Thursday, August 7, 2014

முஸ்லிம் பெண்களின் ஆடை- கறுப்பிலிருந்து கலரை நோக்கி… உரையாடலுக்கான ஒரு குறிப்பு



முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்த பற்றிய சர்ச்சைகள் உலக அளவில் இருந்து வருகின்றன.உலகில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் பல்வகை ஆடைகளைகளை அணிகின்றனர்.சிலர் தமது மதம்,கலாசாரம் சார்ந்து அதை அமைத்துக் கொள்கின்றனர்.இன்னும் சிலர் பிற கலாசாரங்களைப் பின்பற்றி அதைத் தெரிவு செய்து கொள்கின்றனர்.

ஆடை என்பது அவ்ரத்தை மறைத்தல், ஒரு மனிதன் தன்னை அலங்கரித்துக் கொள்ளல் ஆகிய இரண்டு நோக்கங்களுக்காக அணியப்படுவதாக அடையாளப்படுத்தலாம்.இதனால் நாகரிகமான தோற்றமும் கண்ணியமும் மனிதனுக்குக் கிடைக்கின்றது.இஸ்லாம் அந்த கண்ணியத்தை,கௌரவத்தை மனிதனுக்கு வழங்க விரும்புகிறது.எனவேதான் இஸ்லாம் ஆண்களும் பெண்களும் தாம் மறைக்க வேண்டிய பகுதிகளைத் தெளிவாக வரையறை செய்துள்ளது. 

ஆடைத் தெரிவைப் பொறுத்தளவில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அபாயா,ஷல்வார்,ஸாரி போன்ற ஆடைகளைப் பெரிதும் பயன்படுத் துகின்றனர்.முகத்தை மறைத்து ஆடை அணியும் பெண்களும் கணிசமான அளவு இருக்கின்றனர்.

முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றி எப்போதும் ஐயங்களும் விகாரமான விளக்கங்களும் பிழையான புரிதல்களும் இருந்தே வருகின்றன.இது குறித்த வாத விவாதங்கள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் இல்லாமல் இல்லை..எழுதப்படும் இச் சிறு குறிப்பு பெண்களின் ஆடை பல்வேறு நிறங்களில் அமையலாம் என்பதை வலியுறுத்தவே விரும்புகிறது.

மேற்கின் ஆடை குறைப்புக் கலாசாரத்திற்கு நேர் எதிராக முஸ்லிம் பெண்களின் ஆடை இருக்கிறது.முஸ்லிம் பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ கறுப்பு நிற ஆடைகளை குறிப்பாக அபாயாக்களை அணியும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். சிலர் தற்போது கறுப்பு தவிர்ந்த ஏனைய நிறங்களில்ஆடை அணிய ஆரம்பித்திருப்பதையும் நாம் அவதானிக்கிறோம்.

ஹிஜாப் அணியும் வழக்கம் எமது பெண்களுக்கு மத்தியில் கணிசமான அளவு அதிகரித்து வரும் சூழலில் அதற்கெதிரான வாதங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணமே உள்ளன.

கறுப்பு நிறத்தினாலான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் மார்க்கத்தில் இல்லை.அனைவரும் ஏன் கறுப்பு நிறத்தைத் தெரிவு செய்கின்றனர் என்ற கேள்வி இயல்பாக ஒருவருக்கு எழவே செய்கின்றது.எனவே முஸ்லிம் சமூகமும் பெண்களும் கறுப்பு நிறம் தவிர்ந்த ஏனைய நிறங்களிலும் பெண்களின் ஆடை அமைவது குறித்து ஏன் சிந்திக்கக் கூடாது? முஸ்லிம் பெண்களின் ஆடைகள்,துணிவகைள் இறக்குமதி செய்பவர்கள்,ஆடை தைப்பவர்கள் என இத் தொழிற்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தில் கூடிய கரிசனை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment