Wednesday, August 27, 2014

நான் பிரகடனம் செய்கிறேன்













எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும் வரை
என்னிடம் ஒரு ஒலிவ்மரம்
எஞ்சி இருக்கும் வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு
ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும் வரை

ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்
ஒரு சுவர்
எஞ்சி இருக்கும் வரை

அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல்-அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை














 எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள் எனது கைகள்
எனது தண்ணுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்.

சுதந்திரமான மனிதர்கள் பெயரால்
தொழிலாளர்கள் மாணவர்கள் கவிஞர்கள் பெயரால்
நான் பிரகடனம் செய்வேன்

கோழைகள் சூரியனின் எதிரிகள்
அவமான ரொட்டியினால் ஊதிப் புடைக்கட்டும்
நான் வாழும் வரை எனது சொற்களும் வாழும்
சுதந்திரப் போராளிகளின் கைகளில்
ரொட்டியாயும் ஆயுதமாயும்
என்றும் இருக்கும்.

- மஹ்மூத் தர்வீஷ்



No comments:

Post a Comment