக்கள் உள்ளடக்கப் பெறுமாண மற்ற, நிதியீட்டல் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவுக்காக அழிக்கப்பட்டன. 


இதனை அழித்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்களின் தேவை என்ன என்பதும் எல்லோருக்கும் தெரியும். இவர்களின் இந்த செயற்பாடு முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு வளத்திற்கும் வரலாற்றுக்கும் எதிரான யுத்தம் என்றே நான் கருதுகின்றேன். இந்த நிலையில் நாடகம் கைவிடப் பட்டதும் ஒன்றரை தசாப்தமாக தொடங்கப்படாமல் இருந்ததும் ஆச்சரியமல்ல. 


இலங்கை முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் என்ற கருத்தை எப்படி நோக்குகிறீர்கள்.


இப்போதைக்கு இக்கருத்தியலில் எனக்கு உடன்பாடில்லை.

ஏனைய சமூகங்களுக்கு தனியான ஊடகம் இருப்பது போல எங்களுக்கும் ஒரு ஊடகம் இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழலில் இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனியான ஊடகம் ஒன்று வருவது ஆபத்தானது. 


முதலில் நமது ஊடகப் பாரம் பரியம் அதிகாரத்தின் செல்லப் பிள்ளைகள் சிலரிடமும், அரசியல் வர்த்தகர்கள் சிலரிடமும், இயக்க முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒருமித்து நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பவர்களிடமும், சமூகத்தை உணர்ச்சி வசப்படுத்தி, ஆத் திரமூட்டி அவர்களை எடுடா பிடிடா என்று வைத்துக் கொள்ள நினைப்பவர்களிடமும், ஊடகத்தை வைத்து தமது புகழையும், சுய இருப்பினையும் பேணிக் கொள்ள நினைப்பவர்களிடமும் சிக்கியுள்ளது. இந்த சிக்கலைப் பிரிக்க முடியும் என்று நீங்கள் கருதினால், முஸ்லிம்களுக்காகத் தனியான ஊடகத்தை தொடங் கலாம்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேச வலுவான தளங்கள் இல்லை என்பதால் தனியான ஊடகம் தேவை என்பது சிலரின் கருத்து. முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஏனைய ஊடங்களில் மூடி மறைக்கப்படுவதால் தனியான உடகம் தேவை என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால்இன்றைய நிலையில் எமக்கு ஏராளமான தளங்கள் உண்டு. தொகுத்துப் பார்த்தால் ஏனைய சமூகங்களுக்கு நிகரான ஊடகம் முஸ்லிம்களின் கையில் இருக்கிறது. 


600 முஸ்லிம் உடகவியலாளர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ பத்திரிகைகள் வெளிவருகின்றன. சகோதர சமய சஞ்சிகைகளை விட மிகத் தகுதியான முறையில் இஸ்லாமிய சமய சஞ்சிகைகள் வெளி வருகிறன. பல மணி நேரங்கள் வானொலி நிகழ்ச்சி இருக்கின்றது. முஸ்லிம்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் பேசுகின்ற பல  இணையத்தளங்கள் வந்து விட்டன. இவை முஸ்லிம் ஊடகந்தான். இவற்றை விட வேறு என்ன வேண்டும்? இவற்றில் பேச முடியாத எந்த புதிய பிரச்சினையை தனியான ஊடகத்தில் பேசப் போகின்றோம். இது ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலை. முற்றிலும் சமூக நலன் கொண்ட நிலைப்பாடு அல்ல. 


இருக்கின்ற ஊடகங்களில் நாம் செயற்படும் முறைகளில் பல சிக்கல்கள் உண்டு. முதலில், எமது பிரச்சினை என்ன என்பதில் பல முரண்பாடுகள் நிலவுகின்றன. அத்தோடுபிரச்சினைகளைப் பேசுவதில் நாம் ஒருமைப்பட்டு நிற்க இன்னும் தயங்குகின்றோம். நாட்டில் எந்த சமூகத்திற்கும் வழங்கப் பட்டிராத ஒலிபரப்புக்கால எல்லை முஸ்லிம்களின் கையில் உள்ளது. இதில் 78 சதவீதம் வெறும் பயான்களை ஒலிபரப்பித் தள்ளுகின்றோம், அதிலும் ஆயிரத்து எட்டுப் பிரச்சினைகள். 


பொதுநலனை பேணிக்கொள்ள இன்னும் நாம் நமது தனிப்பட்ட சித்தாந்தங்கள் இடமளிப்பதில்லை. நமது பொதுவான பலயீனத்தை வெளிப்படுத்துவதில் நாம் அவசரப் படுகின்றோம். நமக்குள் நியதியாகி இருக்கின்ற கருத்து வேற்றுமைகளை நாம் விலை பேசுவதில் கூச்சப்படுவதில்லை. இப்படியிருக்கும் போது, தனியான ஊடகம் தொடங்கவது ஆபத்தானது. அதனை யார் தொடங்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்து, சமூகம் இன்னும் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட இது வழியாகிவிடும். 

அல்லது முஸ்லிம்களுக்கான தனித்துவமான ஊடகம் தொடங்க ஒரு வழி இருக்கின்றது. அது அதி காரத்திற்கு சலாம் போடாத, இனவாத அரசியலுக்குள் தம்மை பிடி கொடுக்காத, இயக்க சார்பினை சக முஸ்லிம் கௌரவத்திற்கு எதிராக பயன்படுத்தாத, உண்மையை சமூகத்தின் நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு பேசக்கூடிய ஒரு புத்தம் புதிய பரம்பரை தேவை. ஊடகத்தை ஒரு சமூக விடுதலைக்கான வன்முறையற்ற கருவியாக பயன்படுத்தக் கூடிய ஒரு இளம் பரம்பரை தேவை. இப்போதைக்கு அது தான் உடனடித் தேவை. அது உருவானால் தனியான ஊடகம் இல்லாமலும் அவர்கள் சாதிப்பார்கள்.


தற்போதைய முஸ்லிம் ஒலி பரப்பின் போக்கு மற்றும் அதன் தாக்கம் பற்றிச் சொல்ல முடியுமா?



இது பிரச்சினைக்குரிய கேள்வி. இருந்தாலும் நான் பேசுகின்றேன். 

உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன் ஒரு விடயத்தை நான் கூற வேண்டும். தென்னாசியாவில் சாதனை புரிந்த ஒரு வானொலி சேவை இருந்தது. அது பற்றி நான் கூற வேண்டும். வெறும் ஒரு மணி நேர நிகழ்ச்சியின் வாயிலாக, சில சர்வதேச வானொலிகளின் அடைவினை விஞ்சியது அந்த வானொலி சேவை. சமயத்தை இசை, நாடகம், கவிதை, சிறுகதை, கிராமியம், வரலாறு, அறிவியல், சமூக மேம்பாடு என வெற்வேறு மொழிகளால் அது பேசியது. 


அந்த ஒரு மணி நேரம் ஒலிபரப்பினால், எத்தனையே உலமாக்களை இனிமையான சொற்பொழிவாளர் களாக மாற்றினார்கள். பல நூறு கவிஞர்களை உருவாக்கினர். பலநூறு எழுத்தாளர்கள் உருவானார்கள். நீண்ட இசைப் பாரம்பரியம் உரு வானது. பல நூறு இசை, நாடக, கலைஞர்களும் உரைஞர்களும் உருவானார்கள். பல நூறு ஒலிபரப் பாளர்கள், தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.


கற்றுத் தேறிய சமூக விஞ்ஞானிகள் எல்லாம் அதில் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். பெண் கலைஞர்கள் எழுத்தாளர்கள், சிறு கதையா சிரியர்களை உருவானார்கள். ஒரு சிறுபான்மை சமூகத்தின் வாழ்க்கை முறை, வரலாறு, பண்பாட்டு பதிவு, மொழி என பலவும் பதியப்பட்டன. மொழி ரீதியான சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் நிகழ்சிகள் படைக்கப்பட்டன. முஸ்லிமல்லாதவர்களும் அதனை விரும்பிக் கேட்டார்கள். அந்த ஒரு மணி நேரத்தை வைத்து இந்தியாவைச் சேர்ந்த மூன்றுக்கும் அதிக மான கலாநிதிப் பட்ட ஆய்வுகள் வந்துள்ளன.

அக்கால அரசியல் இதற்கு சாதமாக இருந்தது. அந்த சேவைதான் 90 களுக்கு முந்திய முஸ்லிம் சேவை. அந்த நினைப் பில்தான் இப்போதும் மக்கள் முஸ்லிம் சேவையைக் கேட்கின்றார்கள்.  


இனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன். இப்போது பல மணி நேர இஸ்லாமிய ஒலிபரப்பு இடம் பெறுகின் றது. முஸ்லிம் சேவை நேரத்திலும் தமிழ் சேவை நேரத்திலும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றில், 78 வீதமானவை முற்றிலும் பயான் நிகழ்ச்சிகள். 


ஆன்மீக சொற் பொழிவுகள். இவை மக்களை வெறும் நுகர்வோராக மாத்திரம் மாற்றி வருகின்றன. அதிகரித்த உபதேசங்கள் மக்களை செயற்படுகின்றவர்களாக ஒரு போதும் மாற்றப் போவதில்லை. சமூகத்தில் சோம்பேறித்தனத்தை விதைக்கின்றன. செயலாற்றலைத் தூண்டாத ஆன்மீகத்தை விதைக் கின்றன. சிக்கல் நிறைந்த இந்த உலகில், மக்களை ஈர்க்க சொற் பொழிவுகள் எனும் உத்தி ஒரளவுக் குத்தான் தாக்கம் செலுத்த முடியும். எனவே இஸ்லாமிய எண்ணக்கருத் துக்கள் சொற் பொழிவுகளாக மாத் திரமன்றி, வேறு தாக்கமான வடி வங்களிலும் வழங்கப்பட வேண்டும். 
  

அத்தோடு, உள்ளடக்கத்திற்கும் விளம்பரங்களுக்கும் இடையில் மக்களின் ரசனை புண்பட்டுப் போயிருக்கின்றது. இது முதலில் சட்ட விரோதமானது. தவறை நாம் செய்வதால் யாரிடமும் நியாயம் கேட்க முடியாது. விளம்பரங்கள் வேண்டாம் என்பது எனது கருத் தல்ல. விளம்பரங்கள் நிழ்ச்சிகளின் தரத்தை பாதிக்க வேண்டாம் என் கின்றேன். நிகழ்ச்சிகளில் பல்வகையை அழிக்க வேண்டியதில்லை. விளம்பரங்களை வைத்துக் கொண்டே, நிகழ்ச்சிகளின் தரத்தைப் பேணும் உத்திகளை கையாளலாம். மணித்தியாலங்களை நிமிடங்களாக அரிந்து சில்லறை யாவாரம் செய்வதை விட, விளம்பரமும் உள்ளடக்கமும் தரத்தில் உயர்ந்திருக்கலாம். 

முஸ்லிம் ஒலிபரப்பைப் பொருத்தவரை, இது இலங்கை வானொலி நிர்வாத்தின் கடமையோ, அல்லது சந்தைப் படுத்தல் பிரிவின் கடமையோ மாத்திரமல்ல. இதில் முக்கிய பங்கு முஸ்லிம் சேவைக்கு உண்டு.

இப்போது கட்டணம் அதிகரிக் கப்பட்டதென்று உயர் நிர்வாகத்தில் குறை ண முடியாது. இதே நிர்வாகத்தின் கீழ்தான் தமிழ் சேவையும் இயங்குகின்றது. அங்கு இந்த மல்லுக்கட்டல்கள் இல்லை. முஸ்லிம் சேவையில் காரியங்களை நிர்வாகத்தினர் தீர்மானிக்கின்றார் கள் என்றிருந்தால் அதற்கு சகப்பான ஒரு உண்மை இருக்கின்றது. காலத்தின் தேவையை ஈடுசெய்யாமல், தனிப்பட்ட முதலீட்டலுக்காவும், அற்ப சுய புகழுக்காகவும் ஊடகத்தை பயன்படுதும் ஆர்வ த்தை சில முன்னைய அதிகாரிகள் வெளிப்படையாகக் காட்டினார்கள். முஸ்லிம் ஒலிபரப்புக்குப் பின்னால் அதிகம் சுய நலம் இருப்பதை நிர்வாகம் கண்டு கொண்டது. ரமழான் கால ஒலிபரப்புகளின் போது சிலர் ஒலிபரப்பினை புண் படுத்திய விதத்தை அவர்கள் பார்த்தார்கள். அங்கு இயக்கச் சண்டைகளை விலத்தி விட்டார்கள். நாம் எடுத் ததற்கெல்லாம் அரசியலை இழுப்பவர்கள் என்று அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தித்தான் விடயங்களை சாதிக்கின்றோம் என்றால் நாம் நமது தகுதியை இழந்து விட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும். இவை எல்லாவற்றையும் செய்து, நிர்வாகத்திடம் பிடியைக் கொடுத்து விட்டு இனி அவர்களை குற்றம் சொல்ல முடியாது. இப்போது புதிதாக முஸ்லிம் சேவையை பொறுப் பேற்றவர்களுக்கு ஒரு சுமூகமான சூழ்நிலை அமையவில்லை எனலாம். 


தயாரிப்பு உத்தி, நிகழ்ச்சி உள்ளடக்கம், பொது மக்களின் பங்கு பற்றல், நிகழ்ச்சிப் பல்வகைமை, காலப் பொருத்தமுடைமை, தயாரிப் பாளர்களின் ஒலிபரப்பு ஆற்றல், சமூகத்தின் சமூகப் பொருளாதார நகர்வு குறித்த பிரக்ஞை மற்றும் சிறந்த பின்னூட்டலுக்கான உத்திகள் என பலவற்றைப் பேசவேண்டும். அதற்கு இது பொருத்தமான இடமல்ல. இறுதியாக, நல்ல நிகழ்ச்சிகள் பல இப்போதைய முஸ்லிம் சேவையில் உள்ளன. அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் சூழ்நிலை மலினப்பட்ட, ஒழுங்கு முறை தவறிய விளம்பரங்களால் இல்லாது போயுள்ளன. 


வானொலியில் அதான் ஒலி பரப்பாவது பற்றி


உண்மையில் இதில் ஒரு பக்கத்தில் உள்ளது அரசியல் நலன். அடுத்த பக்கத்தில் உள்ளது பொருளாதார நலன். காசு கொடுத்து அதான் விற்கப்படுகின்றது என்பதுதான் உண்மை. இதில் சமூக நலன் என்று எதுவும் இல்லை. வானொலியில் அதான் ஒலிப்பது முஸ்லிம்களின் உரிமையல்ல. வானொலியில் அதான் ஒலிபரப்பாகவில்லை என்பதற்காக வழமையாக தொழுபவர்கள் தொழாமல் இருக்கப் போவது மில்லை. அதான் ஒலிக்கவில்லை என்பதற்காக நாம் எந்த உரிமையையும் இழக்கப் போவதும் இல்லை. 


இது முஸ்லிம்களை பெருமைப் படுத்துவற்கான ஒரு ஏற்பாடு. பெருமை மட்டும் போதுமானவர்களுக்கு இது பெரிய விடயம். அதனால், சகோரதர சமயத்தின் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அதான் ஒலிபரப்பாவதுண்டு. இது இஸ்லாத்தின் முன்மாதிரிக்கு இழுக்கா னது. இதனை முன்னர் ஒரு தடைவை சுட்டிக்காட்டிய போது நமது சொந்த விடயங்களை வெளியில் பேசக்கூடாது என்றார் ஒரு சகோதரர். நாம் கண்ணை முடிக்கொள் கின்றோம் என்பதற்காக மற்றவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல. 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சமாளித்துக் கொண்டு காப்பாற்ற வேண்டியதில்லை. பொருத்தமற்ற சினிமாப்பாடல்களுக்கு மத்தியில் சிலநேரம் அதான் ஒலிக்கும். இன்று அரசியல் மேடைகளில் இது பெரிய தலைப் பாகியிருக்கின்றது. இது முக்கியமானது - பெருமையை விரும்பு கின்றவர்களுக்கு - அதான் ஒலிக்கச் செய்து பெருமைப்படுத்தியவர்களுக்கு பள்ளிவாசல்கள் உடைக்கப்டுவதை தடுக்க முடியல்லை. இது ஒரு பகட்டு என்பதற்கு இன்னும் என்ன வேண்டும்.



 .

 


Wednesday, November 14, 2012

காயல் ஏ.ஆர் ஷேக் முஹம்மத். காயல் நகரின் மங்காத குரல்...




ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான் அந்த நாளையில்...

காயல் ஷேக் முஹம்மத் என்றதும் நினைவுக் வரும் பாடல் இது. சின்ன வயதில் அவரைப் போல உச்சஸ்தாயில் இப் பாடலை பாட முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். உச்சஸ்தாயிலும் இயல்பு மாறாமல் முகபாவனையை மாற்றி மாற்றி அவர் பாடும் அழகு மிகுந்த ரசிப்பிற்குரியது. அவரது குரலில் ஒரு துள்ளல் தன்மையுடன் கூடிய குதூகலம் இருக்கிறது. அப்பாடலோடு எம்மை லயிக்க வைக்கும் சக்தி அக்குரலுக்குள் மறைந்திருக்கிறது. அதுவே எம் எல்லோரையும் பரவசப்படுத்துகிறது.

தமிழ் நாட்டைவிட இலங்கையில் அவரின் பாடல்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஈ.எம். ஹனீபாவின் பாடல்களைப் போலவே இவரது பாடல்களும் இங்கு மிகவும் ரசித்துக் கேட்கப்படுகின்றது. இவரது பாடல்களில் பாடும் முறை, இசை, வரிகள் என அனைத்திலும் வேறுபாடுகள் இருக்கின்றன. 

ஷேக் முஹம்மத் அவர்கள் தமிழ் நாட்டில், காயல்பட்டினம் நகருக்கு அருகில் அமைந்துள்ள குலசேகரன் பட்டினம் கிராமத்தில் 1947 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதல் இசையில் ஈடுபாடு கொண்டவராக இருந்த இவரின் இசைத் திறமைகள் பள்ளிக்கூடத்து விழாக்களில் வெளிப்பட்டன. இவரது திறமைகளை நன்கு கவனித்த இவரது தந்தை அப்துர் ரஹ்மான் கர்நாடக சங்கீதம் பயில்வதற்கு திருச்சேந்தூரில் பொன்னுசாமி பாகவதரிடம் சேர்த்தார்.

அவரிடம் இரண்டு வருடம் படித்த பிறகு நாகர் கோவிலில் உள்ள இரணியல் சங்கீதப் பள்ளி செல்லப்பா பாகவதரிடம் 3 வருடம் முறையாக சங்கீதம் கற்றுத் தேர்ந்தார். 7 வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய ஏ.ஆர். ஷேக் முஹம்மத் அவர்கள் பல அரசியல் மேடைகளில், அறிஞர் அண்ணா, கலைஞர் என பலருக்காக பாடல்களைப் பாடி அவர்களிடமிருந்து பரிசில்களையும் நன்மதிப்பையும் பெற்றார்.

அரசியல் கட்சிகளை வளர்க்கவும், அவர்களது பிரச்சாரத்திற்கும் நாகூர் ஹனீபாவும் காயல் ஷேக் முஹம்மதும் பெரிதும் உழைத்திருக்கிறார்கள். இது போன்ற கலைஞர்களது பணி அரசியல் மேடையோடு முடிவடைவதுதான் சோகமானது.

சிரித்து வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் படத்தில் டீ.எம். சௌந்தராஜனுடன் சேர்ந்து உலகமெனும் நாடக மேடையில் பாடலைப் பாட எம்.எஸ். விஸ்வநாதன் சந்தர்ப்பம் அளித்தார். இப்படத்தின் மூலம் காயல் ஷேக் முஹம்மத் பிரபல்யம் ஆனார். எச்.எம்.வி. நிறுவனம் இவரை நாடியது. ஈச்சை மரத்து... பாடல் பல இலட்சம் ஒலி நாடாக்கள் விற்பனையாகின.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல நாடுகளில் இவரது இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இசைக் கச்சேரிகளை தனது வாழ்நாளில் இவர் நடாத்தி இருக்கிறார்.
ஈ.எம். ஹனீபா அவர்களுக்கு பாடல் எழுதிய நாகூர் ஸலீம் அவர்கள் 750 இற்கும் மேற்பட்ட பாடல்களை இவருக்காக எழுதியுள்ளார். 

நாகூர் ஸலீம் இயற்றிய கப்பலுக்குப் போனமச்சான்... எனும் கிராமிய பாடல் மரபில் அமைந்த பாடல் வெளிநாட்டில் இருக்கும் கணவனை நினைத்துப் பாடும் ஒரு மனைவியின் துயர் கீதமாகும். ரீ.கே. ராம மூர்த்தியின் இசையில் அமைந்துள்ள இப்பாடல் ஷேக் முஹம்மத்தின் மிகவும் புகழ் பெற்ற ஒரு பாடலாகும்.

1996 ஆம் ஆண்டு எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அழைப்பை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைகளில் பாடினார். முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைப் பாடல்கள் அடங்கிய புதிய வெளிச்சங்கள் ஒலி நாடாவின் பாடல்களைப் பாடினார்.


கட்சியின் வேகத்திற்கு அவரது பாடல்களும் உந்து சக்தியாக அமைந்தன. புதிய வெளிச்சங்கள் ஒலி நாடா வெளியீடு கொழும்பு எல்பிஸ்டன் அரங்கில் 19997 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஒரே நாளில் 25 இலட்சம் ரூபா வசூலை அது தேடிக் கொடுத்தது.

உச்சஸ்தாயில் பிசிறில்லாத தொனியில் அற்புதமாகப் பாடக் கூடிய ஒரு பாடகராக காயல் ஷேக் முஹம்மத்   இருந்தார். இதுதான் சினிமா இசை மேதைகளையும் அவர் பக்கம் ஈர்க்கச் செய்தது. இதனால் 20 க்கும் மேற்பட்ட படங்களில் பாடும் வாய்ப்பை இவர் பெற்றார்.

இவரது பாடலில் இருக்கும் துள்ளலும் வசீகரமும் எல்லோரையும் ஒரு நிமிடம் நிற்கவைக்கிறது. ஒரேபாடலில் கூட பல்வேறு இடங்களில் ஒரு புதிய ரசனையை அவர் வைத்திருக்கிறார். அது மெட்டிலும் அவரது குரலிலும் வெளிப்படும்போது நாம் ஒரு புதிய இன்பத்தில் பயணிக்க முற்படுகிறோம். மறுபடி ஒரு புதிய இன்பம் அடுத்த வரிகளில் எமக்குக் காத்திருக்கிறது. ஈ.எம். ஹனீபாவின் பாடல்களிலிருந்து இவரது பாடல்கள் வித்தியாசப்படும் புள்ளி இதுதான் என்பது எனது அபிப்பிராயம்.

ஈ.எம். ஹனீபாவின் மூன்று பாடல்களைக் கேட்கும்போது நான்காவது பாடலை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இவரது ஒவ்வொரு பாடலும் ஒரு புது அனுபவமாகவே இருக்கும். 

நாகூர் ஹனீபா, காயல் ஷேக் முஹம்மத் இருவருமே இஸ்லாமிய கீதத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்தாம். இருவரும் தமது இசை வடிவங்களால் தமிழ் பேசும் முஸ்லிம்களின் இதய அறை எங்கும் வாழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எமது இஸ்லாமிய கீதம் இவர்களது காலத்துடன் முற்றுப் பெற்று விட்டதுதான் மிகப் பெரும் சோகமாகும். புதிய திசை வழிகளில் அவை பயணிக்கவே இல்லை. தலைமுறை வழியாக புதிய போக்குகளில் அவை பயணிக்கவும் இல்லை. எமக்கான ஒரு பாடல் மரபை ஷேக் முஹம்மத்திடமிருந்தோ, ஈ.எம். ஹனீபாவிடமிருந்தோ நாம் வரித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், அது நடைபெறவில்லை. 1300 இற்கும் அதிகமான பாடல்களை ஷேக் முஹம்மத் பாடி இருந்தும் அனைத்துப் பாடல்களும் அவரது வீட்டில் இல்லாத சூழ்நிலையில்தான் நாம் இதனை பேசிக்கொண்டிருக்கிறோம்.

இவர்களின் இசை பங்களிப்பின் வாயிலாக தமிழகத்தின் இரண்டு இடுக்குகளில் சிதறி தனித்து வாழும் பாமர முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களை ஓரளவாவது அறியும் வாய்ப்பு இருந்தது.

அத்துடன் பெரும்பான்மை ஹிந்து சமூகத்தினரும் மெய் மறந்து தலையசைக்கும் வகையில் அமைந்திருந்த இஸ்லாமிய இன்னிசை பாடல்கள் வாயிலாக மதங்களுக்கிடையேயான ஒரு மௌனமான நல்லிணக்க உரையாடல் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தது.
அதே போல் இவ்விரு பாடகர்களின் பாடல் மரபிலிருந்து மொத்தமாக  நுண் கலை அல்லது கவின் கலைக்கான வாயில் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.அவ்வாறு  திறக்காமல் போனதற்கும் இவ்விருவரின் பாடல்களிலிருந்து  கிடைத்து வந்த பலன்கள் தொடராமல் நின்றதற்கும் இஸ்லாத்தை தட்டையாக விளங்கப்படுத்திய ஒரு சிலரின் அணுகுமுறையும் ஒரு காரணம் எனலாம்.

ஈச்சை மரம் இருக்கும் காலம் எல்லாம் ஷேக் முஹம்மத் அவர்களின் நினைவும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒரு கிராமத்தில் பிறந்து இசையினதும் பாடலினதும் வழியே அக்கிராமத்தின் குரலை காற்றெங்கும் பரவச் செய்து மனிதர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துக் கொண்ட காயல் ஷேக் முஹம்மத் அவர்கள் 2009.06.09 அன்று இந்த உலகில் இருந்து நிரந்தரமாக மறைந்து போனார்.

காயல் நகரத்தின் வீதிகளில் மட்டுமல்லாது தன் குரல் ஒலிக்கும் தேசத்தில் எல்லாம் தன் பாடல்களால் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நாம் வாழும் உலகத்தில் இன்று அவர் இல்லை. புதிய தென்றலுக்காக அவர் பாடிய பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகள் போல.

நாளைக்கும் நிலவு வரும்
நாம் இருக்க மாட்டோம்
நாளைக்கும் பூ மலரும்
நாம் இருக்க மாட்டோம்...

(இம்மாத வைகறை இதழில் வெளியானது.காயல் ஷேக் முஹம்மது பற்றிய தகவல்களைப் பெற்றுத் தந்த நண்பர் பஷீர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்)