Tuesday, October 29, 2013

அன்றாட விவகாரங்களிலிருந்து வலுவான செய்தியைச் சொல்லவே நான் முயற்சிக்கிறேன்.-அவன்த ஆடிகல



அரசியல் கேளிச் சித்திரங்களுக்கு உலக அளவில் பெரிதும் வரவேற்பு காணப்படுகிறது.சமகால அரசியலை கேலிச் சித்திரமே ஆழ்ந்த விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது.இலங்கையின் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர் அவன்த ஆடிகல தனித்துவமான கேலிச்சித்திரங்களை வரைபவர்.சிறந்த கார்டூனுக்கான விருது இருமுறை இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.“அத“ மற்றும் டேய்லி மிரர் பத்திரிகையில் ஓவியராகப் பணியாற்றுகிறார்.


சந்திப்பு- இன்ஸாப் ஸலாஹுதீன்,அஷ்கர் தஸ்லீம்

உங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

நான் சல்கல எனும் கிராமத்தைச் சேர்ந்தவன்.விஞ்ஞானத் துறை கிடைத்து பல்கலைக் கழகத்திற்குச் சென்றேன்.ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை.விஜய பத்திரிகை நிறுவனத்தில் தளக்கோள வடிவமைப்பானராக இணைந்தேன்.பாடசாலைக் காலத்திலிருந்தே ஓவியத்தில் ஈடுபாடும் பிடிப்பும் இருந்தது.ஆனால் அதனை முறையாகக் கற்கவில்லை.விஜே சோம,தர்ஷன கருணாதிலக,ஹினே ஹெட்டிகொட போன்ற பிரபலமானவர்களின் கார்டூன்களைப் பார்த்து வரைந்துதான் கற்றுக் கொண்டேன்.அவர்களை நன்றியோடு இந்த இடத்தில் நினைவு கூர்கிறேன்.

உங்களது முதல் கார்டூன் குறித்து நினைவை மீட்டும் போது எப்படி இருக்கிறது

அது மறக்க முடியாத அனுபவம்.போர் முடிந்து ஜனாதிபதி பயங்கரவாதம் எனும் மரத்தை வெட்டுவது போலவும் அதன் கீழ்ப் பகுதியில் புதிய கிளைகள் முளைப்பது போலவும் இருக்கும்.இன்றைக்கும் அது பொருந்தும் என்று நினைக்கிறேன்.யுத்தம் முடிவடைந்து விட்டது என்று கூறினாலும் யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் முடிந்து விட்டனவா என்று தேடிப்பார்த்து அவற்றை தீர்க்கின்ற வேலைத்திட்டங்கள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை.

கேலிச்சித்திரத்தின் வரலாறு எப்போது ஆரம்பமானது?

தனை அமெரிக்காவில் பென்ஜமின் ப்ரான்க்ளின்தான் ஆரம்பித்து வைத்தார் என்று  நினைக்கிறேன்.இன்று உலகில் பத்திரிகைத் துறையில் முக்கியமான ஒரு அம்சமாக இது மாறியிருக்கிறது.பிற நாடுகளில் இது நிறையவே வளர்ச்சியடைந்திருக்கிறது.
இலங்கையில் ஒப்ரிகோலட் எனும் பேர்கர் இனத்தைச் சேர்ந்தவர்தான் இத்துறையை பிரபலப்படுத்தினார்.பின்னர் விஜே சோம போன்றவர்கள் குறியீடுகளுடன் கூடிய இலங்கைக்குரிய தனித்துவ அம்சங்களை இணைத்து இதனை உயர்ந்த இடத்திற்கு நகர்த்தினார்கள்.தாஸ ஹபுவலான போன்றவர்கள் இன்றை காலத்தில் குறியீடுகளுடன் மேலும் இதனை மெருகூட்டியிருக்கிறார்கள்.

அரசியல் பிரபலங்களையே நீங்கள் கேலிச் சித்திரங்களில் பெரிதும் கையாள்கிறீர்கள்.இது உங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதில்லையா?

நாம் ஒரு சித்திரம் வரையும் போது பயன்படுத்தும் அரசியல் கதாபாதிரத்தினூடாக பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையே காட்சிப்படுத்துகிறோம்.கீழ்த்தட்டுமக்களின் பார்வைக் கோணத்தில் இருந்துதான் அது அமைகின்றது.அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விடயங்கள் இங்கு இடம்பெறுவதில்லை.இந்தச் சித்திரங்களினூடாக சமூகத்திற்கு நல்ல விடயங்கள் சொல்லப்படுகின்றன என்பதை எங்களுக்கு நிறுவ முடியுமாக இருக்க வேண்டும்.எனவே அச்சுறுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கருதுகிறேன்.ஆனால் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் இல்லாமலும் இல்லை. 

ஒரு கேலிச்சித்திரத்திற்கான கருத்துருவாக்கம் எப்படி இடம் பெறுகிறது.ஒரு சித்திரத்திற்கான ஐடியா எவ்வாறு தோற்றம் பெறுகிறது?

இது ஒவ்வொருவரைப் பொருத்து மாறுபடும்.நான் காலையிலே பத்திரிகைகளைப் பார்ப்பேன்.அப்போது எனக்கு மனதுக்குள்ளே ஒரு கருத்து உருப்பெறும்.ஒருவிடயத்தை தவறு என்றோ பொதுமக்களை ஏமாற்றும் விடயம் என்றோ உள் மனது சொல்லும்.அதுதான் சித்திரமாக வடிவமெடுக்கிறது.கவிஞன் கவிதை மூலம் வெளிப்படுத்துகிறான். எழுத்தாளன் தன் எழுத்தினூடாக வெளிப்படுத்துகிறான்.ஓவியன் தன் ஓவியத்தினூடாக வெளிக்காட்டுகிறான்.அண்மையில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை குறித்து ஒரு சித்திரம் வரைந்தேன்.அரசியல் வாதிகளின் கபட செயற்பாடே எனக்குள் இந்தச் சித்திரத்தை வரவழைத்தது.



இதற்கு விசாலமான அறிவு தேவைப்படுகிறதா?

வாசிப்பதுதான் பிரதானம் எனக் கருதுகிறேன்.அரசியல் வரலாறு அரசியல் போக்கு என்பன குறித்த ஆழமான புரிதல் நல்ல கருத்து வெளிப் பாடுகளுக்கு இட்டுச் செல்லும்

கருப்பு வெள்ளைச் சித்திரங்களே வலிமையானவை என்ற ஒரு கருத்து நிலவுகிறது அல்லவா?நீங்கள் வர்ணச் சித்திரங்களையே வரைகிறீர்கள்.

கருப்பு வெள்ளைதான் சிறந்தது என்ற ஒரு கருத்து நிலவியது.ஆனால் இன்று வர்ணங்களில் அச்சிடப்படும் அளவு அதிகரித்துள்ளது.மேற்கு நாடுகளில் வர்ணச் சித்திரங்களே வரையப்படுகின்றன.கருப்பு வெள்ளைச் சித்திரங்கள் அங்கு இல்லை.இன்று இணையத்தின் வருகையும் இதன் தேவையை அதிகப்படுத்தியுள்ளது.வர்ணச் சித்திரங்கள் செய்தியை வலுவாகவும் கவர்ச்சியகவும் கொடுக்கின்றன.எனவே இன்றைய உலகில் வர்ண ஓவியங்களுக்கு கூடுதல் மவுசு இருக்கின்றது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை கேலிச் சித்திரங்கள் எந்த நிலையில் இருக்கிறது?

இலங்கையில் எல்லாத் துறைகளிலும் போல இத் துறையிலும் நிறைய முன்னேற வேண்டிய தேவை இருக்கிறது.இங்கு நல்ல கருத்துக்கள் இருந்தாலும் சித்திரம் வரையும் தரம் உயர்வான க்லஸிக் மட்டத்தில் இல்லை.அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளில் இதற்கென்று டிப்ளோமா. டிக்ரி கற்கைகள் இருக்கின்றன. அதற்கான வாய்ப்புகளே இல்லை அல்லவா?

ஒரு கேலிச் சித்திரத்தை பாரக்கும் முதல் கனமே எமக்குள் ஒரு சிரிப்பு ஏற்படுகிறது.அது ஏன்?

கேலிச்சித்திரங்களில் இருக்க வேண்டிய முதன்மை அம்சங்களுள் நகைச் சுவையும் ஒன்று என்று கூறுவார்கள்.அந்த நகைச் சுவையோடு சேர்த்து ஒரு பலமான செய்தியும் இருக்க வேண்டும்.ஒரு சில நொடிகளில் அதனைப் புரிந்து கொள்ள முடியுமாக இருக்க வேண்டும்.வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடிய சித்திரத்திரங்களை வரைய நான் விரும்புவதில்லை. சித்திரத்தின் ஊடாக சொல்லும் செய்தியே பலமானது.

உங்களது கேலிச் சித்திரங்களில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன?

நான் சித்திரத்தை விட கருத்தை பெறுவதற்கே அதிகம் உழைக்கிறேன்.அதற்காக நிறை முயற்சிப்பேன்.சில போது குறியீடுகளால் மாத்திரமே வரைந்திருக்கிறேன்.அன்றாட விவகாரங்களிலிருந்து வலுவான செய்தியைச் சொல்லவே நான் முயற்சிக்கிறேன்.
இனவாதம், மத வாதம் போன்றன உலகில் தோற்றம் பெருகின்றன.இவற்றை அரசுகள் தமது பொருளாதாரம் மற்றும் இதர பிரச்சினைகளை மறைக்க போஷித்து வளர்ப்பதுண்டு. ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்வதில்லை. ஆனால் நான் இவற்றுக்கு எதிராக வரைய நினைத்தேன். வரைந்தேன்.ஒவ்வொரு மதத்திலும் அடிப்படைவாதம் இருக்கின்றது.ஆனால் அவர்கள் தத்தமது மதங்களில் இருக்கும் தீவிர நிலைகளைக் களையவே முற்பட வேண்டும் அதைவிடுத்து அடுத்தவர்களின் மதவிடயங்களில் சீர்திருத்தம் செய்ய முயற்சிக்கக்கூடாது.

ஒரு சித்திரம் வரையும் போது உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும்.மக்களும் அதே கருத்தைப் புரிந்து கொள்வார்களா?

இதுதான் எங்களுக்கு உள்ள பிரதான சவால்.நாங்கள் உணரும் கருத்தை முடியுமான அளவு சித்திரத்தில் கொடுக்கவே முயற்சிக்கிறோம்.அக் கருத்து கொடுக்கப்பட்டால்தான் எமது சித்திரம் வெற்றி பெரும்.சிலபோது எங்கள் கார்டூன்களை பிழையாகவும் புரிந்து கொள்ள இடமிருக்கிறது.இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.

இறுதியாக...

அன்று முதல்  இலங்கையில் இருக்கின்ற அரசுகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனைத் தீர்க்க முற்படவில்லை.தமது அதிகாரத்தைப் பாதுகாக்க கொள்ளையர்களையும் இனவாதிகளையும் மதவாதிகளையும் வைத்துக் கொண்டார்கள். ஊடகங்களும் இவற்றை நெறிப்படுத்தத் தவறி விட்டன.சீரழிந்த ஒரு சந்தியில் நாம் நிற்கிறோம்.





No comments:

Post a Comment