Tuesday, December 18, 2012

மரங்கள்

வைக்கம் முஹம்மது பஷீரின் இக்கதையை எட்டு வருடங்களின் பின்னர் மறுபடியும் வாசித்த போது உங்களுடன் பகிராமல் இருக்க முடியவில்லை


ஒரு அழகிய மரத்தைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன். குழந்தைகளெல்லாம் இப்படிப் பக்கத்தில் வந்து இருங்கள். என்னால் சத்தம் போட்டுச் சொல்ல முடியாது. வயசு ரொம்ப ஆயிருச்சல்லையா சீக்கிரம் செத்துப் போயிருவேனென்று தோன்றுகிறது. இதில் ஒன்றும் சங்கடமில்லை. நீங்கள் எல்லோரும் தோன்றுவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே நான் இங்கே வந்துவிட்டேன் என்று ஞாபகமிருக்கட்டும். என்றாலும், அழகான இந்த உலகத்தை விட்டுப் பிரிய கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கிறது. குழந்தைகளே அழகாக இருப்பதற்கு என்ன காரணமென்று, பர்வதங்கள், மலைகள், குன்றுகள், நதிகள், வனங்கள், பாலைவனங்கள், சமுத்திரங்கள், உயிரினங்கள் இவைகளெல்லாம் விட ரொம்ப ரொம்ப அழகான விஷயம் எதுவென்று தெரியமா? மரங்கள். இவைகளெல்லாம் கடவுளின் தனிப்பட்ட அனுக்கிரகம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனிதர்களை விட மேலானவை மரங்கள். எனக்கு இந்த உலகத்திலுள்ள எல்லா மரங்களைப் பற்றியும் உங்களோடு சொல்ல வேண்டும் என்றிருக்கிறது. ஆனால், எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏராளமான மரங்களைப் பார்த்திருக்கிறேன். நானே நிறைய நட்டி வளர்த்துமிருக்கிறேன். நீங்கள் கவனமாயிருந்தால் நான் இப்போது சொல்லப் போகிற கதையை விட அழகான கதைகளை நீங்களும் சொல்ல முடியும்.

அழகான ஒவ்வொரு கதைதான் ஒவ்வொரு மரமும்.
நீங்கள் ஒரு மரத்தைத் தொடும்போது பெரும்பாலும் ஒரு மனிதரைத் தொடுவதாகவே நினையுங்கள்.

உங்களால் பார்க்கவியலாத ஒரு மனிதனின் உழைப்பு ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும் இருக்கிறது.

ஒரு மரம் நட்டு வளர்ப்பது ஆயிரம் புண்ணிய ஸ்தலங்களின் தரிசனத்தை விடவும், ஆயிரமாயிரம் பிரார்த்தனைகளை விடவும் மேலானது. நான் சொல்கிற இந்தக் கதையில் நிறைய மகாத்மாக்களுண்டு. இவர்களில் யதார்த்த மகாத்மா யாரென்று நீங்கள் கண்டு பிடியுங்கள்.

கதை இதோ வருகிறது. ஒரு இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பு கதை துவங்குகிறது. அன்று இந்தியா ஒன்றாகவிருந்தது. பாகிஸ்தான் உண்டாகவில்லை. இந்தியாவில் சில பகுதிகளில் சுற்றி கேரளத்திற்கு வந்து ஒரு நகரத்தில்  இலக்கியவாதியாக, வசித்து வருகிறேன். 

பாதையருகில் உள்ள ஒரு சிறய வீடு. அதன் மூலையிலுள்ள ஒரு சிறிய அறை, அதில் பெட்டி, படுக்கை, ஒரு சாய்வு நாற்காலி, ஷூஸ், ஒரு பிரிமஸ்டவ், கொஞ்சம் பாத்திரங்கள் எல்லாம் நானே செய்து கொள்வேன். சமையல், சவரம், துணி துவைத்தல், ஏதோ செய்து சாப்பிடுவேன். நிறைய எழுதுவேன். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவில்லையே. ஒரு பைப்பு.

இந்த அறைக்கு அடுத்த ரோட்டிலிருந்து அக்கம் பக்கத்திலுள்ள வீட்டுக்காரர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, ஆனால், என்னுடைய முக்கியமான வேலை பைப்பு பூட்டுவதுதான். யாராவது தண்ணீர் எடுத்துவிட்டு பைப்பை பூட்டாமல் போவார்கள். தண்ணீர் சர்ரென்று வீணாக ஒழுகிக் கொண்டிருக்கும். நான் எழுந்து சென்று பைப்பைப் பூட்டுவேன். இந்த பைப்பு பூட்டலை ஒரு நாளைக்கு பத்து நாற்பது தடவை செய்ய வேண்டியிருக்கும். சில நேரம் பாதி ராத்திரியில் உறக்கதிலிருந்து எழுந்து சென்று பூட்டிவிட்டு போவேன். இது ஜனங்களுடைய கவனக் குறைவால் ஏற்படுகிற நிகழ்ச்சி. கடவுளின் மகத்தான கருணையல்லவா தண்ணீர். இது எல்லா உயிரினங்களுக்கும் மரங்களுக்கும் வேண்டும். இதை வீணாக்கக் கூடாது. 

இந்த அறிவு ஏன் ஜனங்களுக்கு உண்டாகவில்லை. இதைப்போல, குப்பை கூளத்தை அள்ளி சாலையில் போடுவதும் சாலையில் மலஜலம் கழிப்பதும் செய்யாமலிருக்க வேண்டும். வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இங்கிலீஷில் ஏதோ சொல்வார்களே “சிவக் சென்ஸ் என்றோ, வேறோ, அது நமக்கு கொஞ்சம்கூட இல்லை. (இன்று பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் போய் விட்டது.

 இந்தியா சுதந்திரமடைந்து விட்டது. நாம் தான் நம்முடைய நாட்டை ஆட்சி செய்கிறோம். என்றாலும் பொதுச் சொத்துக்களை நஷ்டப்படுத் தாமலிருக்கவும், வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும் நாம் படிக்கவில்லை. மனிதன் மாறாமல், கவர்ன்மெண்ட் மட்டும் மாறியதனால் பெரிய காரியங்கள் எதுவும் நடக்கப் போவதில்லை)
அந்த பைப்பு காரணமாய் கடைசியில் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. உறக்கத்திலிருந்து திடுக்கிட்டெழுந்து நான் காதைத் தீட்டிக் கொண்டே கிடப்பேன். எழுந்து சென்று பைப்பைப் பூட்டி வந்து படுப்பேன். உறக்கம் வருவ தில்லை. இந்த முட்டாள் மனிதர்கள் அதைப் பூட்டி விட்டுப் போகக் கூடாதா?

அப்படி ஒரு கடுங்கோடை காலம் வந்தது. மத்தியானம் ரெண்டு மணியிருக்கும். வழக்கம் போல யாரோ ஒரு நீசன் பைப்பைத் திறந்து விட்டான் ஒரு வேளை நீசியோ?

நான் அசையவில்லை. வழியில் போகிறவர்களில் யாராவது பகுத்தறிவுள்ளவன் இருக்கிறானா என்று பார்க்கலாம். திறந்த பைப்பிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆட்கள் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் கவனிக்கவில்லை. நான் அந்த மனிதர்களை எண்ணத் தொடங்கினேன். ஒன்று... இரண்டு.. அப்படி இருபத்தியொரு பேர்களை எண்ணினேன். அவர்களெல்லாம் கடந்து போய்விட்டார்கள். அப்போது தூரத்திலிருந்து இருபத்தியிரண்டாவது ஆள் வந்து கொண்டிருந்தான். வெளி மாநிலத்தவராக இருக்க வேண்டும். நடை ரொம்ப வேகமாயிருந்தது. தலையில் ஒரு தொப்பி, காக்கிச்சட்டை, காக்கி    ஹாஃப் டிரவுசர்ஸ், கால்களில் கான்வாஸ் ஷூ, முதுகில் ஒரு பெரிய காக்கி கிட்பேக், கையில் ஒரு தடி, தாடி மீசை வளர்ந்திருந்தது.

அந்தப் பயணி தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த பைப்பிற்குப் பக்கத்தில் நடந்து போய் விட்டார். இல்லை. அவர் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பின்பு பைபின் அருகில் சென்று பைப்பைப் பூட்டினார். பின்பு ஏதோ யோசித்தார். ஒரு நிமிஷம் தயங்கி, தடியை கீழே வைத்திருந்த கிட்பேக்கின் முதுகில் ஹாட்டுக்கு அருகில் வைத்தார். தலை முழுவதும் வழுக்கை, தலையைத் தடவிக் கொண்டு ஒரு நிமிஷ நேரம் நின்றார். சுற்றிலும் பார்த்துவிட்டு எதிரேயுள்ள கொல்லைப் பக்கமாய் போனார். 

அங்கே ஒரு அஞ்சு தென்னையும், நிறைய குறும்புதர்களும் மண்டியிருந்தன. அங்கே சென்று அவர் ஒண்ணுக்கிருந்தார். அவர் வேகமாய் திரும்பி வந்து கிட்பாக்கைத் திறந்து அதிலிருந்து அலுமினியப் பாத்திரத்தை எடுத்து பைப்பைத் திறந்து குளிர்ந்த நீரைப் பிடித்துக் கொண்டு கொல்லைப் பக்கமாய் போனார். அவர் அந்த வாடி வதங்கிய செடியின் அருகில் அமர்ந்து அதனைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டிப் பாத்தி கட்டி, அந்தச் செடிக்குத் தண்ணீர் விட்டார். ஒரு மூன்று தடவை அவர் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் ஊற்றினார். பின்பு வந்து ஷூஸ் கழற்றி கைகால் முகம் கழுவினார். 

நான் எழுந்து அவருக்கு முன்பாகவே கொல்லைப் பக்கம் சென்று அவர் தண்ணீர் ஊற்றிய செடியைப் பார்த்தேன். ஒரு சிறிய கன்று, ரெண்டு மூன்று கிளைகளிருந்தன. நான் அவருக்கருகில் போய் நின்றேன்.
இந்த மகாத்மா யாரு?

அவர் ஷூஸ் மாட்டி, ஒரு பீடி கொளுத்திப் புகை விட்டுக் கொண்டே என்னைப் பார்த்தார். பின்பு சொன்னார்.

“ஏதோ ஒரு மகாத்மா மாம்பழம் தின்றுவிட்டு கொட்டையை எறிந்து வளர்ந்ததுதான் அந்த மாங்கன்று. அவர் மகாத்மாவேதான். 

இல்லையென்றால் அதைக் கொல்லைப் பக்கமாய் எறியாமலிருந்திருப்பார். அநாதையான ஒரு குழந்தையைப் போல ஆதரவில்லாமல் அது மடியத் தொடங்கியிருந்தது

நான் கேட்டேன், “நீங்கள் யார்?
அவர் சொன்னார், “சுபராம், ஒரு ஊர் சுற்றி ஒன்பது வருஷமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். கேரளம் சுற்றிப் பார்த்து விட்டு சிலோனுக்குப் போக வேண்டும்.

நான் சொன்னேன். “கஷ்டமில்லையென்றால் என் சார்பில் ஒரு டீ குடித்து விட்டுப் போகலாம்.

அதிர்ஷ்டவசமாய் என்னிடம் அப்போது ஒன்பது ரூபாய் இருந்தது. அவர் மூட்டை முடிச்சுகளுடன் என்னுடைய அறைக்கு வந்தார். நான் அவரை என்னுடைய சாய்வு நாற்காலியில் உட்கார வைத்தேன். நான் ஒரு பத்திரிகைத் தாளை விரித்து அதில் அமர்ந்தேன். பின்பு ஸ்டவ்வும், பாத்திரமும் எடுத்தேன். ஸ்டவ் பற்ற வைத்தேன்.

நான் சொன்னேன், “உங்களுடைய பாத்திரத்தில் நீங்களே தண்ணீரெடுத்து ஸ்டவ்வில் வையுங்களேன்.

சுபராம் கேட்டார். “உங்களுடைய பாத்திரத்தில் என்ன கோளாறு?
நான் சொன்னேன். “கோளாறு இருக்கு, இது ஒரு முஸ்லிம் உபயோகப்படுத்துகிற பாத்திரம். அந்த முஸ்லிம் நான்தான் பேர் பஷீர். வைக்கம் முகமது பஷீர் என்று சொல்வார்கள்.

இத்தனையும் சொல்வதற்குக் காரணமிருக்கிறது. நான் இந்த சுபராமினுடைய நாட்டில் வசித்து வருகிறேன். அங்கே இந்துவும், முஸ்லிமும் கீரியும் பாம்பும் போல இருக்கிறார்கள். அங்கே ரெயில்வே ஸ்டேஷன்களில் “இந்து தண்ணீர் “முஸ்லிம் தண்ணீர்இருக்கிறது. இந்து தொட்டதை முஸ்லிமும், முஸ்லிம் தொட்டதை இந்துவும் சாப்பிட மாட்டார்கள்.

சுபராம் கேட்டார், “பஷீர் சாகிப் என்ன வேலை செய்கிறீர்கள்?
நான் சொன்னேன். பெரிய வேலையொண்ணுமில்லை. கொஞ்சம் கதைகள் எழுதுவேன்.

“இலக்கியவாதி இல்லையா?

நான் சொன்னேன், “இலக்கியவாதியில்லை. இலக்கியத்தைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது.

“அப்புறம் என்ன தெரியுமா?

நான் சொன்னேன், “எனக்கெதைப் பற்றியும் எதுவும் தெரியாது. கொஞ்சம் கதைகள் எழுதுவேன்.

“எதைப் பற்றியும் எதுவும் தெரியாதென்றால் எப்படி எழுதுகிறீர்கள்?

நான் எழுதுவதை யார் வேண்டுமானாலும் எழுத முடியும். கொஞ்சம் அனுபவங்கள் வேண்டும். எனக்குத் தாராளமாய் அனுபவங்களிருக்கின்றன. நானும் உங்களைப் போல ஒரு ஊர் சுற்றியாய் இருந்திருக்கிறேன். அனுபவங்களிருந்தால் எந்த மடையனும் கதைகள் எழுத முடியும்.

பின்பு நாங்கள் அப்படியே பேசிக் கொண்டிருந்தோம் ரவீந்திரநாத் தாகூர், காந்தி, முகமது அலி சர்தார். பகத் சிங், மௌலானா அப்துல் கலாம் படேவ், பிரிட்டிஷ் கவர்ன்மெண்;ட், பாகிஸ்தான் வாத் என்றில்லை ஏகப்பட்ட மனிதர்களைப் பற்றியும், ஏகப்பட்ட ராஜ்யங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டவ்வில் சும்மா எரிந்து தீர்ந்து ஸ்டவ் கெட்டுப் போன விஷயம் தெரிந்ததே திடீரென அந்த இரைச்சல் நின்ற போதுதான். மௌனமாக நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தோம்.

“அதோ போகிறது டீஆகாரம் சாப்பிட்டால் என்ன?

நான் சொன்னேன். “நாம் ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாம்.

சுபராம் சொன்னார், “என்னுடைய பையில் கோதுமை மாவும், கல்லும் இருக்கின்றன. சப்பாத்தி செய்யலாம். சப்பாத்தி செய்தது நான் தான். பச்சைமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பச்சைத் தணணீர் கொஞ்சம் ஊற்றினேன். பின்பு கைவிரல்களினால் மாவைப் பிசைந்து பதமாக்கி சிறிய உருண்டைகளாக்கி, ஒரு தாளில் மாவு போட்டு ஒரு சிறிய தடியினால் உருட்டிப் பரத்தி அவருடைய கரியடுப்பில் கல்லை போட்டு சப்பாத்தி சுட்டேன். அவர் என்னுடைய ஸ்டவ்வில் என்னுடைய பாத்திரத்தில் பருப்புப் போட்டு அடுப்பில் வைத்தார். கூடவே கொஞ்சம் பச்சை மிளகாயும் போட்டார். பருப்பு வெந்தபோது உருளைக் கிழங்கும் வெங்காயமும், மிளகாய்த் தூளும் கொஞ்சம் கொத்தமல்லிப் பொடியும், சிறிது மஞ்சள் பொடியும் போட்டு எல்லாம் நன்றாக வெந்த பிறகு, நான் கீழேயிறக்கி ஒரு கரண்டி தேங்காயெண்ணெய் விட்டேன். கொஞ்சம் கறிவேப்பிலையும் போட்டேன். நாங்கள் சப்பாத்தியை தின்று விட்டு தாராளமாய் தண்ணீர் குடித்துவிட்டு ஊர் பார்க்கப் போனோம். நாங்கள் நகரத்தில் அங்குமிங்கும் நடந்த பின்பு நகரத் திற்கு வெளியிலுள்ள ஒரு மரத்தினடியில் சென்று அமர்ந்தோம்.

(கே.எம். சந்தோஷ் எடுத்து அனுப்பிய கதை
நன்றி : சமிகாலிக மலையாளம்.
வாரிக, ஜூலை 98)
வைகறை-2005



 

No comments:

Post a Comment